கணவர்களைத் திருடும் நடிகைகள்..! - கோடம்பாக்கம் சர்வே

24-09-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தில் இன்றைய முக்கியப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, மின் தடைப் பிரச்சினை, அயோத்திப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை, எதிர்வரும் தேர்தல் நிலவரம் - இது பற்றியதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள். அது பிரபுதேவா-நயன்தாராவின் முறைப்படியான திருமணம் நடந்தேறுமா என்பதுதான்..!

முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம் சொல்லும் அளவுக்கு பத்திரிகைகள் இதில் சட்ட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கின்றன. அந்த அளவுக்கு தேசிய பிரச்சினையாகிவிட்டதுபோலும்.

நான் ஏற்கெனவே இந்தப் பதிவில் எழுதியிருந்த பாலிவுட் கட்டுரைக்கு அடுத்து உடனேயே இதனை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல தகவல்கள் உடனேயே கிடைக்கவில்லை என்பதால் சிறிது தாமதமாகிவிட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்..!

பல பத்திரிகைகளைப் பார்த்தும், புரட்டியும், படித்தும்.. பத்திரிகைத் துறை நண்பர்கள், சினிமா துறை பெரியவர்களைச் சந்தித்துப் பேசியும் சில தகவல்களைப் பெற முடிந்தது. ஆனால் அவர்கள் சொன்னது முழுவதையும் எழுத முடியாத சூழல். பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பக்கம், பக்கமா எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பதால் அதிகமாக இழுக்கக் கூடாது என்பதால் மையக்கருத்தையும் சுருக்கமாகவே தந்திருக்கிறேன்.

இது நாட்டுக்கு ரொம்ப அவசியமா என்று கேட்பவர்கள் தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். இதனைத் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.. பிழைகள், குறைகள், குற்றங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்..!

1. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம்

‘வசந்தசேனா’ என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. தன்னைப் போலவே ஈகை குணத்துடன் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பழக்கமே இல்லாத மதுரம்மாவின் குணநலன்களே, என்.எஸ்.கே.வுக்கு அவர் மீது பிடிப்பு வரக் காரணமாக இருந்தது.


அப்போது ஏற்கெனவே என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருமணமாகியிருந்தது. ஆனாலும் மதுரம் அம்மையார் மீது அதீத காதல் கொண்டுவிட்டார். ‘வசந்தசேனா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பீகாருக்கு ரயிலில் சென்றபோதுதான் மதுரம் அம்மாவிடம் தான் அவரை விரும்புவதாகச் சொல்லி தனது மனதைக் கலைத்து மதுரம்மாவின் மனதையும் கலைத்தார்.

மதுரம் அம்மாவும் மிகவும் யோசித்து அந்த ஷூட்டிங்கின்போதே தனக்கும் சம்மதம் என்று சொல்ல.. பீகாரிலேயே அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது.

ஆனால் சென்னை திரும்பிய பிறகுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது மதுரம் அம்மாவுக்குத் தெரிய வந்து சில நாட்கள் பேசிக் கொள்ளாமல் சண்டையிட்டபடியே இருந்ததும் நடந்திருக்கிறது.! மதுரம் அம்மாவுக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்துவிட்டது. வாரிசு வேண்டும் என்பதற்காக மதுரம் அம்மாவின் தங்கை வேம்பு அம்மாளையும் கலைவாணர் திருமணம் செய்து கொண்டது வேறொரு கதை..!

ஆனாலும் இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும்  யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்..

2. எம்.ஜி.ஆர். - சதானந்தவாதி - வி.என்.ஜானகி

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி இறந்த பின் தனது தாயார் சத்யா அம்மையாரின் வற்புறுத்தலுக்காக சதானந்தவதியை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே சதானந்தவதி நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையானார்.

இந்த நேரத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு முதல்முதலாக திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ‘மோகினி’, ‘நாம்’, ‘மருத நாட்டு இளவரசி’ ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து வி.என்.ஜானகியுடன் ஜோடியாக நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும்போதுதான் வி.என்.ஜானகி எம்.ஜி.ஆரை தான் விரும்புவதாக அவரிடமே சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.


எம்.ஜி.ஆர் சட்டென முடிவெடுக்காமல் தனது தாயார், மற்றும் தனது மனைவி சதானந்தவதியிடம் இது பற்றிச் சொல்லி அவர்கள் அனுமதியுடன்தான் ஜானகியை 1957-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜானகியுடனான இந்தத் திருமணத்திற்குப் பிறகு 1968-ல் சதானந்தாவதி அம்மா மரணமடையும்வரையிலும் ஜானகி அம்மையாரும், அவரும் ஒரே வீட்டில்தான் எம்.ஜி.ஆருடன் வசித்து வந்தார்கள்.

இந்த சிச்சுவேஷனுக்கு ஜானகியம்மாவை துரத்தியது அவரது உறவுக்காரர்தான். ஜானகியம்மாவுக்கு அப்போதே திருமணமாகி கணவரிடமிருந்து விலகியிருந்தார். ஒரு ஆண் குழந்தையும் அவருக்கு இருந்தது. அப்பு என்றழைக்கப்பட்ட அவரை எம்.ஜி.ஆர்.தான் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார். தி.நகரில் இப்போதும் இருக்கும் அப்பு ஹவுஸ் ஜானகியம்மாவின் மகன் அப்புவுடையதுதான். இவரும் தற்போது உயிருடன் இல்லை.

தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே ஜானகியம்மா தானே விரும்பி எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். மிச்சமிருக்கும் இந்தக் தம்பதிகளின் காதல் கதை உலகமறிந்தது..!

3. சிவாஜிகணேசன்-ரத்னமாலா

இவருமா..? இருக்காது.. இல்லைவே இல்லை என்கிற நம்பிக்கையோடுதான் நானும் பல ஆண்டுகளாக இருந்து வந்தேன். ஆனால் சினிமா உலகத்திற்குள் கால் வைத்த பின்புதான் எனது அந்த நம்பிக்கை புஸ்ஸானது.

ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு. அவர் ரத்னமாலா என்னும் நடிகை.  இவரும் ஆரம்பக் காலச் சினிமாக்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் இருந்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக நாடக வாழ்க்கையிலேயே ரத்னமாலா, சிவாஜிக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.

வெகு நாட்களாக சினிமாவுலகத்தில் மிக நெருங்கியவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இரகசியத்தை  வெளியிட்டவர் எம்.ஜி.ஆர்தான். விகடனில் தான் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் ஒரு கிசுகிசு பத்திரிகையாளரைப் போல் ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர். “நான் கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வரும்போது தம்பி சிவாஜி தினம்தோறும் தவறாமல் எங்களது நாடகக் கொட்டகைக்கு வந்து செல்வார்” என்று பூடகமாக எழுதியிருந்தார். அப்போது எம்.ஜி.ஆருடன் அன்றைய நாடகங்களில் நடித்து வந்தவர் இந்த ரத்னமாலாதான்.

இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பட்டென்று போட்டு உடைத்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அவர் இருந்த காலத்தில் ‘இதயம்’ பத்திரிகையில் தேவையே இல்லாமல் ‘இரு மலர்கள்’ படம் பற்றிக் குறிப்பிட்டு “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார்..” என்று எழுதித் தொலைத்துவிட்டார். இந்த ஒரு விஷயத்துக்காகவே மணியன் மீது சிவாஜி இறுதிவரையில் கோபத்துடனேயே இருந்தார் என்கிறார்கள் திரையுலகப் பத்திரிகையாளர்கள்.

சினிமா பத்திரிகையாளர்களையும் தாண்டி, அரசியல் பத்திரிகையாளர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தும், சிவாஜி மீது அவர்களுக்கு இருந்த அபிமானம் காரணமாகவே அனைவருமே இது பற்றி எழுதாமல் விட்டதாக இப்போது சொல்கிறார்கள்.

ரத்னமாலா மூலமாக  சிவாஜிக்கு இன்றைக்கு பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். சிவாஜி மறைந்த பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ரத்னமாலாவும் இறந்து போனார், யாருக்குமே தெரியாமல்..! ‘தினமலர்’ பத்திரிகை மட்டுமே அன்றைக்கு அவரது இறப்புச்  செய்தியோடு  அவர் யார் என்பதையும் எழுதியிருந்தது..! 

சிவாஜி-பத்மினி ஜோடி பற்றிய செய்தியில் சிறிது உண்மையிருந்தும், அது கூடாமல் போய்விட்டது என்பதில் சிவாஜியின் ரசிகர்களுக்கு நிரம்பவே வருத்தம்தான். எனக்கும்தான்..!

4. எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி

சிவாஜியைவிடவும் தெள்ளுத் தமிழைத் தீயாய் உச்சரிக்கும் பாங்கு உடையவர் என்று திரையுலகில் பாராட்டைப் பெற்றவர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்களால் பெண் என்பவளுக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட கண்ணகிக்கு உருவகம் கொடுத்தவர் விஜயகுமாரி.

‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘பூம்புகார்’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘தங்கரத்தினம்’, ‘சாரதா’, ‘சாந்தி’ என்று பல படங்களில் ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாகத் திகழ்ந்தது எஸ்.எஸ்.ஆர்.-விஜயகுமாரி ஜோடி.

அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம் என்ற மனைவியும், மகன்களும் இருந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து தனக்கு  ஜோடியாக நடித்து வந்த விஜயகுமாரியை தீவிரமாக விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். எல்லாரும் செய்றதுதான..? நம்ம என்ன தப்பாவா பேசிட்டோம்.. செஞ்சிட்டோம் என்று நினைத்து விஜயகுமாரியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனத்தைத் துவக்கினார் எஸ்.எஸ்.ஆர்.


எல்டாம்ஸ் சாலை வீட்டில் முதல் மாடியில் முதல் மனைவியும், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியுடனும் குடியும், குடித்தனமுமாக இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

எந்த அளவுக்கு நடிப்பையும், அரசியலையும் விரும்பினாரோ அதே அளவுக்கு மதுவையும் விரும்பினார் எஸ்.எஸ்.ஆர். பல தலைவர்களிடம் சொல்லியும், பேசியும் பஞ்சாயத்து செய்தும் பலனளிக்காமல் போக, விஜயகுமாரி தன் மகன் ரவியோடு எஸ்.எஸ்.ஆரிடம் இருந்து விலகிச் செல்ல நேரிட்டது. இன்றுவரையிலும் தொடர்பில்லாமல் தனித்துதான் இருக்கிறார் விஜயகுமாரி.

அவர் விலகிச் சென்ற சிறிது காலத்திலேயே தாமரைச்செல்வி என்ற பெண்ணை மூன்றாவது மனைவியாக்கிக் கொண்டு எல்டாம்ஸ் சாலை வீட்டின் மூன்றாவது மாடியில் குடி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். இத்தோடு இவரது காதல் முடிந்தது.

இந்த நேரத்தில் ‘நவசக்தி’ பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆரின் திருமணங்கள் பற்றி கார்ட்டூன் போட்டு கிண்டலடித்திருந்தார்களாம். பத்திரிகையைப் பார்த்த பெருந்தலைவர் காமராஜர் காலையிலேயே தனது வீட்டில் பஞ்சாயத்தைக் கூட்டி அனைவரையும் திட்டித் தீர்த்துவிட்டாராம்..! சம்பந்தப்பட்டவர் எஸ்.எஸ்.ஆரிடம் நேரில் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்த பின்புதான் காலை சாப்பாட்டில் கை வைத்தார் காமராஜர் என்கிறார்கள் அன்றைய பத்திரிகையாளர்கள். இதெல்லாம் அந்தக் காலம்..!

5. ஜெமினி கணேசன் - புஷ்பவல்லி

“என் சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களையாவது நான் பார்த்திருப்பேன்” என்று வெளிப்படையாகத் தன்னைப் பற்றித் தெரிவித்துக் கொண்ட காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கையே இந்த விஷயத்தில் ஒரு பாடம்தான்.

ஜெமினியின் முதல் மாட்டுதல் புஷ்பவல்லியிடம்தான். ஜெமினி ஹீரோவாக அறிமுகமான ‘மிஸ் மாலினி’யின் ஹீரோயின் புஷ்பவல்லிதான். ஜெமினி ஸ்டூடியோவில் கேரக்டருக்குத் தகுந்தாற்போன்ற நடிகர்-நடிகையரைத் தேர்வு செய்யும் பொறுப்பான பதவியில் இருந்த ஜெமினியின் கண்களில் தானாக விழுந்தவர் புஷ்பவல்லி. இத்தனைக்கும் புஷ்பவல்லியின் தங்கையான சூர்யபிரபாதான் ஜெமினிக்கு முதல் பிரெண்டு. இந்த பிரெண்டு மூலமாகவே புஷ்பவல்லியும் பிரெண்டாக நட்பு ஓரளவோடு நின்றிருந்தது..!


இடையில் புஷ்பவல்லிக்கு வேறொருவருடன் திருமணமாகி ஒரு பையனும் இருந்த நிலையில்தான் மீண்டும் ஒரு முறை யதேச்சையாக ஜெமினிகணேசனை பீச்சில் சந்திக்கப் போய் வினையாகிவிட்டது. பரவுவதற்கு நல்லதொரு கொடி மரம் தேடிக் கொண்டிருந்த புஷ்பவல்லி, ஜெமினியை வலுக்கட்டாயமாக நெருங்க.. ஜெமினி சரண்டரானார்.

அடுத்த வருடமே பானுரேகா என்னும் ரேகாவும், தொடர்ந்து ராதா என்ற பெண்ணுமாக அவசரமாகப் பிறக்க.. தொடர்ந்து அவர்களது பிரிவும் அவசரமாகவே இருந்துவிட்டது. காரணம் ஈகோதான்.

சிறிய இடைவெளியாக இருந்த இந்த விஷயத்தை மீளவே முடியாதபடிக்கு மாற்றியது சாவித்திரியின் வருகை. ஹீரோயினாக ஜெமினியுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்ட சாவித்திரியிடம், ஜெமினியின் நட்பு குறித்து ஸ்டூடியோவுக்கே நேரில் போய் புஷ்பவல்லி வாய்ச்சண்டையெல்லாம் போட்டதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இதை ஒரு காரணமாக வைத்து  ஜெமினியை விட்டு முற்றிலுமாக விலகினார் புஷ்பவல்லி..!

இந்த உறவு பத்திரிகைகளில் லேசுபாசாக மட்டுமே கிண்டி கிளறி எழுதிக் கொண்டிருந்த நிலையில், பானுரேகா அசத்தல் ரேகாவாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தபோது, தன்னுடைய தந்தை ஜெமினிகணேசன்தான் என்று பேட்டியளித்த பின்புதான் எல்லாமே வெட்டவெளி்ச்சமானது.

இத்தனைக்கும் ஜெமினியும், புஷ்பவல்லியும் முறைப்படி திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்..!

6. ஜெமினி கணேசன் - சாவித்திரி

திரையுலகின் பொருத்தமான ஜோடிகள் என்று தென்னிந்திய திரையுலகமே போற்றிப் புகழும் வண்ணம் வாழ்ந்த காதல் ஜோடிகள் இவர்கள்..!

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து 1955-ல் எல்.வி.பிரசாத் இயக்கம் செய்த ‘மிஸ்ஸியம்மா’வில் ஹீரோயினாக அறிமுகமான சாவித்திரி அந்தப் படம் முடிவடைவதற்குள் தன்னுடன் இணைந்து நடித்த ஜெமினிகணேசனிடம் தனது மனதைப் பறி கொடுத்தார்.

ஏற்கெனவே ‘மனம் போல மாங்கல்யம்’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்து அதிலேயே இவர்களது காதல் ஆரம்பித்து எல்.எஸ்.எஸ். பேருந்து போல் நான் ஸ்டாப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும்போதும் வளர்ந்து கொண்டேயிருந்தது. புஷ்பவல்லி மீதான உறவில் ஜெமினிக்கு இருந்த வருத்தத்தையெல்லாம் சர்ப் பவுடர் போட்டுத் துடைத்தது சாவித்திரியின் நட்புதான்.

சாவித்திரி தனது அப்பாவின் தொல்லை தாங்காமல்  ஒரு இரவு நேரத்தில் ஜெமினியின் வீட்டிற்கே சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள.. இப்படித்தான் இந்தத் தெய்வீகக் காதல் தம்பதிகளின் காதல் திருமணம் நடந்தேறியது.

அப்போது ஜெமினிகணேசனுக்கு பாப்ஜியின் மூலம்  இரண்டு பெண் குழந்தைகளும், புஷ்பவல்லியின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும் காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று இருவரின் கண்ணையும் மறைத்தது..!


யார் கண் பட்டதோ இருவருக்குமிடையில் பிளவு ஏற்பட்டு. பிரிவு வந்து யார் சொல்லியும் கேட்காமல் ‘பிராப்தம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதனால் சொத்துக்கள் அத்தனையையும் இழந்து துயரப்பட்ட  நடிகையர் திலகம் சாவித்திரி, தனது 44-வது வயதிலேயே இறந்தது தமிழ்த் திரையுலகம் சந்தித்த ஒரு மிகப் பெரும் கொடூரம். (இவங்களைப் பத்தி தனியா ஒரு பதிவு போடணும்ப்பா..)

7. பீம்சிங் - சுகுமாரி

‘பா’ வரிசைப் படங்களையெடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த இயக்குநர் பீம்சிங். இயக்கத்திலேயே தலை சிறந்தவராக அந்தக் காலத்தில் கொண்டாடப்பட்டவர். 


கதைகளுக்காகத்தான் நடிகர்களே தவிர.. நடிகர்களுக்காக கதை இல்லை என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். எந்தவித காம்பரமைஸ்களுக்கும் உட்பட மறுத்து ‘பா’ வரிசைப் படங்களின் கிரேஸ் முடிந்த பின்பு, ஜெயகாந்தனின் கதைகளையே வரிசையாக படமெடுக்கத் துவங்கியவர்.


இவரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வேளையில் அப்போது கதாநாயகிகளுக்கு நண்பியாகவும், குரூப் நடனமாடியும் வந்த தற்போது ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று சொல்லப்படும் பழம் பெரும் நடிகை சுகுமாரியை 'பா' வரிசைப் படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் வெளிப்படையாக தெரிந்தபோது சுகுமாரி இது பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாதவர்.. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

8. டி.ஆர்.ராமண்ணா - பி.எஸ்.சரோஜா - ஈ.வி.சரோஜா

ரொம்பவே அதிர்ஷ்டக்காரக் கணவர் இவர். இவருடைய மூன்று மனைவிகளில் இருவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோயின்களாக நடித்தவர்கள். மூன்று மனைவிகளின் பெயர்களும் சரோஜாதான்.

அந்தக் கால கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரியின் உடன் பிறந்த தம்பியான இவர் தனது 14-வது வயதிலேயே திரையுலகில் கால் பதித்தவர். சவுண்ட்டு அஸிஸ்டெண்ட், ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குநராக பல படிகளைத் தொட்டவர் இவர். எம்.ஜி.ஆர். சிவாஜி மட்டுமல்லாமல் என்.டி.ராமராவ், ஜெயலலிதாவையும் வைத்து இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’, ‘குலேபகாவலி’, ‘காத்தவராயன்’, ‘மணப்பந்தல்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பாசம்’, ‘குமரிப்பெண்’, ‘நான்’, ‘சொர்க்கம்’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நீ’, ‘மூன்றெழுத்து’, ‘உன்னைப் போல் ஒருவன்’ என்று பல படங்களிலும் அன்னாரின் இயக்கம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய பல கமர்ஷியல் இயக்குநர்களின் முதல் குருவாக இவரைத்தான் சொல்ல வேண்டும்.


ராமண்ணா நடித்த முதல் படமான ‘என் தங்கை’ என்ற படத்தில் இவருடன் இணைந்து நடித்தவர்தான் ஈ.வி.சரோஜா. இவர் பின்பு 'மதுரை வீரன்', 'குலேபகாவலி', 'வீரத்திருமகன்', 'பாக்கியலட்சுமி', கொடுத்து வைத்தவள், ‘படிக்காத மேதை’ உட்பட பல படங்களில் நடித்தவர். ராமண்ணாவுடன் நடித்தும், அவர் இயக்கிய படங்களில் நடித்தும் வந்தபோதுதான் காதல் கைகூடி இவரை மணந்தார் ராமண்ணா.

அடுத்தவர் பி.எஸ்.சரோஜா. ‘வண்ணக்கிளி’ படத்தில் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலில் சோகத்தைப் பிழிந்தெடுப்பார் பாருங்கள். அவர்தான் பி.எஸ்.சரோஜா. பி.யூ. சின்னப்பா நடித்த. ‘விகடயோகி’ என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சரோஜா. .ராமண்ணா இயக்கிய ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’ படங்களில் நடித்தபோது இவர் மீதும் காதல் கொண்டு இவரையும் திருமணம் செய்து கொண்டார். 

இது விரும்பியே மணந்ததுதான் என்பதால் எதுவும் சொல்வதற்கில்லை. இப்போது ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் இறந்துவிட்டார்கள். பி.எஸ்.சரோஜா மட்டுமே உயிருடன் இருக்கிறார்.

9. ரவிச்சந்திரன் - ஷீலா

ஒரு ச்ச்ன்ன ஸ்லிப்தான் வாழ்க்கையை திசை திருப்பியது என்பார்கள். அது இவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. பாசம் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமண்ணாவால் அறிமுகப்படுத்த ஷீலா, ஜோஸப் தளியத்தால் மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் மலையாள உலகின் உச்சத்திற்கே போயிருந்தார். அந்தச் சூழலில் அவ்வப்போதுதான் தமிழ்ப் படங்களில் தலை காட்டுவார்.


அப்படி நடிக்கத் துவங்கிய இவர்களது நட்பு மலையாளப் படங்களுக்கு ரவிச்சந்திரனை சிபாரிசு செய்யும் அளவுக்கு ஷீலாவை கொண்டு சென்றது..! ரவிச்சந்திரனுக்கு அப்போது விமலா என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தது.

இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாததால் திருமணமும் செய்து கொண்டார்கள். தம்பதிகள் ‘மஞ்சள் குங்குமம்’ என்ற பெயரில் சொந்தமாகத் திரைப்படமும் தயாரித்தார்கள். படம் படுதோல்வி.


இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ஷீலா முறைப்படி டைவர்ஸ் செய்து கொண்டு மகனுடன் வெளியேற.. ரவிச்சந்திரன் மறுபடியும் தனது முதல் மனைவியுடன் இணைந்து கொண்டார்.

தோல்வியடைந்த காதலுக்கு இவர்களும் ஒரு உதாரணம்..!

10. விஜயகுமார் - மஞ்சுளா

தமிழ்ச் சினிமாவில் மேற்கண்ட ஜோடிகளைப் போல திருமணம் செய்து கொண்டு இன்றுவரையிலும் ஒற்றுமையாக இருப்பவர்கள் விஜயகுமார்-மஞ்சுளா ஜோடிதான்.


எம்.ஜி.ஆர். படவுலகில் இருந்து விடுபட்டு கோட்டையில் முதலமைச்சராக அமர்ந்த பிறகு அடுத்த நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுடன் எடுத்த எடுப்பிலேயே ஜோடி போட்டுவிடவில்லை விஜயகுமார். இரண்டாவது கதாநாயகன், ஹீரோவின் நண்பன் என்றுதான் பல படங்களில் மஞ்சுளாவுடன் நடித்து வந்தார்.

இந்த இருவரும் அல்லி தர்பார் படத்தில்தான் முதலில் ஜோடியாக நடித்தார்கள். பின்பு சங்கர், சலீம், சைமன், குப்பத்து ராஜா என்று   வரிசை தொடர்ந்து போது தனது முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் வாழ்ந்து வந்தார் விஜயகுமார்.


ஸ்ரீப்ரியா, சுஜாதா, லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீதேவி என்று தனக்குப் போட்டிக்கு ஆட்கள் நிறைய வந்துவிட்டதால் மஞ்சுளாவும் தன்னுடைய ரிட்டையர்டுமெண்ட் பற்றி யோசித்து வந்தவேளையில் விஜயகுமார் மஞ்சுளாவின் தனது காதலைத் தெரிவிக்க, அவர் "எங்கம்மாகிட்ட வந்து பேசுங்க.." என்று பொறுப்பாகப் பதில் சொன்னாராம். 

தனது முதல் மனைவியின் ஒப்புதலுடன்தான் மஞ்சுளாவை திருமணம் செய்தார் விஜயகுமார். அப்போதிலிருந்து இப்போது வரையிலும் ஒரே வீட்டில் ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகிறது இவர்களது குடும்பம்..!

11. பாலுமகேந்திரா - ஷோபா - மெளனிகா

சாவித்திரிக்குப் பிறகு நடிப்பு என்பதற்கு அடையாளம் இவர்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டவர் ஷோபா. நவீன தமிழ்ச் சினிமாவின் துவக்கப் புள்ளியில்தான் இவரும் தனது திரையுலக வாழ்க்கையைத் துவக்கினார்.


பாலுமகேந்திரா இயக்கத்தில் 'கோகிலா', ‘அழியாத கோலங்கள்’, 'மூடுபனி,'  ஆகிய படங்களில் நடித்த ஷோபா, ‘பசி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற ஷோபா, ஏன் இந்த முட்டாள்தனத்தை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிர்...!


பாலுமகேந்திராவுடனான காதலை வளர்த்துக் கொண்டே பல திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷோபா, பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா தன்னை ஏற்றுக் கொள்ளாத சோகத்திலும், இது தொடர்பாக பாலுமகேந்திராவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையிலும் சட்டென்று எடுத்த ஒரு முடிவால் தமிழ்த் திரையுலகம் ஒரு மாபெரும் நடிகையை இழந்துவிட்டது.


இதன் பின்பு கேமிரா கவிஞர் அறிமுகப்படுத்திய அனைத்து நடிகைகளையும் அவருடன் இணைத்து கதைகள் பல பேசப்பட்டு கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டும் எல்லாம் பொய் என்று நினைத்திருந்து எத்தனை தவறு என்பது கடைசியாகத்தான் தெரிந்தது.

‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகம் செய்துவைத்த மெளனிகாவுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டு. இப்போது துணைவியாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார் கேமிரா கவிஞர்.

12. கமல்ஹாசன் - வாணி - சரிகா

கமல்ஹாசன்-வாணி என்கிற நட்சத்திர ஜோடியின் திருமணம் சட்டென்று நடந்து முடிந்ததா? அல்லது நீண்ட நாள் காதலின் முடிவுதானா? என்பது பற்றி இப்போது பேச்சில்லை. ஆனால் சர்ச்சைகள் இருந்ததுண்டு. இதுவும் நன்றாகத்தான் இருந்தது பத்தாண்டுகள் வரையிலும்..

திடீரென்று கமல்ஹாசன், “சரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நான்தான்” என்று அறிவிக்கும்வரையில், இந்தத் தம்பதிகளின் உட்பூசலும், பிரச்சினையும் வெளியில் வரவே இல்லை.

செய்தி வந்த பின்பு நடந்த சமரசப் பேச்சுக்களும், சில அடிதடிகளும் எந்தவிதத்திலும் வாணிக்கு உதவாமல் போனது அவரது துரதிருஷ்டம்தான்.

கர்ப்பமாக இருந்த சரிகாவை பெங்களூரில் வழிமறித்த கூலிப்படைகளிடம் இருந்து காப்பாற்ற, நடுரோட்டில் டாக்ஸியில் இருந்து ரிக்ஷா வண்டிக்கு மாற்றியனுப்பி சரிகாவை பாதுகாக்கும் அளவுக்கு ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய கமலின் அப்போதைய நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான். இதுதான் பஞ்சாயத்து பேச சொம்புடன் தயாராக இருந்த கோடம்பாக்கத்து நாட்டாமைகளை, மவுனம் கொள்ள வைத்தது.  .

ஆனால் இந்த அடிதடியே கமலுக்குள் வைராக்கியத்தை விதைத்துவிட, “பாத்ரூமில் தாலியைக் கழட்டி வீசியெறிந்து அலட்சியப்படுத்தும் இவருடன் நான் எப்படி வாழ்வது?” என்ற அக்மார்க் தமிழ் கணவனின் பேச்சைப் போன்ற கமல் தரப்பு நியாயத்தைக் கேட்டு பேஸ்த்தடித்துப் போனது கோடம்பாக்கம்.

கடைசியில், பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டுடன் ‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடிக்க சென்னைக்கு வந்து இங்கேயே மருமகளாக செட்டிலான வாணி கமல்ஹாசன், வாணி கணபதியாக மீண்டும் உருமாறி தனது சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச் சென்றார்.


இந்தக் காதல் நீடித்தது பத்தாண்டுகள் என்றால் அடுத்து சரிகாவுடனான கமலஹாசனின் காதலும் முறிந்ததை விதி என்று சொல்லலாமா..? யாராலும் நம்ப முடியவில்லை. அதிலும் ஆழ்வார்பேட்டை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு ஆபத்தான நிலைமையில் இருந்த சரிகாவை கண்ணும், கருத்துமாக கவனித்து வந்தார் கமல்ஹாசன்.

சரிகா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி மூன்று மாதங்களுக்குள் அதே ஆழ்வார்ப்பேட்டை தெருக்களில் 'குமுதம்'  பத்திரிகை ஒட்டியிருந்த  “சரிகாவிடமிருந்து பிரிந்துவிட்டேன்” என்ற கமலின் ஒப்புதல் வாக்குமூலம் தாங்கிய நோட்டீஸ்தான் பார்ப்பவர்களைத் திகிலடைய வைத்தது. என்ன எழவு ஈகோவோ தெரியவில்லை..?

இந்த முறிவுக்குப் பின்பு இடையில் ஒரு மெல்லிய தென்றலாய் புகுந்தார் இடையழகி சிம்ரன். 'விருமாண்டி' ஷூட்டிங்கிற்காக உத்தமபாளையத்தில் முகாமிட்டிருந்த கமலை சந்திக்க காண்டசா கிளாஸிக் காரில் பவனி வந்து கொண்டிருந்த சிம்ரனைப் பார்த்தவுடன் அடுத்தது இவர்தான் என்று முடிவே செய்திருந்தது கோடம்பாக்கத்து கிசுகிசு பத்திரிகைகள். ஆனாலும் கதை புஸ்ஸானது சிங்கப்பூரிலாம்..!

நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஏதோ ஒரு பிரச்சினையால் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக் கதவைத் திறக்க மறுத்து சிம்ரன் அடம் பிடிக்க.. அறை வாசலில் நீண்ட நேரம் இருந்து பெல் அடித்துப் பார்த்து வெறுத்துப் போனார் கமல்ஹாசன் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

அன்றைய இரவில் காரிடாரில் கமல் இருந்த கோலத்தைப் பார்த்து உச்சுக் கொட்டிய உடன் சென்ற நடிகர்கள்தான் அவரைச் சமாதானம் செய்து அவரது அறைக்கு அனுப்பி வைத்தார்களாம்..! காதல்தான் எதை, எதையெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்..! இதனாலேயே சென்னை திரும்பும்போது கமல்ஹாசனின் மனதில் சிம்ரன் தொடர்பில்லை என்றாகிவிட்டது.

இப்படி சிம்ரன் வந்த வேகத்தில் விலகிப் போக... அப்போதுதான்  தனது நீண்ட நாள் தோழியான கவுதமியை புற்றுநோய் தாக்கிய நிலையில் அப்போலாவில் பார்த்த மாத்திரத்தில் உருகிப் போனார் கலைஞானி.

தனது பி.ஜே.பி. கட்சித் தொடர்புகளை வைத்து தொழிலில் முன்னேற நினைத்த கணவனால்  ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்துபோய் டைவர்ஸ் கேட்டிருந்த நிலையில்தான் புற்றுநோய்த் தாக்கி சீரியஸாகி இருந்தார் கவுதமி. அவருக்கு ஆறுதல் சொல்லியபடியே துவங்கிய கமலின் நட்பு, மீண்டும் துளிர்விட்டு இப்போது உடன் வாழும் துணைவி என்று நிலையில் வந்து நின்றிருக்கிறது..!

இந்தக் கலைஞனுக்குள் இருக்கும் மனதை யார் புரிந்து கொள்வது..?

13. பிரபு - குஷ்பு

இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாவத்தைச் செய்தவர்கள் சாட்சாத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை.


பிரபு-குஷ்புவுக்கே தோன்றியிருக்காத ஒரு எண்ணத்தை... "காதல் இருக்கா..? இருக்கோ..? இருக்காம்ல்ல..? என்ன சொல்ல மாட்டேங்குறீங்க?" என்றெல்லாம் தினம்தோறும் அந்த எண்ணத்தை, அவர்களது மனதில் விதைத்து திருமணம் வரையிலும் கொண்டு போய்ச் சேர்த்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது தமிழ்ச் சினிமா பத்திரிகையுலகம். போதாக்குறைக்கு இந்த இருவருக்குமே ஒருவரே பி.ஆர்.ஓ.வாகவும் இருந்ததினால் நட்பு, காதலாகி, கசிந்து திருமணத்தில் முடிய வேண்டிய கட்டாயம்..!

அதுவரையிலும் 'அன்னை இல்ல'த்தின் அடுப்படிவரையிலும் உரிமையுடன் சென்று தானே எடுத்துப் போட்டு சாப்பிட்டு வரும் அளவுக்கு பழக்கமாகி இருந்த குஷ்புவை, திரும்பவும் அந்த வீட்டுக்குள் கொஞ்ச காலம் நுழையாதபடிக்குக் கொண்டு சென்றது அந்த மண விவகாரம். 

நடிகர் திலகத்திற்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மூன்று மாதத்தில் இந்த ஜோடி பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. அந்த நேரத்தில் பிரிவது என்று இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பாராட்டுக்குரியது. ஒரு திருமணத்தால் குடும்பமே பிரியக்கூடிய அளவுக்கு போகுமென்றால், பத்து பேரின் சந்தோஷத்திற்காக இருவர் துயரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்பதால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்கள். 

பத்திரிகைகளுக்கு இதுவும் ஒரு பரபரப்புச் செய்திதான்.. மஞ்சள் குளித்தன பத்திரிகைகள்.!  ஆனாலும் ரசிகர்களுக்கு மனம்கொள்ளா வருத்தம்தான்..! அவர்களுக்குப் பிடித்த ஜோடியல்லவா..!?

14. அம்பிகா - ரவிகாந்த்

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகத்தின் சொத்தையே ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொண்டு போன நட்சத்திர நடிகைகள் குடும்பத்தில் இவர்தான் மூத்தவர்.. அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் ஒரு மணாளனுக்கு வாழக்கைப்பட்டுச் சென்றவர் மிகச் சில ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் திரும்பி வந்தார்.


தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் அவரை டைவர்ஸ் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ‘அருணாச்சலம்’ படத்தில் ரஜினியுடன் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றி தனது செகண்ட் இன்னிங்ஸை துவக்கினார்.

இந்த நேரத்தில் தொலைக்காட்சியிலும் நடிக்க வாய்ப்பு வரவே அதிலும் நடிக்கத் துவங்கினார். அப்படி தன்னுடன் நடிக்க வந்த ரவிகாந்த் என்கிற நடிகருடன் ஜோடியாக நடித்தவர், வெகு சீக்கிரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ரவிகாந்துடனேயே ஜோடி சேர விரும்பினார். ரவிகாந்த் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்.

பல இரண்டாவது மனைவிகள் சொல்வதைப் போலவே, “ரவியின் முதல் மனைவி அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..” என்றார் அம்பிகா. ரவிகாந்த் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்த பின்பு, இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த ஒருமித்தத் தம்பதிகள் பத்தாண்டுகள் கழித்து மிகச் சமீபத்தில்தான் தங்களிடையே ஒத்து வரவில்லை என்பதை உணர்ந்து முறைப்படி பிரிந்துவிட்டார்கள். பிரிந்த வேகத்தில் ரவிகாந்த் மீண்டும் ஒரு திருமணம் செய்து செட்டிலாகிவிட்டது ஒரு தனிக்கதை..!

-----------------------------

இதில் பழகிப் பார்த்து திருமணம் முடிந்து, பின்பு மனம் மாறி பிரிந்து சென்ற சில ஜோடிகளை தவிர்த்திருக்கிறேன். யார் என்று உங்களுக்கே தெரியும்..! நல்லதொரு மண வாழ்க்கையில் இப்போதும் அவர்கள் இருக்கையில் வாழ்க வளமுடன் என்று வாழ்த்திவிட்டு போவதுதான் நமக்கு நல்லது..!

இதுவெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று இன்றைக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையேயும் இந்தப் பழக்கம் இருந்து வருவது அனைவரும் அறிந்தது.

இதற்கான முதல் காரணம் சிறு வயதிலேயே.. அதாவது 25 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னொரு பெண் வருவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்து தொலைக்கிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராமண்ணா, எஸ்.எஸ்.ஆர். என்று பட்டியலிட்ட அத்தனை பேருமே மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்தவர்கள்தான்.  அது குடும்பப் பெரியவர்களின் பெயரைத் தட்டக் கூடாது என்பதற்காகத்தான்..

இப்படியொரு கட்டாயத்திற்காக திருமணம் செய்துவிட்டு பல வருடங்கள் கழித்து தங்களுக்குப் பொருத்தமாக இல்லையே என்றெண்ணிதான் பலரும் அப்போதைக்கு மனதுக்குப் பிடித்த வேறொருவரை நாடுகிறார்கள். இது இரு பாலரும் செய்யக் கூடியதுதான்.. நிறைய பேர் இதில் பக்குவப்பட்டு சிறந்திருக்கிறார்கள். பலர் தரித்திரமாகப் போயிருக்கிறார்கள்.

காதல் என்பதை மட்டுமே வைத்து திருமணம் செய்தவர்கள் இன்றைக்கும் நன்றாகத்தான் உள்ளார்கள். கவுரவம், அழகு, பெயருக்காக செய்தவர்கள் பாதியிலேயே அலங்கோலமாகி தங்களது வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்.

இங்கே குறிப்பிட்டது கொஞ்ச பேர்தான். திரைத்துறையைத் தவிர்த்து மற்ற சமூகத்தினரிடையே தேடினால் ஊருக்கு நூறு பேராவது இப்படியிருப்பார்கள். அவர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்வார்கள். அவைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.

ஒரு கோணத்தில் பார்த்தால் சமூகத்தின் பார்வையில் இது குற்றம். ஆனால் தனி மனித விருப்பத்திலும், அவர்களது பார்வையிலும் இதில் தவறில்லை. தவிர்க்க முடியாதது.

காதல் எப்போது, யார் மீது யாருக்கு வரும் என்பதைச் சொல்லிவிட முடியாது என்பதாலும், இதில் தனி மனித உரிமையும் அடங்கியிருக்கிறது என்பதாலும் இதற்கு மூக்கணாங்கயிறு போடுவது என்பது சட்டப் புத்தகங்களால் முடியவே முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும்விட சமூக நலன் முக்கியமா? தனி மனித உரிமை முக்கியமான என்ற கேள்விக்கு விடை தேடும்போதுதான் இது போன்ற விஷயங்களுக்கும் நாம் தீர்வு காண முடியும். அது நிச்சயம் முடியவே முடியாது என்பது மட்டுமே முடிவானது..!

99 comments:

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் பகிர்வு!! அடிக்கடி சினிமா சமப்ந்த செய்திகளை எழுதங்கண்ணா...

Menaga Sathia said...

ஐ இட்லி,தோசை,வடை,பொங்கல்,சாம்பார் எல்லாமே எனக்குதான்....

viyasan said...

உண்மைத்தமிழன் என்றாலே சினிமா பைத்தியமாகத் தான் இருக்க வேன்டும் என்பதை நிரூபித்து விட்டீர்கள், நன்றி நன்றி

நானும் வேறு எதாவது, தமிழையோ அல்லது தமிழர்களைப் பற்றியோ எழுதித்த் தொலைத்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன்.

கவிதா | Kavitha said...

முருகா ...இந்த பதிவு தொடருமா. .நிறைய மிஸ்ஸிங் போல குறுப்பா 9தாரா?

அப்புறம் எப்படி இப்படி எல்லாம் அடுத்தவங்க குடும்பத்துள்ள தலையவிட்டு பார்த்து க்ளீனா எழுதுமுடியுது முருகா??!! சும்ம்மா ஒரு டவுட்டு..

சிங்கை நாதன்/SingaiNathan said...

Change the date 24-09-2001

மற்றபடி பின்னூட்டம் பெற
அன்புடன்
சிங்கை நாதன்

இளங்கோ said...

யப்பா முருகா... எவ்ளோ பெரிய பதிவு !!
வாழ்க அண்ணன் உண்மைத் தமிழன்.

பாவா ஷரீப் said...

அண்ணா இது நல்லாயில்லே
எனக்கு 31 வயசு ஆச்சு இன்னும் ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேன்குது
ஆனா இவங்க என்னடான்னா 3, 4 பொண்டாட்டியா
ஸ்.....அப்பா .......... இப்பவே கண்ணை கட்டுதே

Indian said...

#3, #10 interesting facts.

பழமைபேசி said...

இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்ணே...

IKrishs said...

mounika v v kanuvugal padathukku munbe balu mahendra vin
Un kannil neer valindhaal matrum rettai vaal kurivi padangalil siriya vedangalil thondri irukuraar.

VISA said...

//இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்ணே...

//

YES

pichaikaaran said...

விரைவில் தின தந்தியில் இதை படிக்கலாம்

pichaikaaran said...

பூ நடிகையின் அபார்ஷன் வரை சென்றதை ஏன் எழுதவில்லை... நடிகர் குடும்பம் மேல் இருக்கும் மரியாதையா?

Vidhoosh said...

/// கருவாச்சி said...

அண்ணா இது நல்லாயில்லே
எனக்கு 31 வயசு ஆச்சு இன்னும் ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேன்குது
ஆனா இவங்க என்னடான்னா 3, 4 பொண்டாட்டியா
ஸ்.....அப்பா .......... இப்பவே கண்ணை கட்டுதே////


கருவாச்சி:: அண்ணன் இனிமே உங்களுக்காகவும் முருகன் கிட்ட வேண்டிப்பாரு..
==============
அண்ணா: என்னதான் இருந்தாலும் சந்திரா நகாதா-வுக்கு ஈடு இணை யாரும் இல்லீங்க.. பெண் என்றால் அவர்தான் பெண்..

settaikkaran said...

//இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பட்டென்று போட்டு உடைத்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அவர் இருந்த காலத்தில் ‘இதயம்’ பத்திரிகையில் தேவையே இல்லாமல் ‘இரு மலர்கள்’ படம் பற்றிக் குறிப்பிட்டு “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார்..” என்று எழுதித் தொலைத்துவிட்டார். //

இது சரியான தகவலாகத் தோன்றவில்லையே!

மணியன் ’இதயம்’ பத்திரிகை ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் முன்னரே சிவாஜி கணேசனின் ’இரு மலர்கள்’ படம் வெளிவந்து விட்டது உ.த! குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் இருமலர்கள் வெளிவந்த வருடத்தையாவது சரிபார்த்திருக்கலாமே? :-)

//இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள்.//

அவர்கள் மும்முரமாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற இடுகைகளை எழுதி உங்கள் பங்குக்கு நீங்களும் அவர்கள் மெல்ல அவல் கொடுக்கிறீர்கள்! :-)

சதீஷ் said...

//முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம்//

ஹி ஹி ஹி எண்ணன்ணே !!!!!
நீங்க தமிழ்நாட்டுலதான் இருக்கீங்களா?
நம்ம முதல்வர் முதல் மனைவிகளை டைவர்ஸ் செய்துவிட்டுதான் மூன்றாவது கட்டியிருக்காரா?

Unknown said...

எம்.ஜி.ஆர் - நான் ஏன் பிறந்தேனில் தான் எப்படி ஜானகியை காதலித்தேன் என எழுதியிருக்கிறார். ஜானகியின் கணவரால் - சுப்பிரமணிய பட் , ஒரு அசிஸ்ட் டைரக்டர் - எப்படி வீட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டேன்; பின்னர் பட் போலீசில் புகார் செய்ய, எம்.ஜி.ஆரை போலிசு லாக்கப் இரவு முழுவதும் வைத்திருந்தது.

மணமான பெண், ஒரு கைக்குழந்தையின் தாய், கணவனோடு வாழும் பெண் - இவற்றையெல்லாம் மீறித்தான் நடந்தார் எம்.ஜி.ஆர் என்று அவரே சொல்லியிருக்க, நீங்கள் ஜானகி அவரைக்கட்டாயப்படுத்தியதாக எழுதியிருப்பதாகல்லவா தோன்றுகிறது.

அப்புறம், ஒரு 20 வயது சின்னப்பெண்ணை, அவளின் தாயாரிடன் உள்ள அறிமுகத்தைப்பயன்படுத்தி, வசப்படுத்தி, பின்னர் ஏண்டா சரண்டைந்தோம் என வாழ்க்கையில் கஸ்டப்பட்டதை, மணியன் ‘இ.பே’ வில் எழுதிவிட்டார். எந்தப்பெண் 20 வயது மூத்தவனிடம் மையல் கொள்வான். கண்டிப்பாக இப்பெண் செய்ய்வைல்லை. தன் தாயால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு, பின்னர் அரசியல் காரணங்களுக்காக உடன்கட்டை ஏறுவேன் என்றாள்!

எதுவும் இரகசியமல்ல.

மாற்றான் மனைவியைக்கவர்ந்து கொள்ளல் மாபெரும் பாவம். அதை எதைவித்தும் சப்பைக்கட்ட முடியாது.

உங்கள் தலைப்பு - ஆணாதிக்கத்தலைப்பு.

ஆண்களை பெண்கள் கவர்ந்தார்கள் என்பது சினிமா உலகில் சரியல்ல.

உங்கள் கட்டுரையில் பல ஆண்கள் செய்த்து இருக்க, தலைப்போ ஒருதலைப்பட்ச்மாக இருக்கிறது.

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...
சூப்பர்ர்ர் பகிர்வு!! அடிக்கடி சினிமா சமப்ந்த செய்திகளை எழுதங்கண்ணா.]]]

ஆச்சரியமா இருக்கு.. இன்னைக்கு முதல் பின்னூட்டமே ஊக்கப்படுத்துவது போல் உள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது..

நன்றிம்மா..!

உண்மைத்தமிழன் said...

[[[Mrs.Menagasathia said...
ஐ.. இட்லி, தோசை, வடை, பொங்கல், சாம்பார் எல்லாமே எனக்குதான்....]]]

சாப்பிடும்மா..!

உண்மைத்தமிழன் said...

[[[viyasan said...

உண்மைத்தமிழன் என்றாலே சினிமா பைத்தியமாகத் தான் இருக்க வேன்டும் என்பதை நிரூபித்து விட்டீர்கள், நன்றி நன்றி.

நானும் வேறு எதாவது, தமிழையோ அல்லது தமிழர்களைப் பற்றியோ எழுதித்த் தொலைத்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன்.]]]

ஹா.. ஹா.. மாதத்துக்கு ஒண்ணுதான் ஸார் இப்படி..! எப்பவுமே இல்லை..!

எனது பழைய பதிவுகளைத் துழாவிப் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[கவிதா | Kavitha said...

முருகா. இந்த பதிவு தொடருமா

நிறைய மிஸ்ஸிங் போல குறுப்பா 9தாரா?

அப்புறம் எப்படி இப்படி எல்லாம் அடுத்தவங்க குடும்பத்துள்ள தலைய விட்டு பார்த்து க்ளீனா எழுது முடியுது முருகா??!! சும்ம்மா ஒரு டவுட்டு.]]]

இவ்ளோதான்னு நினைக்கிறேன்..!

படிச்சது.. கேட்டதைத்தான் எழுதியிருக்கேன். நானென்ன பக்கத்துல இருந்து பார்த்தா எழுதினேன்..!

மாட்டி விட்ருவ போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கை நாதன்/SingaiNathan said...

Change the date 24-09-2001

மற்றபடி பின்னூட்டம் பெற
அன்புடன்
சிங்கை நாதன்]]]

நன்றி சிங்கைநாதன்.. உடல் நிலை எப்படியிருக்கிறது..? குடும்பத்தினரை விசாரித்ததாகச் சொல்லவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[இளங்கோ said...
யப்பா முருகா... எவ்ளோ பெரிய பதிவு!! வாழ்க அண்ணன் உண்மைத்தமிழன்.]]]

கொஞ்சம்தான் சாமி.. இதுக்கேன் இப்படி வாயப் பொளக்குறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[கருவாச்சி said...
அண்ணா இது நல்லாயில்லே
எனக்கு 31 வயசு ஆச்சு இன்னும் ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேன்குது
ஆனா இவங்க என்னடான்னா 3, 4 பொண்டாட்டியா ஸ்.....அப்பா .......... இப்பவே கண்ணை கட்டுதே]]]

அதெல்லாம் அந்தக் காலம்.. இப்பல்லாம் முடியாது கண்ணா.. தூக்கி உள்ள போட்டு மிதிச்சிருவாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...
#3, #10 interesting facts.]]]

நன்றி இந்தியன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...
இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்ணே.]]]

ஓ.. தப்பில்லைன்னு சொல்றியா தம்பி..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
mounika v v kanuvugal padathukku munbe balu mahendravin Un kannil neer valindhaal matrum rettai vaal kurivi padangalil siriya vedangalil thondri irukuraar.]]]

புதிய தகவல் கிருஷ்.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[VISA said...

//இன்னும் உங்க காலத்துலயே இருக்கீங்ணே...//

YES]]]

ஓ.. துணைக்கு ஒருத்தரா..? இருங்க.. இருங்க.. ரவுண்டு கட்டுறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
விரைவில் தினதந்தியில் இதை படிக்கலாம்.]]]

நிச்சயம் வராது..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
பூ நடிகையின் அபார்ஷன்வரை சென்றதை ஏன் எழுதவில்லை. நடிகர் குடும்பம் மேல் இருக்கும் மரியாதையா?]]]

இந்த விஷயம் பற்றி இதுவரையில் நான் அறியவில்லை பிரதர்..!

Anonymous said...

ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு.//
நம்பவே முடியவில்லை அதிர்ச்சியாக இருக்கிறது..

sriram said...

அண்ணே..
என்னா ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை?
M.S.சுப்புலட்சுமி / சதாசிவம் தம்பதியினரை விட்டுட்டீங்களே??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

உண்மைத்தமிழன் said...

[[[Vidhoosh said...

//கருவாச்சி said...

அண்ணா இது நல்லாயில்லே எனக்கு 31 வயசு ஆச்சு இன்னும் ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேன்குது
ஆனா இவங்க என்னடான்னா 3, 4 பொண்டாட்டியா ஸ்..... அப்பா .......... இப்பவே கண்ணை கட்டுதே////

கருவாச்சி:: அண்ணன் இனிமே உங்களுக்காகவும் முருகன் கிட்ட வேண்டிப்பாரு..]]]

அதான.. அதுக்குத்தான நான் இங்கே இருக்கேன்..! வேண்டிக்கிறேன்..
==============

[[[அண்ணா: என்னதான் இருந்தாலும் சந்திரா நகாதா-வுக்கு ஈடு இணை யாரும் இல்லீங்க.. பெண் என்றால் அவர்தான் பெண்.]]]

ஹி.. ஹி.. நீ இன்னும் மறக்கலையாம்மா அவங்களை.. ம்.. தைரியம் ப்ளஸ் புத்திசாலித்தனமான பொண்ணுதான்.. சந்தேகமே இல்லை..!

Anonymous said...

பிரம்மிக்க வைக்கும் எழுத்து நடை...அருமையான தொகுப்பு..ஆவணம் போன்ற ஒரு பதிவு..பாராட்டுக்கள் சார்

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

//இந்த விஷயத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து பட்டென்று போட்டு உடைத்தவர் ‘இதயம் பேசுகிறது’ மணியன். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக அவர் இருந்த காலத்தில் ‘இதயம்’ பத்திரிகையில் தேவையே இல்லாமல் ‘இரு மலர்கள்’ படம் பற்றிக் குறிப்பிட்டு “சிவாஜி தன் சொந்த வாழ்க்கையில் அவதிப்படுவதை அப்படியே தத்ரூபமாக படத்தில் வெளிக்காட்டி நடித்திருக்கிறார்..” என்று எழுதித் தொலைத்துவிட்டார். //

இது சரியான தகவலாகத் தோன்றவில்லையே! மணியன் ’இதயம்’ பத்திரிகை ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் முன்னரே சிவாஜி கணேசனின் ’இரு மலர்கள்’ படம் வெளிவந்து விட்டது உ.த! குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் இருமலர்கள் வெளிவந்த வருடத்தையாவது சரி பார்த்திருக்கலாமே? :-)]]]

அதை நீங்கள் சரியாகப் படித்திருக்கலாம் சேட்டைக்காரன். "தேவையே இல்லாமல்" என்ற வார்த்தையை அதற்காகத்தான் சொல்லியிருக்கிறேன்.

அது வேறு ஏதோ ஒரு சினிமா தொடர்பான கட்டுரை.. அதில் போய் தேவையில்லாமல் இது பற்றி மணியன் எழுதி வைத்தார் என்றுதான் என்னிடம் சொன்னார்கள். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்..!

[[[//இன்னொரு முக்கிய விஷயத்தில்தான் தமிழகத்து மக்கள் இப்போது மும்முரமாக இருக்கிறார்கள்.//

அவர்கள் மும்முரமாக இருக்கிறார்களோ இல்லையோ, இது போன்ற இடுகைகளை எழுதி உங்கள் பங்குக்கு நீங்களும் அவர்கள் மெல்ல அவல் கொடுக்கிறீர்கள்! :-]]]

நானே பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.. என்னையெல்லாம்..!?

உண்மைத்தமிழன் said...

[[[சதீஷ் said...

//முதல் மனைவியை டைவர்ஸ் செய்யாமல் திருமணம் செய்தால் பிரபுதேவா கைது செய்யப்படுவார் என்றுகூட ஆருடம்//

ஹி ஹி ஹி எண்ணன்ணே !!!!!

நீங்க தமிழ்நாட்டுலதான் இருக்கீங்களா?

நம்ம முதல்வர் முதல் மனைவிகளை டைவர்ஸ் செய்துவிட்டுதான் மூன்றாவது கட்டியிருக்காரா?]]]

ஓ.. முதல் மனைவி புகார் செய்தால் என்ற வார்த்தை மிஸ்ஸாகிவிட்டது.. அவசரம்.. அவசரம்..!

அப்புறம் என்ன சொல்லியிருக்கீங்க..? ச்சூ.. அதெல்லாம் ராஜ வம்சம்.. சட்டமெல்லாம் மக்களுக்கு மட்டும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[kulasekaram said...

எம்.ஜி.ஆர் - நான் ஏன் பிறந்தேனில் தான் எப்படி ஜானகியை காதலித்தேன் என எழுதியிருக்கிறார். ஜானகியின் கணவரால் - சுப்பிரமணிய பட் , ஒரு அசிஸ்ட் டைரக்டர் - எப்படி வீட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டேன்; பின்னர் பட் போலீசில் புகார் செய்ய, எம்.ஜி.ஆரை போலிசு லாக்கப் இரவு முழுவதும் வைத்திருந்தது.

மணமான பெண், ஒரு கைக்குழந்தையின் தாய், கணவனோடு வாழும் பெண் - இவற்றையெல்லாம் மீறித்தான் நடந்தார் எம்.ஜி.ஆர் என்று அவரே சொல்லியிருக்க, நீங்கள் ஜானகி அவரைக் கட்டாயப்படுத்தியதாக எழுதியிருப்பதாகல்லவா தோன்றுகிறது.]]]

வேறு சில புத்தகங்களையும் படித்துதான் இதனை எழுதினேன். குறிப்பாக எம்.ஜி.சக்ரபாணி எம்.ஜி.ஆர்-ஜானகி திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றி சொல்லியிருந்த ஒரு பேட்டியை வைத்துதான் இதனை எழுதியிருக்கிறேன்..!

எம்.ஜி.ஆரின் இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் படிக்கக் கிடைத்தது. கிடைத்திருந்தால் நீங்கள் நினைத்தது போலவே எழுதியிருப்பேன்..!

தகவலுக்கு மிக்க நன்றிண்ணே..!

[[[அப்புறம், ஒரு 20 வயது சின்னப் பெண்ணை, அவளின் தாயாரிடன் உள்ள அறிமுகத்தைப் பயன்படுத்தி, வசப்படுத்தி, பின்னர் ஏண்டா சரண்டைந்தோம் என வாழ்க்கையில் கஸ்டப்பட்டதை, மணியன் ‘இ.பே’வில் எழுதி விட்டார். எந்தப் பெண் 20 வயது மூத்தவனிடம் மையல் கொள்வான். கண்டிப்பாக இப்பெண் செய்ய்வைல்லை. தன் தாயால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு, பின்னர் அரசியல் காரணங்களுக்காக உடன்கட்டை ஏறுவேன் என்றாள்!]]]

என்ன சொல்ல வர்றீங்கன்னா தெரியுது..! நான் இரண்டாவது குடும்பத்தையும் முறைப்படி செய்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.

இந்த சர்ச்சைக்குள் இறங்கவில்லை. அப்படிப் பார்த்தால் இது போல் பத்து பதிவுகள் தமிழ்த் திரையுலகத்தைப் பற்றியும், நம் சமூகத்தைப் பற்றியும் போட வேண்டும்..!

[[[உங்கள் தலைப்பு - ஆணாதிக்கத் தலைப்பு.

ஆண்களை பெண்கள் கவர்ந்தார்கள் என்பது சினிமா உலகில் சரியல்ல.
உங்கள் கட்டுரையில் பல ஆண்கள் செய்த்து இருக்க, தலைப்போ ஒருதலைப்பட்சமாக இருக்கிறது.]]]

இங்கே யாரும் அந்தப் பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லையே..? பிறகென்ன..?

தலைப்புக்கான தண்டனையை நானே ஏற்றுக் கொள்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆம்.. நடிகர் திலகத்திற்கும் இன்னொரு குடும்பம் உண்டு.//

நம்பவே முடியவில்லை அதிர்ச்சியாக இருக்கிறது..]]

எனக்கும்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

அண்ணே.. என்னா ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை...?

M.S.சுப்புலட்சுமி / சதாசிவம் தம்பதியினரை விட்டுட்டீங்களே??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.]]]

நன்றி..!

தெரியும். அதில் என்ன பிரச்சினை..? வில்லங்கம்..?!

உண்மைத்தமிழன் said...

[[[ஆர்.கே.சதீஷ்குமார் said...
பிரம்மிக்க வைக்கும் எழுத்து நடை. அருமையான தொகுப்பு. ஆவணம் போன்ற ஒரு பதிவு. பாராட்டுக்கள் சார்]]]

மிக்க நன்றி சதீஷ்..!

surivasu said...

Really good hard work done to publish this article. congrats true-tamilan....

நித்யன் said...

தலைவரே வணக்கம்.

தீவிர தேடுதலுக்குப் பிறகு இந்த கட்டுரையை வடிவமைத்திருக்கும் உங்கள் சேவை மிகச் சிறப்பானது.

சினிமாக்காரன் பொழப்பு இப்படி பொதுவில் வைத்து விவாதிக்கப்படும் நிலை எப்போதும் உள்ளதுதான். நமக்கும் அதுதானே சுவாரஸ்யம்.

தொடர்க உங்கள் சீரிய பணி.

அன்பு நித்யன்.

sriram said...

//தெரியும். அதில் என்ன பிரச்சினை..? வில்லங்கம்..?!//

பிரச்சனையெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்ல, எம்.எஸ், சதாசிவத்தை திருமணம் செய்து கொள்ளும் போது அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி உயிருடன் இருந்த்தாகக் கேள்வி. உங்க பதிவின் அடிநாதமே அதுதானே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கானா பிரபா said...

முருகா முருகா, அண்ணே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறேன் மறுக்காம வாங்கிக்கணும்.

பாலுமகேந்திரா பற்றி எழுதும் போது கை நடுக்கம் வந்திடுச்சு போல, இரண்டு தகவற் பிழைகள்
1. ஷோபாவின் முதற்படம் மூடுபனி அல்ல, அதற்கு முன்பே அழியாத கோலங்கள், அச்சாணி, நிழல் நிஜமாகிறது படங்களில் நடித்திருக்கிறார்

2. மெளனிகாவின் அந்தப் படம் வண்ண வண்ணக் கனவுகள் அல்ல வண்ண வண்ணப் பூக்கள், அதுவும் அவரது அறிமுகப் படம் அல்ல, பாலுமகேந்திராவின் முந்திய படங்களில் சின்ன வேஷங்களில் வந்திருக்கிறார்.

R. Gopi said...

\\ஒரு கோணத்தில் பார்த்தால் சமூகத்தின் பார்வையில் இது குற்றம். ஆனால் தனி மனித விருப்பத்திலும், அவர்களது பார்வையிலும் இதில் தவறில்லை. தவிர்க்க முடியாதது.\\


எல்லாக் குற்றமும் இப்படிதான்னே.

தனி மனித விருப்பம் அவ்ளோ முக்கியம்னா அந்த மாதிரி உள்ளவங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. முதல் கல்யாணத்தில் பிறந்த குழந்தைகள் நட்டாற்றில் நிற்கும். சரி இப்போ ரெண்டாம் கல்யாணம். இதோட நிக்கும்னு யார் உத்தரவாதம் தர முடியும்?

எல்லாம் சரி, இப்ப முத கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட நெலம என்ன? அவளும் தாராளமா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்றீங்களா? எத்தன ஆம்பளைங்க ரெடியா இருக்காங்க அந்த மாதிரி உள்ள பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க?

\\காதல் எப்போது, யார் மீது யாருக்கு வரும் என்பதைச் சொல்லிவிட முடியாது\\

நீங்க சொல்லி இருக்குற எல்லா உதாரணங்களிலும் காதல்தான் பிரதானமா இருந்தது அப்படின்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?

உண்மைத்தமிழன் said...

[[[surivasu said...
Really good hard work done to publish this article. congrats true-tamilan....]]]

நன்றி சூரிவாசு..!

உண்மைத்தமிழன் said...

[[[நித்யகுமாரன் said...

தலைவரே வணக்கம். தீவிர தேடுதலுக்குப் பிறகு இந்த கட்டுரையை வடிவமைத்திருக்கும் உங்கள் சேவை மிகச் சிறப்பானது.

சினிமாக்காரன் பொழப்பு இப்படி பொதுவில் வைத்து விவாதிக்கப்படும் நிலை எப்போதும் உள்ளதுதான். நமக்கும் அதுதானே சுவாரஸ்யம்.

தொடர்க உங்கள் சீரிய பணி.

அன்பு நித்யன்.]]]

நன்றி நித்தியா.. சந்தடிச்சாக்குல திட்டுற..! ம்.. நல்லாயிரு..!

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

//தெரியும். அதில் என்ன பிரச்சினை..? வில்லங்கம்..?!//

பிரச்சனையெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்ல, எம்.எஸ், சதாசிவத்தை திருமணம் செய்து கொள்ளும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி உயிருடன் இருந்த்தாகக் கேள்வி. உங்க பதிவின் அடிநாதமே அதுதானே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

சதாசிவத்திற்கு ஏற்கெனவே மனைவி இருந்ததாக நான் படித்தவரையில் தெரியவில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...

முருகா முருகா, அண்ணே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறேன் மறுக்காம வாங்கிக்கணும்.

பாலுமகேந்திரா பற்றி எழுதும் போது கை நடுக்கம் வந்திடுச்சு போல, இரண்டு தகவற் பிழைகள்

1. ஷோபாவின் முதற் படம் மூடுபனி அல்ல, அதற்கு முன்பே அழியாத கோலங்கள், அச்சாணி, நிழல் நிஜமாகிறது படங்களில் நடித்திருக்கிறார்

2. மெளனிகாவின் அந்தப் படம் வண்ண வண்ணக் கனவுகள் அல்ல வண்ண வண்ணப் பூக்கள், அதுவும் அவரது அறிமுகப் படம் அல்ல, பாலுமகேந்திராவின் முந்திய படங்களில் சின்ன வேஷங்களில் வந்திருக்கிறார்.]]]

நன்றி தம்பி.. திருத்திவிட்டேன். விக்கிபீடியா பக்கமே போகாமல் இருந்துவிட்டேன்..! அதோடு எந்தப் படம் முதலில் வந்தது என்பதை தேட முடியவில்லை.. அதுதான் காரணம்..!

மெளனிகா பற்றி ஏற்கெனவே பதிவர் கிருஷ்குமாரும் குறிப்பிட்டிருக்கிறார். நான் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் அளவுக்குக் கவனத்தில் கொள்ளவில்லை..)))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[Gopi Ramamoorthy said...

\\ஒரு கோணத்தில் பார்த்தால் சமூகத்தின் பார்வையில் இது குற்றம். ஆனால் தனி மனித விருப்பத்திலும், அவர்களது பார்வையிலும் இதில் தவறில்லை. தவிர்க்க முடியாதது.\\

எல்லாக் குற்றமும் இப்படிதான்னே.
தனி மனித விருப்பம் அவ்ளோ முக்கியம்னா அந்த மாதிரி உள்ளவங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. முதல் கல்யாணத்தில் பிறந்த குழந்தைகள் நட்டாற்றில் நிற்கும். சரி இப்போ ரெண்டாம் கல்யாணம். இதோட நிக்கும்னு யார் உத்தரவாதம் தர முடியும்?

எல்லாம் சரி, இப்ப முத கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட நெலம என்ன? அவளும் தாராளமா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்றீங்களா? எத்தன ஆம்பளைங்க ரெடியா இருக்காங்க அந்த மாதிரி உள்ள பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க?]]]

நியாயமான கேள்விகள்தான் கோபி. ஆனால் பதில்..?

அவர்களுடைய நினைப்பைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.

\\காதல் எப்போது, யார் மீது யாருக்கு வரும் என்பதைச் சொல்லிவிட முடியாது\\

நீங்க சொல்லி இருக்குற எல்லா உதாரணங்களிலும் காதல்தான் பிரதானமா இருந்தது அப்படின்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?]]]

முதலில் கவன ஈர்ப்பும், விருப்பமும் இருந்தால்தானே கல்யாணமே நடக்கும். இந்த விருப்பத்திற்குப் பெயர்தானே காதல்..! இதில் ஐம்பது சதவிகிதம் பாதுகாப்பு என்றும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்..

IKrishs said...

Vikatan raviprakash blog il:
http://vikatandiary.blogspot.com/2009/10/blog-post_28.html

இதில் varum ரத்னமாலா பற்றிய தகவலும் ,மைனாவதி பற்றிய தகவலும் ஒன்றுதானா ?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...

Vikatan raviprakash blog il:

http://vikatandiary.blogspot.com/2009/10/blog-post_28.html

இதில் varum ரத்னமாலா பற்றிய தகவலும், மைனாவதி பற்றிய தகவலும் ஒன்றுதானா ?]]]

கிருஷ்..

இவர்தான் என்று நினைக்கிறேன். ஆனால் ரத்னமாலா பெயர்தான் குழப்புகிறது.. என்னிடம் தகவல் சொன்னவர்கள் அனைவரும் மைனாவதி என்றுதான் சொன்னார்கள்..!

மேலும் விசாரிக்கிறேன்..! தகவலுக்கு மிக்க நன்றி..!

IKrishs said...

மேலும் மைனாவதி விஜய் டிவி சீரியல் ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு நடித்தார்.. (நடிகர் திலீப் பும் நடித்தது)

sriram said...

http://www.sawf.org/newedit/edit10312005/bookreview.asp

இதப் படிங்க அண்ணே..
நான் முதலில் சொன்னதில் ஒரு திருத்தம்.
1936 இல் இருந்து M.S சதாசிவத்துடன் வாழ்ந்து வந்தார், 1939 இல் முதல் மனைவி அபிதகுசலாம்பாள் இறந்த்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Book Name: MS: A Life in Music by T. J. S. George
Publisher: Harper Collins
Pages: 303
Year 2004
Price: Rs.495

கெடச்சா படிச்சு பாருங்கண்ணே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

காலப் பறவை said...

ஒரு பழம்பெரும் வசனகர்த்தாவ விட்டுடீங்களே உ. தா. :)
என்ன ஆட்டோ பயமா?

ப்ரியமுடன் வசந்த் said...

கார்த்திக் சரத் பிரதாப் போத்தன் காணோமே முருகா!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
மேலும் மைனாவதி விஜய் டிவி சீரியல் ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு நடித்தார்.. (நடிகர் திலீப்பும் நடித்தது)]]]

எனக்குத் தெரியவில்லை கிருஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[sriram said...

http://www.sawf.org/newedit/edit10312005/bookreview.asp

இதப் படிங்க அண்ணே..
நான் முதலில் சொன்னதில் ஒரு திருத்தம்.
1936 இல் இருந்து M.S சதாசிவத்துடன் வாழ்ந்து வந்தார், 1939 இல் முதல் மனைவி அபிதகுசலாம்பாள் இறந்த்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Book Name: MS: A Life in Music by T. J. S. George
Publisher: Harper Collins
Pages: 303
Year 2004
Price: Rs.495

கெடச்சா படிச்சு பாருங்கண்ணே..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.]]]

அண்ணே.. இந்தப் புத்தகத்தை இதுவரையில் நான் படித்ததில்லை. படிக்கிறேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[காலப் பறவை said...
ஒரு பழம்பெரும் வசனகர்த்தாவ விட்டுடீங்களே உ. தா. :) என்ன ஆட்டோ பயமா?]]]

ஹா.. ஹா.. இருக்காதா பின்ன..? என்ன இருந்தாலும் எனக்கும் குழந்தை, குட்டியெல்லாம் இருக்கில்ல..?))))))))

உண்மைத்தமிழன் said...

[[[ப்ரியமுடன் வசந்த் said...
கார்த்திக் சரத் பிரதாப் போத்தன் காணோமே முருகா!]]]

கார்த்திக் - இரண்டு மனைவிகள்தான். ஆனால் இது போன்று பிரச்சினையில்லை..!

சரத், பிரதாப்போத்தன் இதனுடன் தொடர்பில்லையே வசந்த்..!

rse said...

வணக்கம் சார்

நலமா

எஸ் எஸ் ஆரும விஜயகுமாரியும் பிரிந்தது அவருடைய குடிப் பழக்கத்தினால் அல்ல . உண்மையா எழுதினால் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடுவாங்க . அதனால maila எழுதுறேன் .

ஜெமினி கணேசன் டாபிக்ல ஒரு போட்டோல்ல ஒருத்தவங்க படுத்து இருக்காங்களே அவங்க யாரு சார் ?

சாவித்திரியா ?


நன்றி

R.Gopi said...

தலைவா....

இந்த லிஸ்ட்ல முக்கியமாக “ ராதிகா “ மற்றும் “சரத்குமார்” பற்றிய செய்தி காணுமே!!

R.Gopi said...

தலைவா....

இந்த லிஸ்ட்ல முக்கியமாக “ ராதிகா “ பற்றிய செய்தி காணுமே!!

உண்மைத்தமிழன் said...

[[[julie said...

வணக்கம் சார்

நலமா

எஸ் எஸ் ஆரும விஜயகுமாரியும் பிரிந்தது அவருடைய குடிப்பழக்கத்தினால் அல்ல. உண்மையா எழுதினால் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடுவாங்க . அதனால maila எழுதுறேன்.]]]

எழுதுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!

[[[ஜெமினி கணேசன் டாபிக்ல ஒரு போட்டோல்ல ஒருத்தவங்க படுத்து இருக்காங்களே அவங்க யாரு சார் ?
சாவித்திரியா ?

நன்றி]]]

ஆமாம்.. மரணத் தறுவாயில் இருக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது..!

எப்படி இருந்தவர்...?

உண்மைத்தமிழன் said...

[[[R.Gopi said...
தலைவா.... இந்த லிஸ்ட்ல முக்கியமாக “ ராதிகா “ மற்றும் “சரத்குமார்” பற்றிய செய்தி காணுமே!!]]]

அவங்ககிட்ட மேட்டர் ஒண்ணும் இல்லியேண்ணே..!

Saran said...

//////பிரச்சனையெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்ல, எம்.எஸ், சதாசிவத்தை திருமணம் செய்து கொள்ளும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி உயிருடன் இருந்த்தாகக் கேள்வி. உங்க பதிவின் அடிநாதமே அதுதானே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

சதாசிவத்திற்கு ஏற்கெனவே மனைவி இருந்ததாக நான் படித்தவரையில் தெரியவில்லை..!//////

எம் எஸ். சுப்புலட்சுமி- ஓர் அக்கினிப்பிரவேசம்
http://www.jeyamohan.in/?p=4607

ஸ்ரீராம். said...

விவரங்கள் சுவாரஸ்யம்... சிவாஜி பற்றிய நியூஸ் எனக்குப் புதுசு. கமலஹாசனை யார் யார் எல்லாம் வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் சுவாரஸ்யம். கலைஞர்களுக்கு பலவீனம்தான் அதிகம் இருக்கும் போல... !!

க்ருபா said...

நல்ல தொகுப்பு & உழைப்புங்க.

இப்படி அடிக்கடி எழுதுங்க. பர்சனல் லைஃப்தான்னு இல்ல, பழைய படம் பற்றி, படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பற்றி, ரசிகர்கள் பற்றி எல்லாமா படிக்க நல்லா இருக்கு. அதுவும் இப்படி போர் அடிக்காத நடையில்.

பொழுதுநல்லா போகும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் பதிவுகளைப் படிக்கநேரும் சூழலும் குறையும் :-)

Prathap Kumar S. said...

அண்ணே... உங்க சமுதாயப்பணி தொடர்ந்து சிறப்பாக நடக்கட்டும்...நாட்டுக்குத்தேவையான பல
அரிய சரித்திர நிகழ்வுகளை தெரிந்துக்கொண்டேன்...மிக்க நன்றி :))

பித்தன் said...

neththu verum ottu mattum pottuten moththathayum padichchi paarththaaa athirchiyum aacharyamaavum irukku. ungal uzhaippu therigirathu. ithupol katturaikalil sirsila thavarugal nadappathu thavirkka iyalaathathu ------ atha oththukkura unga nerma enakku pidichchirukku.

இவன் சிவன் said...

சூப்பர் அண்ணே.... கண்டிப்பா இது உங்களோட one of the Best Post. இது கண்டிப்பா எதாவுது வெகுஜன பத்திரிக்கையில் வரவேண்டியது. நடிகர் திலகம் மேட்டர் ரொம்ப அதிர்ச்சி. உங்களோட உழைப்பு தெரிகிறது. சினிமா சம்பந்தமா innum நீங்கள் நிறைய எழுத வேண்டும் அண்ணாச்சி.

vanathy said...

அண்ணா ,
ஒரு நண்பர் சொன்ன மாதிரி தலைப்பு எனக்கு சரியாகப் படவில்லை.ஒரு சம்பவம் நடக்கும்போது அதற்கு ஆண் பெண் இருவரும்தானே காரணம் ,அப்படியிருக்கும்போது நடிகைகளை மட்டும் எப்படி திருடினார்கள் என்று கூறமுடியும்..இதையே மனைவிகளை வஞ்சித்த நடிகர்கள் /அல்லது சினிமா பிரமுகர்கள் என்று போட்டிருக்கலாம்தானே?
ஆனாலும் இவ்வளவு கடுமையாக உழைத்து விபரங்கள் சேகரித்து ஆய்வு செய்து எங்களுக்கு அர்ப்பணம் செய்ததற்காக உங்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு வாக்கு அளித்தேன்..
பெரும்பாலான நடிகர் நடிகைகள் எனது அப்பா ,அப்பப்பா (எங்கள் தமிழில் அப்பப்பா உங்கள் தமிழில் தாத்தா) காலத்தில் நடித்தவர்கள் ஆனாலும் ஒரு நட்சத்திர தகவலும் தந்துள்ளீர்கள்.சிவாஜிக்கு இன்னொரு மனைவி பிள்ளைகள் இருந்தது எனக்கு தெரியாது.
சிலர் இது தனிப்பட்ட சொந்த விஷயங்கள் இவற்றை ஏன் எழுத வேண்டும் என நினைக்கலாம்.துரதிஷ்டவசமாக பொது மக்களின் மத்தியில் தொழில் செய்பவர்கள் - கலைஞர்கள் ,அரசியல்வாதிகள் போன்றோரின் சொந்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அலசப் படுவதை தவிர்க்க முடியாது.எந்த மக்களின் ஆதரவால் பேரும் புகழும் வருகிறதோ அந்த மக்கள் நல்லதையும் பேசுவார்கள் கெட்டதையும் பேசுவார்கள்.
முன்பு சிம்ரன் கமல் கிசுகிசு படித்த ஞாபகம் சும்மா வெறும் கிசுகிசு என்றுதான் நினைத்தேன் அப்படிஎன்றால் பல கிசுகிசுக்கள் உண்மையின் அடிப்படையில்தான் போடப்படுகின்றனவா?

-வானதி

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,நான் படித்த ஆகச்சிறந்த படைப்பு இதுவே,உங்கள் கடின உழைப்புக்கு ஒரு சல்யூட்

Unknown said...

இதில் சிவாஜிகணேசன் பற்றிய செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது .அருமையானாகருத்துக்களுக்கும் உண்மை செய்திகளுக்கும் நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[Singa said...

//பிரச்சனையெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்ல, எம்.எஸ், சதாசிவத்தை திருமணம் செய்து கொள்ளும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி உயிருடன் இருந்த்தாகக் கேள்வி. உங்க பதிவின் அடிநாதமே அதுதானே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]

சதாசிவத்திற்கு ஏற்கெனவே மனைவி இருந்ததாக நான் படித்தவரையில் தெரியவில்லை..!//////

எம் எஸ். சுப்புலட்சுமி- ஓர் அக்கினிப்பிரவேசம்

http://www.jeyamohan.in/?p=4607]]]

நல்லது.. தெரிந்து கொண்டேன்.. நன்றி!

Riyas said...

அடி ஆத்தி இத்தன பேரா..பேஸ் பேஸ்.. வாழ்க சினிமாவுலகம்.

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
விவரங்கள் சுவாரஸ்யம்... சிவாஜி பற்றிய நியூஸ் எனக்குப் புதுசு. கமலஹாசனை யார் யார் எல்லாம் வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் சுவாரஸ்யம். கலைஞர்களுக்கு பலவீனம்தான் அதிகம் இருக்கும் போல]]]

இதற்கு கலைஞர்கள் மட்டுமே அடையாளமல்ல.. பொது மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[க்ருபா said...
நல்ல தொகுப்பு & உழைப்புங்க. இப்படி அடிக்கடி எழுதுங்க. பர்சனல் லைஃப்தான்னு இல்ல, பழைய படம் பற்றி, படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பற்றி, ரசிகர்கள் பற்றி எல்லாமா படிக்க நல்லா இருக்கு. அதுவும் இப்படி போர் அடிக்காத நடையில். பொழுது நல்லா போகும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் பதிவுகளைப் படிக்க நேரும் சூழலும் குறையும் :-)]]]

அப்படியா.. கருத்துக்கு நன்றி க்ருபா..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே. உங்க சமுதாயப் பணி தொடர்ந்து சிறப்பாக நடக்கட்டும். நாட்டுக்குத் தேவையான பல
அரிய சரித்திர நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி:))]]]

ம்.. செம நக்கலு..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
neththu verum ottu mattum pottuten moththathayum padichchi paarththaaa athirchiyum aacharyamaavum irukku. ungal uzhaippu therigirathu. ithupol katturaikalil sirsila thavarugal nadappathu thavirkka iyalaathathu ------ atha oththukkura unga nerma enakku pidichchirukku.]]]

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பித்தன்ஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[இவன் சிவன் said...
சூப்பர் அண்ணே.... கண்டிப்பா இது உங்களோட one of the Best Post. இது கண்டிப்பா எதாவுது வெகுஜன பத்திரிக்கையில் வரவேண்டியது. நடிகர் திலகம் மேட்டர் ரொம்ப அதிர்ச்சி. உங்களோட உழைப்பு தெரிகிறது. சினிமா சம்பந்தமா innum நீங்கள் நிறைய எழுத வேண்டும் அண்ணாச்சி.]]]

சொல்லிட்டீங்கள்ல.. எழுதிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

வானதி..

நீங்கள் சொன்னதுபோலவே மனைவிகளை வஞ்சித்த பெண்கள் நடிகர்கள் என்றும் சொல்லலாம்..! ஆனால் இதில் இவர்களுக்குத் துணை போவது பெண்கள்தான் என்பதால் அப்படி எழுதினேன். மன்னிக்கவும்..!

சில கிசுகிசுக்கள் உண்மையைத்தான் சொல்லும்..! பல கிசுகிசுக்கள் போலியாக உருவெடுக்கப்பட்டிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, நான் படித்த ஆகச் சிறந்த படைப்பு இதுவே, உங்கள் கடின உழைப்புக்கு ஒரு சல்யூட்.]]]

நன்றி சி.பி.சி.!

உண்மைத்தமிழன் said...

[[[வாழ்க்கை வாழ்வதற்கே said...
இதில் சிவாஜிகணேசன் பற்றிய செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அருமையானா கருத்துக்களுக்கும் உண்மை செய்திகளுக்கும் நன்றி.]]]

நன்றிகள் ஸார்.. என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது..! வாழ்க வளமுடன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...
அடி ஆத்தி இத்தன பேரா.. பேஸ் பேஸ்.. வாழ்க சினிமாவுலகம்.]]]

சினிமாவுலகம் தவிர்த்த பொதுவுலகத்தில் இதைவிட அதிகமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன ரியாஸ்..!

Ponmanian said...

(1) எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி திருமணமான சில வருடங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தார். படுத்த படுக்கையாகவில்லை. படங்களில் தன்னோடு கதாநாயகியாக நடித்தவரும் கிருஷ்ணன் பட் என்னும் (கன்னடப் பார்ப்பனர்) உதவி இயக்குநரின் மனைவியும் அப்பு என்னும் இரவீந்திரனின் (இவர் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டார் என்னும் வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவர்.) தாயுமான வி.என்.ஜானகியை (மலையாளப் பார்ப்பனர்) எம்.ஜி.ஆர் காதலித்தார். இதனால் கடுப்படைந்த கிருஷ்ணன் பட் வி.என்.ஜானகியை வர்ணத்து எழுதிய காதல் கடிதங்களை அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலவற்றிற்கு விற்க முயன்றார். அதனை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை ஆட்களை வைத்து கடத்திச் சென்று அடித்து மிரட்டி அத்தனை கடிதங்களையும் பறித்துக்கொண்டு சிறிது பணம் கொடுத்து கர்நாடகத்திற்கு விரட்டிவிட்டார். அதன் பின்னர் எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் ரோடு வீட்டிற்கு அருகிலேயே வேறொரு வீட்டில் வி.என்.ஜானகியை குடிவைத்தார். 1962 தேர்தல் நேரத்தில் சதானந்தவதி இறந்த பின்னர் 18 ஆண்டு காலம் தன்னுடைய துணைவியாக இருந்த வி.என்.ஜானகியை திருமணம் செய்துகொண்டார். (ஆதாரம்: எம்.ஜி.ஆர் எழுதிய “நான் ஏன் பிறந்தேன்?” கட்டுரைத் தொடர்; நடிகர் ஒருவரின் காதல் திருமணத்தில் எம்.ஜி.ஆர். ஆற்றிய உரை; நாத்திகம் இராமசாமி எழுதிய “நானறிந்த காமராஜர்” தொடர்.)

(2) சிவாஜி-மைனாவதி காதலைப் போல சிவாஜி-சந்தியா காதலும் இரகசியமானது. இதனைப் பற்றி தினமலர் வாரமலர் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

(3) சாவித்திரியைப் பிரிந்த ஜெமினிகணேசனின் துயரத்தை ராஜசிறீ என்னும் நடிகை ஆற்றினார். சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு இடையே மோதல் வந்து பிரிந்தார்கள். பின்னர் வேறு சூழலில் ஜெமினிகணேசன் தன்னுடைய வயிற்றில் சுட்டுக்கொண்ட பொழுது இல்லஸ்ட்ரேட் வீக்லி ஜெமினியின் காதலிகளைப் பற்றி ஒரு கவர்ஸ்டோரியே எழுதியது. காலம்போன கடைசியில் தன்னுடைய ரசிகையென கூறிக்கொண்ட 25வயது இளம்பெண் ஒருவரை கணேசன் மணக்க அதுவே அவர்கள் வீட்டில் பெரும் பிரச்சனையானது.

Anonymous said...

சார் சூப்பர் ஸ்டார் REAL சூப்பர் ஸ்டார்தான்..... ஆமா கமல்+ஸ்ரீதேவிய விட்டுடீங்களே.... கமல்+சிம்ரன விட அது பிரபலமே...

ரஜினி, அஜித், சூர்யா , விக்ரம் , தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஒரு சலுட் ......

உண்மைத்தமிழன் said...

பொன்மணியன் ஸார்..

தகவல்களுக்கு மிக்க நன்றி..!

சிவாஜி-சந்தியா மேட்டர் எனக்குப் புதியது..!

ஜெமினி விஷயம்தான் ஊருக்கே தெரியுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[நண்பேன்டா. நண்பேன்டா. said...

சார் சூப்பர் ஸ்டார் REAL சூப்பர் ஸ்டார்தான். ஆமா கமல்+ஸ்ரீதேவிய விட்டுடீங்களே. கமல்+சிம்ரன விட அது பிரபலமே.]]]

இதில் உண்மையில்லை..!

தமிழன்பன் said...

இந்தக் கட்டுரை களவாடப்பட்ட விபரம் தெரியுமா
http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4867

ஸாதிகா said...

அருமையான அலசல்

Santhappanசாந்தப்பன் said...

கணவனைத் திருடும் பெண்கள்னு ஏன் தலைப்பு!

பல பெண்களை நாடும் ஆண்கள்(நடிகர்கள்)னு தலைப்பு வச்சுருக்கலாம்ல! பெண்களை திட்டமிட்டு இப்டி கேவலபடுத்தும் உங்களை பெண்ணியவாதிகள், பதிவுலக நாட்டாமைகள் கட்டம் கட்டி அடிக்க வாழ்த்துகிறேன்! :‍))))))


மத்தபடி அட்டகாசமான தகவல்கள்.. பிரச்சனை வரும்னு, சிலபல விடயங்களை தவிர்த்த மாதிரி தெரியுது. முக கூட கோடம்பாக்கம் தானே அவரை விட்டுபோட்டீங்க??? :‍)))

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன்பன் said...

இந்தக் கட்டுரை களவாடப்பட்ட விபரம் தெரியுமா?

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4867]]]

விடுங்க. எப்பவும் நடக்கிறதுதானே இது..?

உண்மைத்தமிழன் said...

[[[ஸாதிகா said...
அருமையான அலசல்.]]]

நன்றி ஸாதிகா..!

உண்மைத்தமிழன் said...

[[[Santhappan சாந்தப்பன் said...

கணவனைத் திருடும் பெண்கள்னு ஏன் தலைப்பு!

பல பெண்களை நாடும் ஆண்கள்(நடிகர்கள்)னு தலைப்பு வச்சுருக்கலாம்ல! பெண்களை திட்டமிட்டு இப்டி கேவலபடுத்தும் உங்களை பெண்ணியவாதிகள், பதிவுலக நாட்டாமைகள் கட்டம் கட்டி அடிக்க வாழ்த்துகிறேன்! :‍))))))]]]

ஏற்கெனவே நாலைஞ்சு பேரு திட்டிட்டாங்க. இப்ப நீங்க.. சரி கும்மிருங்க.. வாங்கிக்கிறேன்.. தப்புதான்..!

[[[மத்தபடி அட்டகாசமான தகவல்கள். பிரச்சனை வரும்னு, சில பல விடயங்களை தவிர்த்த மாதிரி தெரியுது. மு.க. கூட கோடம்பாக்கம்தானே அவரை விட்டுப் போட்டீங்க??? :‍)))]]]

எல்லாம் ஒரு காரணமாத்தான்..! எதுக்குன்றேன்..?

498ஏ அப்பாவி said...

//இங்கே குறிப்பிட்டது கொஞ்ச பேர்தான். திரைத்துறையைத் தவிர்த்து மற்ற சமூகத்தினரிடையே தேடினால் ஊருக்கு நூறு பேராவது இப்படியிருப்பார்கள். அவர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்வார்கள். அவைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.//


ஆம் உண்மைதான்! இப்பொழுது அதிக கொலைகளுக்கு காராணம் கள்ளக்காதல்... மற்றும் தற்பொழுது குடும்ப நல நிதிமன்றம் வார விடுமுறைகளிலும் நடந்துவருகின்றது இன்னும் சில நாட்களில் 24மணிநேர சேவை வருங்காலத்தில் ஏற்பட சாத்திகூறுகள் உள்ளன..

இருவர் பிரிவில் அவர்களை மிரட்டிஉருட்டி வாழவைக்க முற்பட்டால் அதிக இழப்பிடுகளே ஏற்படும்...

உண்மைத்தமிழன் said...

[[[498ஏ அப்பாவி said...

//இங்கே குறிப்பிட்டது கொஞ்ச பேர்தான். திரைத்துறையைத் தவிர்த்து மற்ற சமூகத்தினரிடையே தேடினால் ஊருக்கு நூறு பேராவது இப்படியிருப்பார்கள். அவர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்வார்கள். அவைகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கும்.//

ஆம் உண்மைதான்! இப்பொழுது அதிக கொலைகளுக்கு காராணம் கள்ளக்காதல். மற்றும் தற்பொழுது குடும்ப நல நிதிமன்றம் வார விடுமுறைகளிலும் நடந்து வருகின்றது இன்னும் சில நாட்களில் 24 மணி நேர சேவை வருங்காலத்தில் ஏற்பட சாத்திகூறுகள் உள்ளன..

இருவர் பிரிவில் அவர்களை மிரட்டி உருட்டி வாழ வைக்க முற்பட்டால் அதிக இழப்பிடுகளே ஏற்படும்.]]]

வேறு வழியில்லை.. நவீன உலகம் மனித உறவுகளுக்குக் கொடுத்திருக்கும் விலை இதுதான் என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

இந்த எண்ணிக்கை இனி கூடிக் கொண்டேதான் போகும். குறையாது.

abeer ahmed said...

See who owns pomme.net or any other website:
http://whois.domaintasks.com/pomme.net

abeer ahmed said...

See who owns lissaexplains.com or any other website.