ஈரோடு வலைப்பதிவர் குழுமச் சங்கம விழா - எனது பார்வை..!


30-12-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதற்கு மேலும் இது பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்று நினைத்துதான் அவசரமாக இதனை எழுதத் துவங்குகிறேன். “18-ம் தேதி நடந்த நிகழ்வுக்கு 12 நாட்கள் கழித்து பதிவா..?” என்று கோபப்படாதீர்கள். அப்பன் முருகனின் திருவிளையாடலில் அலுவலகப் பணியும், வீட்டுப் பணிகளும் ஏராளம். அலுவலகத்தில் நிஜமாகவே வேலை பார்க்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள். தாங்க முடியவில்லை. கொஞ்சம் பொறுத்து நிதானமாக எழுதலாம் என்று நினைத்தால், தலைவர் ஜாக்கியாரே திடீரென்று பதிவை போட்டுவிட்டார். தலைவரே பதிவு போட்ட பின்பு, நான் ஒரு சாமான்யமான சின்னப் பதிவன்.. இதற்கு மேலும் பதிவு எழுதாமல் இருந்தால் அவருக்கு மரியாதையாக இருக்காது என்பதால் எனது ஈரோடு சுற்றுப்பயணத்தை இதில் இருந்தே துவங்குகிறேன்..!

அது என்றைக்கு என்று எனக்கு நினைவில்லை. திடீரென்று நமது ஈரோட்டு சிங்கம் கதிர் என்னை தொலைபேசியில் அழைத்து சங்கமம் நிகழ்ச்சி பற்றிச் சொன்னார். வாழ்த்துக்களைக் கூறினேன். கூடவே, “உங்களை அந்த நிகழ்ச்சியில் பாராட்டப் போறோம்ண்ணே..” என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு. “நிசமாவா..?” என்றேன். “ஆமாம்..” என்றார். “என்னைவிட சீனியரெல்லாம் இருக்காங்க கதிரு..” என்றேன். “அதெல்லாம் மேட்டர் இல்லை. உங்களை பாராட்டணும்னு நினைச்சிருக்கோம்.. அவ்ளோதான்..” என்றார் தீர்மானமாக. சங்கடமாக இருந்தது எனக்கு..! “வேறு யார், யாரை பாராட்டப் போறீங்க..? லிஸ்ட் சொல்ல முடியுமா..?” என்றேன். “ஸாரிண்ணே.. அது குழுவின் முடிவு.. நானே தனிப்பட்டு வெளியிட முடியாது. ஆனால் உங்களை தேர்வு செய்திருக்கிறோம்.. வருவீங்களா? மாட்டீங்களா..?” என்றார். நானும் எனது முடிவை இறுதியாகச் சொல்லாமல் “2 நாள் கழித்துச் சொல்றனே..” என்றேன். “சரி” என்று விட்டுவிட்டார் கதிர்.

1 நாள் முழுவதும் யோசித்தேன். வலையுலகத்தில் எனக்கு முன்னோடிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு நமக்குக் கொடுத்து, நாம் வாங்கிக் கொண்டால் அது தர்மசங்கடமாகிவிடுமே என்றுதான் மிகவும் யோசித்தேன். விருது கொடுப்பது வலையுலகத்திற்கு சம்பந்தமில்லாத தனியார் நிறுவனமல்ல.. வலையுலகக் குழுமம்.. தனியார் நிறுவனங்களோ, அமைப்புகளோ தாங்களே தேர்வு செய்து விருதளித்தால் அது அவர்களின் முடிவு என்று சொல்லிவிடலாம். ஆனால் வலையுலகக் குழுமமே, தமது சீனியர்களை விட்டுவிட்டு தற்போது எழுதி வருபவர்கள் என்ற பட்டியல்படி தேர்வு செய்தால் அது தவறானதாக இருக்குமே என்பது எனது கருத்து..!

ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மனம் ஊசலாடியது. “கடைசியாக நம்ம கதிர்தானே.. நிச்சயமா நல்லவிதமாத்தான் செஞ்சிருப்பாரு.. நிச்சயம் சீனியர்களெல்லாம் உடன் இருப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டு கதிருக்கு போன் செய்து “யெஸ்” சொன்னேன்.. சந்தோஷப்பட்ட கதிர், “போக்குவரத்து, தங்குமிட வசதியையெல்லாம் ஜாபர்தான் செய்றாருண்ணே.. அவரே உங்களை கான்டக்ட் செய்வாரு. நீங்களும் அவர்கிட்ட தொடர்புல இருங்க” என்று சொல்லி போனை வைத்தார் கதிர். அடுத்த நாளில் எனது பயோடேட்டா கேட்டு ஒரு தனி மெயில் வந்திருந்தது. அதையும் வேலைப் பளு காரணமாக 1 நாள் கழித்தே யோசித்து தட்டச்சி அனுப்பி வைத்தேன். 

14-ம் தேதி முதல் சென்னையில் துவங்கிய 9-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டி அலுவலகத்தில் 9 நாட்கள் சம்பளமில்லாத விடுப்பெடுத்துவிட்டு உலக சினிமாவில் ஐக்கியமாகியிருந்தேன். உடன் படம் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் ஜாக்கியார், ஈரோட்டுக்கு எப்படி செல்வது, எப்போது செல்வது என்று அடிக்கடி பிளான் பேசிக் கொண்டேயிருந்தார். அப்போது எங்களுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த பட்டர்பிளை சூர்யாவை துணைக்கழைத்து, “எப்படியாவது முந்தின நாள் ராத்திரியே ஈரோட்டு போயி ரூமை போடுவோம்.. கட்டிங்கை ஊத்துவோம்.. திங்க் பண்ணுவோம்..” என்ற ஐடியாவில் பரபரத்தார்.  “13-ம் தேதி இரவு கிளம்பி 14-ம் தேதி காலைல போலாமே.. நான் அப்படித்தான் போகப் போறேன்..” என்று நான் சொன்னதற்கு தலைவர் ஜாக்கியார், என்னை பார்த்து உதிர்த்த வார்த்தைகளை நானே வெளியில் சொல்லி எனக்கு இப்பவும் இருக்குற கொஞ்சூண்டு மானத்தையும் கப்பலேத்திக் கொள்ள விரும்பவில்லை. 

இதற்கிடையில் சென்னையில் இருந்து செல்கிற பதிவர்களின் காரில் டிக்கியிலாவது தொற்றிக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் நான் மணிஜியுடன் மாறி, மாறி செல்பேசியும் மனுஷன் அசரவில்லை. சுப்ரமணியம்சுவாமியை போல வைச்சிருக்கேன். எப்போ வெளில விடணுமோ அப்பத்தான் விடுவேன்ற மாதிரியே “சீட்டு இல்லை. சீட்டு இருக்கு. இடம் இல்லை.. இடம் இருக்கு.. ஆள் நிறைய இருக்கு.. பார்க்கலாமே.. நீயும் வர்றியா..? ஏண்ணே ஈரோட்டுக்கு பஸ்ஸே இல்லையா..?” என்றெல்லாம் மாற்றி, மாற்றி ‘கதை’ விட்டுக் கொண்டிருந்தார். 

எனக்குப் புரிந்தது..! ‘இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?’ன்னுட்டு பஸ் பயணமே என்று உறுதி செய்து கொண்டேன். ஆனாலும் தலைவர் ஜாக்கியார் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்து, மணிஜியின் காரில் தொற்றிக் கிளம்பிவிட்டார்.

டிசம்பர் 13 அன்று லேசான காய்ச்சலால் உலக சினிமாவுக்கும் போக முடியவில்லை. வீட்டில் இருந்தேன். காலையிலேயே ஜாபருக்கு போன் செய்து இரவு பஸ் ஏறுவதாகச் சொல்லிவிட்டேன். காலை 12 மணி வாக்கில் மணிஜியின் போனில் தலைவர் ஜாக்கியார் போன் செய்து தானும் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இதையே 2 வது முறையாக நான் தலைவருக்கு தனியாக போன் செய்தபோதுதான் முந்தின முறை பேசியதே தலைவர்தான் என்று எனக்குத் தெரிய வந்த்து. இதுவொரு தனிக்கதை. போன் பேசும்போது யாரோ காருக்குள்ளயே “ஆ.. ஊ..” என்று ஊளையிட்டுக் கொண்டே செல்வது காதில் விழுந்தது. இங்கேயே மப்பு ஏற்றிக் கொண்டுதான் வண்டி செல்கிறது என்பதும் புரிந்தது..! அதுக்காக இப்படியா சின்னப் புள்ளைக மாதிரி கத்திக்கிட்டே போறது..? உருப்படாததுக..! 

இந்த போனுக்கு பின்பு மேலும் 2 முக்கிய நபர்களுடன் ஈரோடு சங்கமம் தொடர்பாக போனில் பேசினேன். அது இக்கட்டுரையின் பிறிதொரு பக்கத்தில் வரும்..!

அன்று இரவு கே.பி.என். பேருந்தில் ஈரோடு கிளம்பினேன். கட்டணம் 435 ரூபாயாம். ரொம்பவே அதிகம்.. அண்ணன் ஜாபருக்கு போன் செய்து “தயவு செஞ்சு காலைல போன் ஆஃப் ஆகி இருக்குற மாதிரி எதுவும் செஞ்சிராதீங்கண்ணே. நீங்க செய்ய மாட்டீங்க. ஆனா என் அப்பன் எதையாவது செஞ்சு வைப்பான். அப்புறம் நான் நடுரோட்டுல நிக்க வேண்டி வரும்..” என்று எச்சரித்தேன். அண்ணன் ஜாபர் இனி ஜென்மத்தில் எனக்கு பின்னூட்டம் போட மாட்டார் என்று நினைக்கிறேன். (ஏற்கெனவே நிறைய பின்னூட்டம் போட்டுட்டார் பாருங்க. இனிமே போடுறதுக்கு..!) பரவாயில்லை. என் பயம் எனக்குத்தான தெரியும்..!

பேருந்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லையென்றாலும், ஒரேயொரு விஷயத்தை மட்டும் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். விடியற்காலை பொழுதில் அசந்திருந்த நேரத்தில் “சீக்கிரம் இறங்குங்க..” என்ற சத்தமான குரல் கேட்டு கண் விழித்தேன். அக்கம்பக்கம் பார்த்த பொழுது இருட்டாக இருந்து பல பேர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவரிடம் “ஈரோடு வந்திருச்சா..?” என்றேன். அவர் என்ன சொன்னார் என்று என் காதில் சரியாக விழுகவில்லை. வேகவேகமாக, பையைத் தூக்கிக் கொண்டு இறங்கியும்விட்டேன். இறங்கிய வேகத்தில் பேருந்தின் கதவைச் சாத்திய நடத்துனரிடம், “என்ன சீக்கிரமா கொண்டாந்துட்டீங்க.. 5.30 மணியாகும்னு சொன்னீங்க..” என்றேன். அவர் குழப்பமாகி “நீங்க எந்த ஊர் கேட்டிருந்தீங்க..” என்றார். “ஈரோடு..” என்றேன். பட்டென்று தன் தலையில் அடித்துக் கொண்டவர் கதவைத் திறந்து அவர் கீழேயிறங்கி பேருந்து படிக்கட்டைக் காண்பித்து, “ஏறுங்க ஸார்.. காலங்கார்த்தால காமெடி பண்ணாதீங்க.. இது சேலம்ங்க..!” என்றார். இப்போது இவர் கோபத்தில் கத்தியது தெளிவாகக் காதில் விழ.. மருவாதையாக பேருந்தில் ஏறியவன் வாயது, கையது பொத்திக் கொண்டு அமர்ந்திருந்து, ஈரோடு வந்ததும் ஒரு முறைக்கு 3 முறை கேட்ட பின்பே பேருந்தில் இருந்து இறங்கினேன்..!

சேலத்தில் இருந்து ஈரோடு வரும்போதே அண்ணன் ஜாபர் போன் செய்து ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி(மறந்து போச்சுங்க மக்காஸ்) அதன் வாசலில் நிற்கும்படி சொல்லியிருந்தார். அதே போல் அந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்று போனை அடித்தவுடன் 2 நிமிடத்தில் தனது ரதத்தில் வந்து சேர்ந்தார் அண்ணன் ஜாபர். அவரை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.. ஹேண்ட்சம்மாக இருக்கிறார்..! “நான் பிளாக்கையெல்லாம் படிப்பேன். ஆனால் எழுதறதில்லை..” என்று சிணுங்கல் குரலில் அந்த விடியற்காலையிலும் தெளிவாகவே சொன்னார். வழியில் ஓரிடத்தில் காபி குடித்தபோது நேற்று இரவு வந்தவர்கள், வரவிருப்பவர்கள் பற்றியெல்லாம் சொன்னார். காலை 4 மணியில் இருந்தே இப்படி டிரான்ஸ்போர்ட் வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். பாவமாகவும் இருந்தது. பெருமிதமாகவும் இருந்தது..!

தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது வாசலில் நின்று வரவேற்றார் சங்கவி. இவரை நான் அறிந்த ஆதி காலத்தில் பெண் என்றே நினைத்திருந்தேன். இதையும் அவரிடமே சொல்லி கொஞ்சம் பல்பு வாங்கிக் கொண்டேன்.. ஹோட்டல் லாபியில் அண்ணன் காவேரிகணேஷ் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தார். அவரிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு படியேறினேன். என்னதான் அடிச்சாலும், புடிச்சாலும் அவுங்ககூடதான் ஒட்ட வேண்டியிருக்கு என்பதால்.. “எளக்கிய சூடாமணிகளின்’ அறைக்கே போகலாம்” என்று அண்ணன் ஜாபரிடம் சொன்னேன். மிகச் சரியாக ஒரு அறையின் முன் கொண்டு வந்து நிறுத்தி கதவைத் தட்டினார் அண்ணன் ஜாபர். முதல் இரவு முடிந்து எழுந்து வரும் தோற்றத்தில் கதவைத் திறந்து ‘என்னா’ என்பதை போல் பார்த்தார், வலையுலக குபீர் எளக்கிய சூறாவளியான மயில் ராவணன். 

அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அண்ணன் ஜாபர். முக்கால்வாசி மப்பு இறங்கியும், கால்வாசி இறங்கியிருக்காத நிலையிலும் மயிலு காட்சி தந்ததால் அவரைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தால், இரண்டு வலையுலக எளக்கிய விடிவெள்ளிகள் ஆழ்ந்த சயனத்தில் இருந்தார்கள். ஒருவர் பீஸ் வாங்காமலேயே டைவர்ஸ் கேஸ்களில் ஆண்களுக்காக ஆஜராகி, நம் இனத்தவர் பலரின் வாழ்க்கையைக் காப்பாற்றி வரும் பேமஸ் வக்கீலும், எளக்கிய சிந்தனையாளருமான அகநாழிகை வாசுதேவன்.. இன்னொருவர் அவருடைய உயிரும், உடலில் பாதியுமான எளக்கிய வித்திகர் தண்டோரா மணிஜி..(பில்டப்பு போதுமா..?)

இருவரையும் எழுப்பிவிட்டு குட்மார்னிங் வைத்தால், கை கொடுத்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்கள். ‘முழிச்சது உன் மூஞ்சிலயா?’ என்கிற பயம், அவர்களையறியாமலேயே அவர்களது கண்களில் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் தெளிவானவுடன் மணிஜி சொன்னார்.. “அண்ணே.. ராத்திரி ஓவர் மப்புண்ணே.. எவ்ளோ அடிச்சோம்னே தெரியலை.. என்ன பேசினோம்னும் தெரியலை..”. நல்லவேளை.. நான் ராத்திரி வரலையேன்னு அப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு..!

முக்கால் நிர்வாணக் கோலத்தில் திடுக்கென்று வந்து நின்று ஆஜரானார் தலைவர் ஜாக்கியார். ஒரு வணக்கம் போட்டு வைத்தேன்..! “பக்கத்து ரூமிலும் நம்மாளுகதான்..” என்றார் வாசு. சென்று பார்த்தால் காலை 7 மணிக்கு பல்லைக்கூட வெளக்காம வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருந்தார் மாயவர ஒடம்பொறப்பு அபிஅப்பா. அவருக்கும் எனக்கும் தற்போது டெர்ம்ஸ் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால், அதிகமாக அவரைத் திட்டவில்லை. கொஞ்சமாகத் திட்டி வைத்தேன்..! மனுஷர் எல்லாத்துக்கும் சிரிச்சே வாயடைக்குறார். இதே மாதிரி பின்னூட்டத்துலேயும் செஞ்சா நல்லாயிருக்கும்ல்ல..!

எதிர் ரூமில் பிலாசபி பிரபாகரன் மற்றும் நாய் நக்ஸ், ஆரூர் செந்தில் என்ற நண்பர்கள் குழாம் முகாமிட்டிருந்தது.. அவர்களிடத்திலும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்..! ஜாபரும், சங்கவியும் விரைந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சுடுதண்ணீருக்காக கொஞ்சம் காத்திருந்து குளித்துவிட்டுக் கிளம்பினோம். கிளம்பியபோது அண்ணன் நாய் நக்ஸ் இன்சுலின் போட்டுக் கொள்வதற்காக மருந்தை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தார். திக்கென்றானது மனசு. இப்போதுவரைக்கும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. டெய்லி அந்த ஊசிய போடணுமாம்.. இதையும் சிரிச்சுக்கிட்டே சொல்றாரு மனுஷன்.. பாவம்பா இவங்கள்லாம்..!

படியிறங்கியபோது லாபியில் எழுத்தாளர் கே.ஆர்.பி.செந்தில், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் பல நண்பர்கள்(பெயர் மறந்து போச்சுப்பா. கோச்சுக்காதீங்க) காத்திருந்தனர். சிறிது நேர இடைவெளியில் பேஸ்புக்கின் முடிசூடா மன்னர்களான அன்பழகன் வீரப்பனும், செல்வா அண்ணனும், ஜெயராஜ் பாண்டியனும் இறங்கி வந்தார்கள். அன்பழகன் வீரப்பனார் மீடியாவில் எக்ஸ்பர்ட்.. காற்று புகாத இடத்தில்கூட ஆள் வைத்திருப்பவர். ஆனால் மீடியாக்காரர் இல்லை என்று சொல்லிக் கொள்பவர். அண்ணன் ஜெயராஜ் பாண்டியனை இந்தப் பயணத்தின்போதுதான் நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன்.. அண்ணன் செல்வகுமார், அவர் அடுத்து எடுக்கப் போகும் திரைப்படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்கப் போவதாக பட்டப் பகலிலேயே ‘எதுவும் போடாமலேயே’ சத்தியம் செய்து சொல்லியிருக்கிறார். பார்ப்போம்..!

மணிஜியின் காரில் தோழர்கள் சிலர் ஏறிக் கொள்ள.. இடம் கிடைக்காத சிலருடன் ஆட்டோவில் ஏறி அரங்கம் நோக்கிப் பயணமானோம். அதிகம் டிராபிக் இல்லாத அந்த நேரத்தில் 2 நிமிடத்தில் அரங்கத்தை அடைந்தோம். வாசலில் அண்ணன்கள் தாமோதரன் சந்துருவும், ஆரூரானும் எங்களை வரவேற்றனர். இருவரையும் நான் சந்திப்பது இதுவே முதல் முறை.. தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! அன்னாரின் வலைத்தளத்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது. அந்த லட்சணத்தில்தான் நான் இருக்கிறேன். மன்னிச்சுக்குங்க அண்ணா..!


விருந்தினர்களுக்காக காலை டிபன் தயாராக இருந்தது.. சாப்பிட்டுவிட்டால் அவர்களுக்கு ஒரு வேலை முடியுமே என்பதால் கூச்சப்படாமல் முதல் பந்தியிலேயே உட்கார்ந்து முடித்துவிட்டோம். எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் என்ன சாப்பிட்டேன் என்பது மறந்துவிட்டது மக்களே..! யாராவது சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து பதிவர்களின் வருகை வந்தபடியே இருக்க அனைவருடன் முகமன் பழகவே நேரம் சரியாக இருந்தது.. நாங்கள் வந்திறங்கிய பின்பு அண்ணன் கதிர் தனது குடும்பத்தினருடனும், வானம்பாடிகள் ஐயாவுடனும் வந்து சேர்ந்தார். வானம்பாடிகள் ஐயா மீது எனக்கு ஏற்கெனவே ஒரு கோபம் உண்டு. 2 வருடங்களுக்கு முன்பு அண்ணன் கதிர் சென்னை வந்து எனது வீட்டில் இருந்து கிளம்பி ஜெயா டிவியின் ஒளிபரப்பு நிகழ்ச்சிக்காக சென்றார். அது முடிந்தவுடன் அவரை பிக்கப் செய்து ஹோட்டலில் விருந்து வைத்து நிறைய பேச வேண்டும் என்று காத்திருந்த நேரத்தில், இந்த வானம்பாடிகள் ஐயாதான் குறுக்கே புகுந்து அன்றைக்கே கதிரை தள்ளிக் கொண்டு போய்விட்டார். இந்தப் பெரிசு இவர் கூட எப்படி என்று அப்போதே யோசித்தேன்.. ம்.. எல்லாம் ‘எளக்கியம்’ செய்ற வேலை என்பது புரிந்தது..! சரி.. பரவாயில்லை. நல்லாயிருக்கட்டுமே..! 

அரங்கத்தின் உள் அலங்கார வேலைகளை முந்தின தினமே முடித்து வைத்திருந்ததால், அரங்கம் நிகழ்ச்சிக்குத் தயாராகத்தான் இருந்தது..! ஒவ்வொருத்தரும், ஒவ்வொருவரிடமும் “நீங்க யாரு..? உங்க பெயர் என்ன..?” என்று கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் பெயர் பேட்ஜ் அங்கேயே தரப்பட்டது. அதை நெஞ்சில் வீராப்பாக குத்திய பின்பு ஒரு வேலை மிச்சமாகியது. நன்றி நண்பர்களுக்கு..!

சீனா ஐயா தனது துணைவியாருடன் வந்தார். இவரையும் நான் இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தேன். வந்தவுடனேயே வில்லங்கத்தைத் துவக்கணுமா என்று விட்டுவிட்டேன். நிகழ்ச்சி இறுதியில் பேசலாம் என்று நினைத்து அதுவும் மறந்துபோய்விட்டது..!


இணையத் தளங்கள் அனைத்திலும், பத்திரிகைகள் பலவற்றிலும் தனது பங்களிப்பை செய்து வரும் தேனக்கா தனது கணவருடன் வந்தார். மீண்டும் கீழே வெட்டிப் பேச்சு. உரையாடல்.. கலகலப்பு இவற்றுடன் இருந்தபோது மதுரை பதிவர்கள் ஒரு செட்டாக வந்து சேர்ந்தார்கள். நான் “பெரிசு” என்று செல்லமாக அழைக்கும் தருமி ஐயா அவர்களுடன் மதுரையின் இலக்கிய சூடாமணி கார்த்திகை பாண்டியனும் வருகை தந்தார். தருமி ஐயாவை பார்த்து 3 வருஷமாச்சு. மதுரைக்கு போய் அவர் வீட்டில் அவருடன் உரையாடியதுதான் கடைசி சந்திப்பு.. இவர்களுடனும் வானம்பாடிகள் ஐயாவுடனும் சிறிது நேரம் மொக்கை போட்டு நேரத்தை போக்கி மேலும் பதிவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்.

அபியப்பா மற்றும், கே.ஆர்.பி.செந்தில் இருந்த இடத்தில் மணிஜியிடம், “விருச்சிக்காந்தும், சாம் மார்த்தாண்டனும் வந்துட்டாங்களா..? இல்லை வரப் போறாங்களாண்ணே..?” என்று கேட்டேன். “விருச்சிக்காந்த் நேத்தே வந்தாச்சு..” என்றார் மணிஜி. “சாம் மார்த்தாண்டனும் வந்தாச்சு. இங்கதான் இருக்காரு..” என்று சிரித்தபடியே சொன்னார் கே.ஆர்.பி.செந்தில். அருகில் நின்று கொண்டிருந்த தலைவர் ஜாக்கியாரும் இதைக் கேட்டுவிட்டு எங்கயோ பார்த்தபடியே சிரித்துத் தொலைத்தார். “ஜாக்கிக்கே அது யாருன்னு தெரியும்ண்ணே..” என்றார் செந்தில். ஸோ.. எல்லாரும் ஒரு கோக்குமாக்காத்தான் இருக்காங்கன்னு தெரியுது..!


அண்ணன் பாலபாரதி தனது துணைவியார், மகனுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். ஆட்டோவில் வந்தவர் இடம் தெரியாமல் 2 முறை போன் செய்து கேட்ட, அவருக்காக ரோட்டில் போய் நின்று அடையாளம் காட்ட வேண்டியதாகிவிட்டது. பய கனிவமுதன்.. செம சேட்டை.. அப்பனுக்கேத்த புள்ளை..! “அடங்க மாட்டேங்குறாண்ணே..!” என்றார் பாலபாரதி.. “அப்பன் அடங்குனாத்தான, புள்ளை அடங்குவான். அப்பன் எதுக்காவது, என்னிக்காச்சும், யார்கிட்டயாவது அடங்கியிருக்கானா..?” என்று கேட்டேன். திருமதி பாலபாரதியே இதனை வழிமொழிந்ததால், பாவம் திருவாளர் பாலபாரதியால் எதுவும் பேச முடியவில்லை. கனிவமுதன் முதலில் முரண்டு பிடித்தாலும், கொஞ்ச நேரத்தில் அனைவருடனும் ஒட்டிக் கொண்டான். கடைசிவரையிலும் பதிவர்களுக்கு இருந்த ரிலாக்சேஷன் இந்தச் சின்ன ஐயாதான்..!

திருப்பூரில் இருந்து சேர்தளம் குழுமத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் வெயிலானின் தலைமையில் அணிவகுத்து வந்தது பார்ப்பதற்கு ஜோராக இருந்தது.  அவர்களுடைய லோகாவுடனான டீ ஷர்ட்டுடன் காட்சியளித்த அவர்கள் நிகழ்ச்சி முடியும்வரையில் பல புதியவர்களின் கேள்விக்கு உள்ளானார்கள். வெயிலான் எதற்காக இந்த யூனிபார்மோடு வர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேறிவிட்டது..! என்னை மாதிரி சின்னப் பசங்களையெல்லாம் கொஞ்சம் கண்டுக்கிட்டாருன்னு இன்னமும் நல்லாயிருக்கும்..!


நிகழ்ச்சி துவங்க நேரம் நெருங்கியபோது கதிர் அருகில் வந்து “கடைசி வரிசையில் உக்காருங்கண்ணே..” என்றார். அவர் சொன்னதுபோலவே அமர்ந்தேன். சீனா ஐயாவும், தருமியும் வந்திருப்பதால் அவர்களும் எங்களுடன் மேடையேறுவார்கள் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

முதல் நிகழ்ச்சியாக அண்ணன் ஆரூராரின் பிள்ளைகளான அருட்சுடரும், அமர்நீதியும் அழகுத் தமிழில் தமிழ் வணக்கம் பாடியது கேட்பதற்கே வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து சந்துரு அண்ணன் சுருக்கமாக வரவேற்புரையாற்றினார். இதையடுத்து அழகுத் தமிழில் அன்பு அண்ணன் ஆரூரான் சிறப்புப் பேச்சாளரான ஸ்டாலின் குணசேகரன் பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தார். இது நல்ல விஷயம். தெரியாதவர்களும் வந்திருப்பார்களே.. அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா..? அண்ணன் ஆரூராரின் தமிழ்ப் பற்றை அன்றைக்குத்தான் மேடையில் பார்த்தேன். அசத்துகிறார். 

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்களை வரிசையாக மேடைக்கு அழைத்தார்கள். முதலில் நான். எனக்கு பின்பு தலைவர் ஜாக்கியார், அண்ணன்மார்கள் ஜீவ்ஸ், அதிஷா, வெயிலான், கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ்பாபு, யுவகிருஷ்ணா, ரவிக்குமார், பாலபாரதி, இளங்கோவன், மகேந்திரன், ஓவியர் ஜீவா, சீனா ஐயா இவர்களுடன் தேனக்காவும் சேர்ந்து மேடையேறினார்கள்.


மேடையில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பெட்ஷீட்டும், ஒரு ஷீல்டும் ஒரு தாம்பாளத் தட்டில் வைத்து எங்களிடம் தரப்பட்டது. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் அந்த்த் தாம்பாளத் தட்டையும் வாங்கிக் கொண்டே தங்களது இருக்கைக்கு சென்று அமர, பின்னாலேயே யாரோ ஒருவர் வந்து அந்தத் தட்டை பெற்றுச் சென்றது கடைசிவரையிலும் காமெடியாகத்தான் இருந்தது.

எங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தபோது அது தொடர்பான புகைப்படங்களையும் அருகில் இருந்த ஸ்கிரீனில் காண்பித்த்து மிக அழகாக இருந்தது.  அதேபோல் எங்களைப் பற்றிய குறிப்புகளை அறிவிப்பாளர்கள் 3 பேர் மாற்றி, மாற்றி பேசியதும் ரசிக்க வைத்தது. இருந்தாலும் என்னால்தான் அதிகம் ரசிக்க முடியவில்லை..! என்னைவிட மிக மூத்த பதிவரான தருமி ஐயா கீழே இருக்க.. நான் விருது பெறுவதும், தருமி ஐயா மட்டுமல்ல.. வேறு பலரும் இப்போதும் பதிவுலகில் ஆக்டிவ்வாக இருப்பதும் சட்டென்று நினைவில் வர மனம் ஒரு நிலையில் இல்லை. அருகில் அமர்ந்திருந்த தலைவர் ஜாக்கியார், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அண்ணன் யுவகிருஷ்ணாவை சுட்டிக் காட்டி என்னிடம் ஏதோ சொல்லி கிண்டல் செய்தபடியே இருந்தார். எனக்குத்தான் முழு கவனமும் அதில் இல்லையே..! அப்புறம் என்னத்த கேக்குறது..?

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.. ஏதோ சினிமா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் டிவி கேமிராக்களை போல கிட்டத்தட்ட 30 பேருக்கும் மேலாக கையில் கேமிராவைத் தூக்க.. மேடை நிகழ்ச்சிகளில் பிளாஷ் மழைகள் பொழிந்தன.  வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. அதிலும் நியூயார்க் ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி அவர் குறிப்பிட்ட செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் வருடாவருடம் அவர் நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியின்போது எத்தனையோ பேச்சாற்றல் மிக்கவர்களை அழைத்து கூட்டம் நடத்தி தமிழ்ப் பேச்சுக் கலையை ஆதரித்தும், வளர்த்தும் வருகிறார் என்பதை அறிந்தபோது அவர் குறித்து மிகவும் பெருமைப்பட்டேன். 

மேடையில் பாராட்டுப் பெற்றவர்களின் குறிப்புகள் இங்கே இருக்கிறது. படித்துப் பாருங்கள்.. எங்கள் 15 பேரிலும் சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது இது போன்று ஒரு செயலைக்கூட இதுவரையில் என் வாழ்க்கையில் செய்ததில்லையே என்ற வருத்தமே எனக்குள் எழுகிறது.. வாழ்க மகேந்திரன்..! 

பேசுவதற்கு வாய்ப்பு வந்தபோது சில மணித் துளிகள் மட்டுமே அனுமதி என்று கதிர் முன்கூட்டியே சொல்லிவிட்டதாலும், எனக்குள் இருந்த பதட்டம் காரணமாகவுமே கீழ்க்கண்டவைகளை மட்டுமே பேசினேன்..

“அனைவருக்கும் வணக்கம். சிறப்புப் பேச்சாளருக்கு சிறப்பு வணக்கம். இத்தனை நாட்களாக இரவு, பகலாக பக்கம், பக்கமாக மாய்ந்து, மாய்ந்து எழுதி என்னத்தடா உண்மைத்தமிழா சாதிச்ச என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம் இப்படியொரு விருதினை கொடுத்து கவுரப்படுத்தியிருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றிகள்.. இந்த விருதினை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால், இதுவரைக்கும் பதிவுகளை 25 பக்கங்களில் எழுதிட்டிருந்த. அது போதாது.. இனிமேல் 50 பக்கங்களில் எழுது என்று ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் எனக்கு உத்தரவிட்டதாகவே இந்த விருதினை எடுத்துக் கொள்கிறேன்.. நன்றி வணக்கம்..”

இப்படித்தான் பேசினேன் என்று நினைக்கிறேன்..! ஆனாலும் எனக்குள் இருந்த வருத்தத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை...! வலைப்பதிவர்கள் மட்டுமே இருந்திருந்தால் சொல்லியிருக்கலாம். ஆனால் பல்வேறு இணையத்தள வாசகர்களும், எழுத்தாளர்களும் இருந்ததால் அந்த மேடையிலேயே இதனை ஒரு இஷ்யூவாக ஆக்க விரும்பவில்லை.. ஆனாலும் சென்னை திரும்பிய பின்பு மனசு பொறுக்காமல் கதிருக்கு போன் அடித்து எனது வருத்தங்களையும், கண்டனங்களையும் தெரிவித்தேன். அவசரமாகச் செய்ததாலும், குழுவினர் முடிவெடுத்ததாலும் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்றார் கதிர். அடுத்த சங்கமத்தில் இதனை நிவர்த்தி செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன். “நிச்சயமாக..” என்று சொல்லியிருக்கிறார் கதிர்..! செய்வார்கள் என்றே நம்புகிறேன்..!

அதே நேரத்தில் எனக்கு முன்பாகப் பேசிய தலைவர் ஜாக்கியாரின் பேச்சில் இருந்த ஒரு சில வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கத்தான் வேண்டும். தலைவராக இருந்தாலும், நம் மனதுக்குத் தவறாக இருந்தால் அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடுவதுதான் நல்லதொரு தொண்டனுக்கு அழகு.. 

“என்னைப் பற்றிய விமர்சனங்கள் என் கால் தூசுக்குச் சமம்..” என்று மேடையில் அவர் சொன்ன வார்த்தைகள் அழகில்லை. பொருத்தமானதில்லை..! விமர்சனங்களை எதிர்கொள்பவன்தான் நல்ல எழுத்தாளன். அது எப்பேர்ப்பட்ட விமர்சனமாக இருந்தாலும் சரி..! குழந்தை தவழ்ந்து, நடை பயின்று, ஓடியாடி தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடையும்வரையில் அதற்குக் கிடைக்கின்ற தாயின் அன்பைப் போன்றதுதான் வாசகர்களின் விமர்சனங்கள். எழுதுவதற்கெல்லாம் பாராட்டுக்கள் கிடைத்துவிடாது..! அனைத்துமே பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது..! தலைவர் ஜாக்கியார் தான் இப்படித்தான் என்று சொல்லிச் சொல்லியே தனது தவறை நியாயப்படுத்துகிறார். பல முறை இதனை அவரிடத்தில் நேரில் சொல்லியும் மூக்குடைபட்டிருக்கிறேன். அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் நானும் பின்னூட்டம் போடுவதில்லை என்று சொல்லி, அன்றிலிருந்து அவர் தளத்தில் பின்னூட்டம் இடுவதை நானும் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் இப்போதும் அதனையே சொல்லத் தோன்றுகிறது. சொல்லிவிட்டேன்..! இனி எப்போதும் இதைத்தான் சொல்லுவேன்..!

தொடர்ந்து ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அண்ணன் க.பாலாசி நன்றியுரை நிகழ்த்திய பின்பு மேடை பொதுவானதாக அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. புதிய பதிவர்கள் பலரும் மேடையேறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தாங்கள் பதிவுலகத்தில் நுழைந்தது எப்படி என்றும், பதிவுலகத்தின் பலன்கள் பற்றியும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதுவரையிலும் பொறுமை காத்த கூட்டம் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கி ஓடியது. முதல் கூட்டத்தினர் தம் அடிக்க ஓட.. இரண்டாவது கூட்டம் கதையடிக்க ஆரம்பித்தது. இதை என்ன செய்ய முடியும்..? எப்படி தடுக்க முடியும்..? இத்தனை பதிவர்களும் பல மாதங்கள் கழித்து ஒன்று சேர்கிறார்கள். பேசுவதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கும்..?

மணிஜியை சுற்றி ஒரு கூட்டம்.. தலைவர் ஜாக்கியாரை சுற்றி ஒரு கூட்டம்.. சி.பி.செந்தில்குமாரை சுற்றி ஒரு கூட்டம். ‘மெட்ராஸ் பவன்’ சிவகுமாரை சுற்றி ஒரு கூட்டம்.. கார்த்திகைபாண்டியனை சுற்றி ஒரு கூட்டம்.. என்று ஆளாளுக்கு குழு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். 


கிடைத்த இடைவெளியில் பதிவர்கள் பலரையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். எடுத்தவர்களெல்லாம் எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைத்தால் தன்யனாவேன்..! அண்ணன் ஜீவாவுடன் சிறிது நேரம் அளவளாவியபோது அவர் பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணன் என்று தெரிந்து கொஞ்சம் ஆச்சரியமானேன்..! தேசிய விருதுக்கு புத்தகங்களை அனுப்பும் முறையை அண்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அங்கே நான் சந்தித்த தம்பி சி.பி.செந்தில்குமாருக்கு ஒரு சின்ன எச்சரிக்கையை விட்டேன். “தொடர்ந்து குஜிலி, பிகர் என்றே உனது பிளாக்கில் எழுதிக்கிட்டே வர்ற.. பின்னாடி ஏதாவது பிரச்சினைன்னா யாரும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. இது மாதிரி எழுதறதை நிறுத்திட்டு அளவோட எழுது..” என்றேன். நல்லது சொன்னா இந்தக் காலத்துல எந்தப் புள்ளை கேக்குது..? தானா அடிபட்டு புரிஞ்சுக்கட்டும்..!


நான் முன்பே சொன்னதுபோல எனக்கு சாப்பாட்டின் மீது அதிக ஆர்வம் இல்லாததால் சாப்பாட்டு சீர்வரிசைகள் பற்றி அதிகம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. ஆனாலும் அசைவத்தை ஒரு வெட்டு வெட்டினேன்.. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காவேரிகணேஷ், அவ்வளவு காரத்தையும் சமாளித்து வியர்க்க, விறுவிறுக்க முழுங்கிக் கொண்டிருந்தார். எப்படித்தான் முடியுதோ தெரியலையே..? 

இடையிலேயே அரங்கத்தில் இருந்து ஜூட் விட்ட மணிஜியும், அவரது அடிப்பொடிகளும் கொஞ்சம் ‘சுதி’யை ஏற்றிக் கொண்டு எங்களுக்கு அடுத்த பந்தியில் அமர்ந்து ஆற, அமர வெட்டினார்கள்..! ‘அடிச்சது’கூட வெளில  தெரியாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் அண்ணன் அகநாழிகை வாசுதேவன் யாருக்காவது திடீரென்று முத்தம் கொடுத்தால், அண்ணன் மப்பில் இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். எனக்கு 2 முறை முத்தம் கொடுத்தார். முதல் முறை சரியில்லை என்று சொல்லி 2-ம் முறையாக முத்தம் கொடுத்தபோதுதான்  எனக்கே ‘தெளிந்தது’ இந்த விஷயம்..! நல்ல அண்ணன்..!

இந்தக் கூத்துக்கிடையில் பல பதிவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஓய்ந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து களைத்துப் போய் நின்றிருந்தவேளையில் குழுமத்தின் உறுப்பினர்கள் சாப்பிட்டவர்களிடமே திரும்பத் திரும்ப போய் “சாப்பிட வாங்க..” என்று வாய்கூசாமல் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அன்புக்கு ஒரு அளவு வேண்டாமா..? கா.பா. வலசை புத்தகத்தை எனக்குப் பரிசாக அளித்தார்.  விஜி மற்றும் ரோஹினி சிவாவிடமும் சிறிது நேர அளவளாவல். “உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி. “இது முடியறதுக்குள்ள நீ நிச்சயம் பாட்டியாயிருவ..” என்று வாழ்த்தியிருக்கிறேன்..! இத்தனை களேபரத்திலும் புகைப்படக் கலைஞர் அண்ணன் ஜீவ்ஸ் மட்டும் தனது பணியில் மிகச் சரியாக இருந்தார்..! பெற்றோர்களுடன் வந்திருந்த சிறு குழந்தைகளை வைத்து ஒரு ஆல்பமே தயாரிக்கும் அளவுக்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார்..! என்னையும்தான் எடுத்தார். ஆனால் இதுவரையில் வெளியிடவில்லை..! அவ்வளவு மோசமாவா இருக்கேன்..?

மதியம் 3-30 மணி டிரெயினில் சென்னை திரும்ப ஒரு டீம் கிளம்பிக் கொண்டிருக்க.. நான் வழக்கம்போல எப்படி திரும்பச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் மணிஜி கார் ஹவுஸ்புல் என்று நான் கேட்காமலேயே சொல்லி தப்பித்துக் கொண்டார். தொடர்ந்த விசாரணையில் பேஸ்புக் தோழர் சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பன் காரில் வந்திருப்பதாகச் சொல்ல.. காவேரிகணேஷின் மூலமாக ஒரு பிட்டை போட்டு அவர்கள் மனதில் இடம் பிடித்து, அதன் மூலம் காரிலும் சீட்டைப் பிடித்தேன்..! 


நள்ளிரவுக்குள் சென்னை திரும்ப நினைத்து முதலில் நாங்கள்தான் அரங்கத்தை காலி செய்தோம். அனைவரிடமும் திரும்பத் திரும்ப ‘டாட்டா’ காட்டியே அலுத்துப் போனது..! அந்த அளவுக்கு சென்று வருகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். பேருந்து நிலையம்வரையிலும் அண்ணன் சங்கவியும் எங்களுடன் வந்தார். “போன் பண்றேண்ணே..” என்று சொல்லிவிட்டு வண்டியில் இருந்து இறங்கிச் சென்ற அண்ணன் சங்கவி இப்போதுவரையிலும் போன் செய்யவில்லை.. சரி.. நல்லாயிருக்கட்டும்..!

சி.ஐ.டி. அன்பழகன் வீரப்பனார் வண்டியோட்ட மோகன்குமார், காவேரிகணேஷ், ஜெயராஜ் பாண்டியன் இவர்களுடன் நானும் சேர்ந்து பயணாமானோம். இப்போதுதான் தெரிகிறது கார் பயணத்தின் அனுகூலம் என்னவென்று..! ஏதோவொரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ‘உச்சா’ போனபோது, தூரத்தில் இருந்து சில இளைஞர்கள் எதையோ செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள், எங்களையும் சேர்த்தே படம் எடுத்தார்கள். ஓரக்கண்ணால் பார்க்கத்தான் முடிந்தது..! எதுவும் சொல்ல முடியவில்லை. ஆமாம்.. இதை படம் புடிச்சு அவனுக என்ன செய்யப் போறானுக..? 

காரில் வரும்போதே யுடான்ஸ் பரிசளிப்பு விழாவும் சட்டென்று ஞாபகத்திற்கு வர, வேடியப்பனுக்கு போன் செய்து கேட்டேன். விழா முடிந்து நான் கடையையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்..! அடுத்து தம்பி அப்துல்லாவிற்கு போன் செய்தேன். விழாவினை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அனைவருடனும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்திருப்பதாகச் சொன்னார்..! ‘ச்சும்மா ஒரு விசாரணைதான்’ என்று சொல்லி வைத்தேன்..!

ஈ.ஸி.ஆர். ரோட்டில் எப்படி வேண்டுமானாலும் பறக்கலாம் போலிருக்கிறது..!  சி.ஐ.டி. அன்பழகன் 120-ல் இருந்து 160 வரையிலும் ஸ்பீடு காட்டினார்.. நடு, நடுவே செல்வா அண்ணனுடனும், மோகன்குமாருடனும் பேசிக் களைத்தோம். செல்வா அண்ணன் தமிழகத்தின் அடுத்த அண்ணாஹசாரேவாக உருமாறும் அளவுக்கு அரசியல் பேசுகிறார். ஆனால் பிளாக்கில்தான் எழுத மாட்டேன்றார்..! 7.30 மணி நேரப் பயணத்தின் முடிவில் இரவு 11 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்..!

எந்தவொரு லாப நோக்கமும் அற்ற நிலையில், எழுத்து, மற்றும் செயல்களை ஊக்குவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட விருதுகள் என்றாலும், அதனை அளித்தவிதம்தான் அத்தனை வருத்தங்களையும் தூக்கியெறிந்துவிட்டது. கதிரின் அன்புக் குழந்தைகள்தான் தர வேண்டிய பரிசுப் பொருட்களை உள்ளறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தபடி இருந்தார்கள். அவர்களுக்கென்ன 12, 14 வயது இருக்குமா..? கதிர் இப்பொழுதே பழக்குகிறார் போலும்..! தூரத்தில் இருந்து பார்த்தபோது மனம்  நெகிழத்தான் செய்தது..!

மேடையில் முகத்தைக் காட்டாமலேயே உள் அறையில் நின்றபடியே கதிர் 2, 3 முறை பேசினார். “சிறப்புப் பேச்சாளர் பேசும்போது பார்வையாளர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..” என்று கதிர் மறைந்திருந்துதான் மைக்கில் பேசினார். அது ஏன் என்று இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது. தப்பித் தவறிகூட அரங்கத்தில் யாரும் இதனை பரிகாசம் செய்துவிடக் கூடாது என்பதில் கதிர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.

நான் 3-வது முறையாக சென்னையில் இருந்து கதிரை அழைத்து நான் எப்படி வரவிருக்கிறேன் என்பதைத் தெரிவித்தபோது, முதல் பதில் வார்த்தையாக கதிர் சொன்னது.. “ஜாபர்கிட்ட பேசுங்கண்ணே.. அவர்தாண்ணே போக்குவரத்தெல்லாம் பாத்துக்குறாரு..” என்பதுதான்..! இதுதான் ஒரு நல்ல கேப்டனுக்கு அழகு. ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால், அதனை அவர்தான் பார்க்க வேண்டும். டீம் வொர்க் என்பதும் இதுதான். அனாவசியமாக அடுத்தவர்கள் வேலையைத் தாங்களே நட்புக்காக செய்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதுதான் அமைப்புக்கு மிகச் சரி..!

நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு மிகப் பொறுப்பான தலைமையைத்தான் இந்தக் குழுமம் பெற்றிருக்கிறது..! பாவம்.. இந்த மனிதருக்கு சிரிக்க மட்டுமே தெரியும் போலிருக்கு..! அப்படியொரு சிரிப்பு..! இப்படியாக குழுமத்தில் இருக்கும் அனைவருமே ஒரு சிறிய பிரச்சினையைக்கூட அடுத்தவர் முன்பாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சி முடியும்வரையிலும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது பெருமைக்குரிய விஷயம்..! வாழ்க ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தினர்..!

இது போன்ற நிகழ்வுகள் தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கின்ற அத்தனை ஊர்களிலும் நடந்தால் வலைப்பதிவுகளின் மூலமாக தமிழில் எழுதும் நாம் அனைவரும் இன்னமும் நெருக்கமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதே சமயம், இது போன்ற நிகழ்வுகள் நடத்த ஆகும் செலவுகள் குறித்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்..!

இந்த ஈரோட்டு நிகழ்வுக்கே எவ்வளவு ரூபாய் செலவானது என்று தெரியவில்லை. இது பற்றி ஒரு வார்த்தைகூட கேட்காமல் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போதுதான் வெட்கமான ஞாபகம் வருகிறது. நிச்சயமாக 75000 ரூபாயாவது செலவாகியிருக்கும். நன்கொடைகள் இல்லாமல் குழும உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.. இது போன்று அனைத்து ஊர்களிலும் செய்துவிட முடியாது..! பணமும் மிக முக்கியந்தான்..!

இதற்குப் பதிலாக நன்கொடைகள் மற்றும் விளம்பரம் மூலமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தலாம். ஆனாலும் எந்தவொரு நிகழ்வும் அது தொடர்பான துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்வதாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் இது போன்ற வலைப்பதிவர்கள் சந்திப்பு என்னும் நிகழ்ச்சியினைவிடவும், வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை நாம் நடத்தினால் அது நமது தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..!

வலைப்பதிவர்களின் கலந்துரையாடலில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பூரிப்பும் அவ்வப்போது நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. போனில் பேசுகிறோம். எங்கேனும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தால் பேசுகிறோம். அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்களைச் சந்தித்து உரையாடுகிறோம். இதை அப்படியே வைத்துக் கொண்டு இன்னமும் பார்வையாளர்களாகவே இருக்கும் பல வாசகர்களையும் நாம் எழுத வைக்க வேண்டும். அதற்காக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளை அவசியம் நாம் ஊர், ஊருக்கு நடத்தியாக வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் அண்ணன் பாலபாரதி தலைமையில் வலைப்பதிவு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினோம். அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் வலைப்பதிவுகள் பற்றி அறிந்து கொண்டதோடு 150-க்கும் மேற்பட்டோருக்கு வலைப்பதிவுகளை ஒரே நாளில் துவக்கிக் கொடுத்தோம். 10 கணிணிகளை வாடகைக்கு எடுத்து வந்து, ஆர்வத்தோடு வந்தவர்களுக்கு அங்கேயே வலைப்பதிவுகளைத் துவக்கிக் கொடுத்தோம். தமிழில் எப்படி தட்டச்சு செய்வது.. எந்த தட்டச்சு முறை கற்றுக் கொள்ள மிக எளிதானது என்று சொல்லி அதற்கான விளக்கக் கையேட்டை கூட மறைந்த அண்ணன் சிந்தாநதியின் ஒத்துழைப்பில் வழங்கியிருந்தோம். அவர்களில் பலர் இப்போதும் எழுதிதான் வருகிறார்கள். இது போன்ற சேவையை நம்மால் முடிந்த அளவுக்கு, தமிழகம் முழுவதுமே ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் இதுவே நமது வலையுலகத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து..! 

அடுத்த பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடத்தவுள்ள சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சி ஈரோடு சங்கமம் போன்றதுதான். முதல் முறையாக நடத்துவதால் அனைத்து இணையப் பங்களிப்பார்களையும் வலையுலகத்தின் பக்கம் ஈர்த்துவிட்டு, பின்பு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சிப் பட்டறை போன்று நடத்த உத்தேசிக்கலாம் என்று யோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும், நிறைய உடல் உழைப்பும், பணமும் தேவைப்படுகிறது..! இதற்கான முன் பயிற்சியாகத்தான் இந்த இணையத்தள பங்களிப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கின்ற அனுபவத்தின் வாயிலாக நிச்சயமாகத் தொடரும் காலங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

இதேபோல் பல்வேறு ஊர்களில் இருக்கும் வலைப்பதிவர்கள் தங்களுடைய ஊர்களில் இருக்கும் பதிவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுமத்தை உருவாக்கி அதன் மூலம் கூட்டங்களை நடத்தி, வலைப்பதிவர்களை ஒன்றிணைத்தால் வரும் காலத்தில் நமது தமிழ் வலையுலகத்தை முன்னோக்கி நகர்த்தலாம் என்று கருதுகிறேன்..! தமிழகத்தின் தமிழ்ப் பதிவர்கள் இது குறித்து ஆவண செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

ரொம்ப ஓவரா, சீரியஸா பேசிட்டனோ..? எனக்கே ஒரு மாதிரியாத்தான் இருக்கு..! அதுனால இனி கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாமா..? இனிமேல் வருபவைகளெல்லாம் மொக்கைகளே..! மொக்கைகளைத் தவிர வேறில்லை என்று என் அப்பன் முருகன் மீது ஆணையாகச் சொல்லித் துவக்குகிறேன். 

டிசம்பர் 13-ம் தேதி காலையில் அண்ணன் சஞ்சய்காந்தி போன் செய்தான். “என்னண்ணே எப்படியிருக்கீங்க..? ச்சும்மாதான் ரொம்ப நாளாச்சு பேசி.. பேசலாம்னு நினைச்சேன்..” என்றான். நானும் மிக மகிழ்ச்சியாக என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு பேசுறானேன்னுட்டு ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் பேசிட்டு கடைசியா, “ஈரோட்டு வர்றியாடா..?” என்றேன். “எதுக்குண்ணே..?” என்றான். “அதான் சங்கமம் நிகழ்ச்சிக்குடா..” என்றேன். “நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான். “என்னடா இப்படிச் சொல்ற.. எப்பவும் போன்ல பேசிக்கிட்டிருந்து, பின்னூட்டம் போட்டுக்கிட்டேயிருந்தா போதுமா..? நேர்ல பார்த்து பழக வேண்டாமா..?” என்றேன்.. “என்னமோ செய்யுங்க.. எனக்கு வேலையிருக்கு.. நீங்க அங்க போறீங்களா..?” என்றான். “என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். போனை வைத்துவிட்டு நானும் கொஞ்சம் யோசித்தேன்.. இவன் ஒருத்தனுக்கே இம்புட்டு கோபம் வருதே.. மத்தவங்களுக்கெல்லாம் வராதா என்று..!

சரி.. அது முடிஞ்சு போச்சு.. இப்போ ஒண்ணும் செய்ய முடியாது. ஆனாலும் அண்ணன் சஞ்சய் விடலை.. 2 நாளைக்கு முன்னாடி கூகிள் பிளஸ்ல, “இந்தப் பதிவர் கூட்டம் நடத்தி என்ன சாதிக்கப் போறீங்க..?”ன்னு கேட்டு தாளிச்சிட்டான்..! இதை கதிர் பார்த்தாரான்னு எனக்குத் தெரியலை.. பார்க்கலைன்னா இப்போ தெரிஞ்சுக்கட்டுமேன்றதுக்காக மட்டுமே இதைச் சொல்றேன். பத்த வைக்குறேன்னு யாரும் சொல்லிராதீங்கப்பா..! நான் ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப நல்லவனாக்கும்..!

சஞ்சய்கிட்ட போன் பேசி முடிச்சுட்டு அடுத்து அண்ணன் அப்துல்லாவுக்கு நானே போன் செய்தேன். “ஈரோட்டுக்கு எப்பண்ணே வர்றீங்க..?” என்றேன்.. “அட போண்ணே.. எங்க வர்றது.. வரலைண்ணே..” என்றார் வெறுப்பாக.. “என்னாச்சுண்ணே..? ஏன் வரலை..?” என்று நான் கேட்க.. “எல்லாம் இந்த ஆதியும், பரிசலும் செஞ்ச வேலைண்ணே.. யுடான்ஸ் பரிசளிப்பு விழாவை வைச்சிட்டாங்களே.. அதான் நகர முடியலை..” என்று அலுத்துக் கொண்டார். “அவங்க நடத்தினா நடத்தட்டும். நீங்க வரலாம்ல..” என்றேன். “எப்படிண்ணே வர்றது..? நான் செஞ்ச ஒரே தப்பு, தெரியாத்தனமா இந்தப் போட்டிக்கு நடுவரா இருந்திட்டேண்ணே.. நடுவரா இருந்தவரே பரிசளிப்பு விழாவுக்கு வராம இருக்கக் கூடாதுன்னு சொல்லி ஈரோட்டுக்கு 'தடா’ போட்டுட்டாய்ங்கண்ணே.. போட்டுட்டாய்ங்க..” என்றார்..! “உங்க நிகழ்ச்சியையாவது கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாம்ல.. நாங்களும் கலந்துக்கிட்டிருப்போம்ல.. இப்போ சென்னை பதிவர்கள் எல்லோரும் ஈரோட்டுக்கு போயிட்டிருக்காங்க..” என்றேன் வருத்தத்துடன். “ஆமாண்ணே.. புரியுதுண்ணே.. நானும் கேபிளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.. இந்த ஆதியும், பரிசலும் முடியவே முடியாதுன்னுட்டாய்ங்கண்ணே.. நான் என்னண்ணே செய்யறது..?” என்றார் வருத்தத்துடன். எனக்கும் தாங்க முடியலை.. “ஏன்.. என்ன பிரச்சினை.. ஒரு வாரமாச்சும் தள்ளிப் போட வேண்டியதுதானே.. எல்லாரும் உன்னை கேப்பாங்க அப்துல்..” என்றேன். “யார் கேட்டாலும், நான் சொன்ன இதை அப்படியே சொல்லிருண்ணே.. மைக்ல கூட சொல்லிரு. ஒண்ணும் தப்பில்லை. ஆதியும், பரிசலும் சேர்ந்து பிடிவாதமா பங்ஷனை வைச்சு, அப்துல்லாவை ஈரோட்டுக்கு வரவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்லிரு...” என்றார் அப்துல். பாவம்.. ரொம்ப நொந்து போயிருக்காருன்னு நினைச்சு நானும் “சரி.. ஓகே.. போயிட்டு வரேன்..” என்று சொல்லி போனை வைத்தேன். 

அப்துல் அண்ணன் சொன்னதை ஈரோட்டில் நான் யாரிடம் சொன்னேன் என்று எனக்கு நியாபகமில்லை. மேடையிலும் இதைச் சொல்லவில்லை.  ஆகவே இங்கே பதிவு செய்துவிடலாம் என்று நினைத்தேன். அவ்ளோதான்.. நான் ரொம்ப, ரொம்ப நல்லவன் சாமிகளா..! இப்பவாவது நம்புங்க..!

இப்போ மேட்டருக்கு வருவோம். ஆதியும், பரிசலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடித்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தலைவர் கேபிளாரும் எங்களுடன் இணைந்து விருது பெற இருந்தார் என்பதை மட்டும் கொஞ்சம் உங்களது மனதில் நிலைநிறுத்தி யோசித்துப் பார்த்தீர்களேயானால், இந்தக் கேளவிக்கான விடை உங்களுக்குத் தானாகவே கிடைக்கும்..!

வந்தால் மட்டுமே விருது என்று ஈரோட்டுக் குழுமம் முடிவு செய்திருந்ததால், நிச்சயமாக கேபிளார் ஈரோடு சென்றே தீர வேண்டும் என்று அடம் பிடித்திருப்பார். அதுவும் அவருடைய ‘அன்னியோன்ய’ நண்பரான, இன்னொரு தலைவர் ஜாக்கியார் விருது பெறும்போது, தானும் அதே ஆண்டு, அதே மேடையில் விருதைப் பெற்றாக வேண்டும் என்று துடித்திருப்பார். ஆனால் ஆமை தோற்றத்தில் நடுவில் புகுந்து கெடுத்தது ஆதியும், பரிசலும்தான் என்றால் இந்தக் கொடுமையை அவர் எங்கே போய்ச் சொல்வார்..? 

ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பின்பு எழுத வந்த கேபிளார், காலப்போக்கில் ‘யூத்து’ என்கிற ஒரேயொரு உரிமையோடு இவர்களிடத்தில் ஐக்கியமாகி இப்போது ஒருவரை விரட்டியடித்துவிட்டு அறுவராகக் காட்சியளிக்கிறார்கள். இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..? நேராகச் சொல்ல முடியாமல் பிளான் செய்து காரியத்தை நகர்த்தி கச்சிதமாகத் தலைவர் கேபிளாரை சென்னையிலேயே முடக்கி விட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது. 

ஒரு வேளை ஆதியும், பரிசலும் விரும்பியிருந்தாலும் தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார். பதிலுக்கு ஆதி, பரிசலை கடித்திருப்பார் என்று நினைக்கிறேன். இப்படியும் ஒரு சந்தேகம் ரா உளவுத்துறைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது...!

இன்னும் கொஞ்சம் யூகித்தால், ஈரோட்டு சிங்கம் கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..! “திருப்பூரில் நாங்கள் நடத்துவதற்குள் நீ நடத்துறியா..? கேபிளார் இல்லாம எப்படி நிகழ்ச்சி நடத்துறன்னு பார்க்கலாம்..?” என்று மனதுக்குள் பந்தயம் கட்டி கவுத்திருப்பார்கள் என்று கொடுமுடி ஆற்றின் கரையில் இரண்டு டோபிக்கள் பேசிக் கொண்டார்களாம்..!

இன்னொரு பக்கம் பார்த்தால், தலைவர் ஜாக்கியாரின் இன்னொரு நெருங்கிய நண்பரான பரிசல், ஜாக்கியாருக்கு மறைமுகமாக உதவி செய்யும்பொருட்டு, கேபிளாரைத் தடுத்து வைத்திருக்கலாம் என்றும் டிஸ்கவரி புக் பேலஸ் கூட்டத்தில் யாரோ பேசிக் கொண்டார்கள். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாதாம்..! ஒரே மேடையில் இரண்டு தலைவர்கள் இருந்தால் அது நல்லாயிருக்காது என்று நினைத்து ஜாக்கியாரைத் தூக்கிப் பிடித்து, கேபிளாருக்கு ஆப்படித்திருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்லவில்லை..!

இந்த மணிஜி இருக்காரே மணிஜி.. இவர் பிள்ளையையும் கிள்ளிவிடுவார். தொட்டிலையும் ஆட்டிவிடுவார். இவர் சேட்டைகளை வெளிப்படையாகச் சொன்னால், கூட இருந்த பாவத்துக்காக என்னை வெள்ளாவி வைத்து வெளுத்து விடுவீர்கள். ஆனால் இவரிடமும் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவெனில், இவரால் யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், எதிராளியின் டவுசர் கழறும்வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கடைசி நேரத்தில் ‘வேறு பெயரில்’ வந்தாவது பிரச்சினையை சுபமாக முடித்துவைத்துவிடுவார். இந்த நல்லெண்ணம் காரணமாகவே இந்த அண்ணன், இன்றுவரையிலும் அவரைத் தாக்கியவர்களாலும், அவரால் தாக்குதலுக்குட்பட்டவர்களாலுமே பெரிதும் ரசிக்கப்படுகிறார். 

இவரும் தலைவர் கேபிளாரும்கூடத்தான் டாஸ்மாக்கின் மூலமாக மிக நெருங்கிய நண்பர்கள். எங்கே கேபிளாரும் கூடவே ஈரோட்டுக்கு வந்தால், டாஸ்மாக் சரக்குக்கு கூடுதல் செலவாகுமே என்று நினைத்து அண்ணன் மணிஜியே அடுத்த விளம்பரப் படத்தில் விஜய் ரசிகனாக நடிக்க வைப்பதாக தம்பி கார்க்கியிடம் சொல்லி, அவர் மூலமாக ஆதி, பரிசலை ஆஃப் செய்திருக்கலாம் என்று கேபிளாரே நினைப்பதாக சைதாப்பேட்டை கேபிள் டிவி வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்..!

இதற்கும் மேலாக கேபிளாரின் ‘தற்போதைய’ பாதி உடலான அவரது நெருங்கிய நண்பர் கே.ஆர்.பி.செந்திலும் யுடான்ஸ் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஈரோட்டுக்கு வந்தது நிச்சயம் கேபிளாருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதையும் யோசித்துப் பார்த்தால் கட்டிங் பிரெண்ட் செந்திலை, கேபிளாரின் அருகில் இருந்து பேக்அப் செய்து அனுப்பி வைக்க அந்த நால்வர் கூட்டணி செய்த சதியாகவும் இதனை கருத வாய்ப்புண்டு என்று ஜூனியர்விகடன் கழுகார் எச்சரிக்கிறார்..!

ஆக மொத்தத்தில் தலைவர் கேபிளாருக்கு குழி தோண்டியது, அவருடைய நெருங்கிய நண்பர்களே என்பது இங்கே வெட்ட வெளிச்சமாகியிருப்பதால், இனிமேலாவது ‘ஜாக்கிரதையாக’ இருக்கும்படி அவரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..!

இன்னும் நிறைய எழுதலாம்தான்.. ஆனா பாருங்க.. சென்னை இணையும் கரங்கள் நிகழ்ச்சிக்காக சென்னை பதிவர்கள் கூட்டத்தில் நான் இனிமேல் அடிக்கடி கலந்து கொள்ள வேண்டி வரும் போலத் தெரிகிறது. போனால் பத்திரமாகத் திரும்பி வரணும் என்ற பயமும் எனக்கு இப்போது இருப்பதால், என் பாதுகாப்புக்காக இந்த மொக்கையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்..!

அத்தோடு பரிசல்கார அண்ணன் வேறு என் மேல் ரொம்ப மதிப்பும், மரியாதையும் வைச்சு ட்வீட்டர்ல “பட் உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு” என்று ட்வீட்டியிருந்தார். எதற்கு என்று தெரியவில்லை. எனது வலைத்தளத்தில் பரிசலின் பின்னூட்டத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அவருக்கு நான் மிகவும் பிடித்தமானவன் என்பதால், அண்ணன் பரிசலுக்கு இங்கேயே அனைவரின் முன்பாகவும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

இந்த ஒரு நாள் மேட்டருக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா என்று நினைக்க வேண்டாம். நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்..! நேரம் இருந்தால், கீழே இருப்பவைகளையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்..! 




அப்புறம் இன்னொரு விஷயம். ‘ஏதோ’வொரு விஷயத்துக்காக தலைவர்கள் கேபிளாரும், ஜாக்கியாரும் இப்படியொரு பின்னூட்டங்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது தலைவர் கேபிளார் சொன்னது..!

என்ன தலைவரே.. பதிவெழுத ஏதும் கிடைக்கலைன்னா இது மாதிரி எதையாவதை ஆரம்பிச்சு வைச்சிர வேண்டியதா..? ஆஹா.. உடான்ஸ் விழா முன்னமே முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டு விழாவில் சிறப்பிக்க இருந்தவர்களில் நானுமொருவன். அதைவிட்டு நாங்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. சும்மாவாவது குரூப் அது இது என்று பேசுவதை விட்டுவிட்டு அரசியல் ஆக்கப் பார்க்காதீர்கள்..!

இது தலைவர் ஜாக்கியார் சொன்னது..!

ஜாக்கி குருப், கேபிள் குருப் என்று சில பேச்சுகள்  கவனத்துக்கு வருகின்றன..அப்படி எதுவும் இல்லை... சென்னை பதிவர்களை பொறுத்தவரை எவ்வளவு கருத்து மோதலாக சண்டை போட்டுக்கொண்டாலும் நேரில் அதனை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.. கேபிளுக்கு எனக்கும் கருத்து மோதல் உண்டு ஆனால் அவர் என் நண்பர்..அவரோடுதான் ஒஸ்திபடம் பார்த்தேன்..இரண்டு நாளைக்கு முன் கூட  இரவு  சென்னை லஷ்மன் சுருதி எதிரில் தாகசாந்தி முடித்து விட்டு புகாரியில் நான் கேபிள் மற்றும் நண்பர்களோடு சாப்பிட்டோம்..இங்கே குருப் என்று எதுவும் இல்லை... அதை வைத்துக்கொண்டு ஒன்னரை ரூபாய் வாட்டர் பாக்கெட் கூட வாங்க முடியாது.....பொழுது போகாதவர்கள் எதைவேண்டுமானாலும் பேசுவார்கள்.. அதுதானே அவர்கள் வேலை....

இதனை நன்கு படித்து, 
முடிந்தால் மனப்பாடம் செய்துகூட 
வைத்துக் கொள்ளுங்கள். 
மிக விரைவில் 
இவைகள் 
உங்களுக்கு 
நீங்கள் எழுதப் போகும் 
‘ஏதோ’வொரு பதிவின் 
ஆதாரத்துக்காக 
நிச்சயமாகத்
தேவைப்படும்..!!!

இதுவரையில் பொறுமையாக இந்தக் காவியத்தைப் படித்து முடித்த உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்கி நன்றி கூறிக் கொள்கிறேன்.

இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து

உங்கள் உண்மைத்தமிழன்

165 comments:

Astrologer sathishkumar Erode said...

இதுதான் டாப்பு..மத்ததெல்லாம் டூப்பு!!

விஜி said...

சித்தப்பூ.. உங்க பதிவிலையே கொஞ்சம் பெரிசு இதான்.. யப்பா நீங்க எக்ஸாம்ல எவ்வளவு பேப்பர் வாங்கி எழுதிவீங்க? ஒன் வேர்ட் ஆன்சர் எப்படி பதில் சொல்லுவீங்க? :)))))))

Astrologer sathishkumar Erode said...

ஈரோட்டு சிங்கம் உங்களை வருந்தி அழைத்தது! ஆனா ஈரோட்டில் இருக்கும் சில பதிவர்கள் பெயரில் தொழில் ஆரம்பித்திருக்கும் அந்த சிங்கம் ஈரோட்டில் இருந்து பதிவு எழுதும் எங்களை மெயிலில் கூட தொடர்பு கொண்டு அழைப்பு அனுப்பவில்லை!!
18 வருடமாக பத்திரிக்கையில் எழுதி வரும் சிபி.செந்தில்குமார் சாதனை செய்யவில்லையாம்.6 மாதமாக பத்திரிக்கையில் எழுதி வரும் சாதனை செய்துவிட்டாராம்..!!

ஒரு மெயில் அனுப்பி இருந்தால் கூட சில நண்பர்களை நானும் சந்தித்து இருப்பேன்..உங்களை சந்திக்காதது,,வருத்தம்தான்!!

சென்னை நண்பர்கள் உடான்ஸ் விழா இருக்கும் அதே நாளில் பெரும் குழுவாக வந்தது நிச்சயம் முரணானது...

Anonymous said...

ஆத்தாடி!! இதுவரை ஈரோடு சந்திப்ப பத்தி எல்லாரும் எழுதனை சேத்தாக்கூட இம்புட்டு நீளம் வராதே?

Anonymous said...

//இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து//

சேட்டைக்கு அளவே இல்லையா?

Anonymous said...

அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும் வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.

Astrologer sathishkumar Erode said...

அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் கூட நீங்க அழைத்ததின் பெயரில்தான் அந்த விழாவுக்கு வந்ததாக சொன்னார்.சிங்கம் சீண்டவே இல்லை.

சிபி.செந்தில்குமார் ஈரோடு விழா முரண் பற்றி எழுதியதும்,அந்த ஈரோட்டு சிங்கம் பதிவை நீக்கும்படியும்,என்னை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என்று ஃபோன் செய்து மன்றாடியதாம்!!

இப்போ மட்டும் ஃபோன் நம்பர் தெரியுதா..?

ஈரோடு விழா வில் நானும் சிபி.செந்தில்குமாரும் மட்டும் அழைக்கபடாமல் நிராகரிக்கப்பட்டோம்.

அழையா விருந்தாளியாக சென்றும் சி.பி.செந்தில் அவமானப்படுத்தப்பட்டார்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

//இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து//

சேட்டைக்கு அளவே இல்லையா?//

யோவ் சிவா என்ன நக்கலா. உ.த அண்ணனுக்கு பவர் ஸ்டாரை விட ஒரு வயசுதான் கூட. தெரியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))

Paleo God said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?

RAVI said...

அண்ணே நீளமான பதிவுன்னாலும் அருமைண்ணே அருமை.உங்க இந்தப் பதிவுல போட்டுருக்க முதல் போட்டோவால என்னயும் நீங்க சொல்லாமலே கௌரவப் படுத்தீட்டீங்கண்ணே.

பிரபாகர் said...

அண்ணே... முடியலண்ணே!... எவ்ளோ பெரிய இடுகை...

சும்மா கிடந்த எங்க அண்ணனை பரிசெல்லாம் கொடுத்து டபுளா எழுத வெச்சிட்ட்டாங்களே !...

பிரபாகர்...

புதுகை.அப்துல்லா said...

// ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன்.

//

எஸ். இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் :)

கார்க்கிபவா said...

//இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..?//

WTF!!!! இருக்கும் மரியாதையை கெடுத்துக்காதீங்கண்ணே...

கார்க்கிபவா said...

இதுல என்ன மொக்கை இருக்குன்னு சத்யமா புரியல. உங்க பதிவ உங்கள தவிர யாரும் முழுசா படிப்பாங்கன்னு எதிர்பார்க்காதீங்க. தப்பாதான் புரிஞ்சிக்கப்படும்..

என் பேர எடுத்துட்டா நல்லா இருக்கும்

புதுகை.அப்துல்லா said...

அவர் காமெடிக்கா புனைவாக அதுவும் இது மொக்கையே என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு வரிக்கு இத்தனை சீரியஸ் ரீயாக்ஷன் தேவையா கார்க்கி? :(

கார்க்கிபவா said...

அண்ணா!! பதிவுக்கு, அதுவும் கிமீ நீள பதிவுக்கு நடுவில் வரும் ஒரு வரிக்கு பெயர் தலைப்பா??? அடியேன் அறியேன்

புதுகை.அப்துல்லா said...

எல்லாரும் அந்த ஒருவரியை விட்டுவிட்டுதான் படிப்பார்கள் என்ற உன் அளவுகடந்த நம்பிக்கையை நானும் அறியேன்.

nandhavanam said...

idhu eppo puthagama veliyiduvinganne?

Santhosh said...

அப்து அண்ணே நானும் கார்க்கியுடன் ஒத்துப்போறேன். உ.தா அண்ணாச்சி தேவையில்லாம ஏதோ ஒரு உள் நோக்கத்துடன் தான் இது மாதிரி எழுதி இருக்காரு... அவருக்கா மொக்கைக்கும் புனைவுக்கும் வித்யாசம் தெரியாது.. இது தேவையில்லாததும் கூட.. படிச்சப்ப இது நடந்த மாதிரி தான் தோன்றியது

sathishsangkavi.blogspot.com said...

அண்ணே 50 பக்கம் எழுதுகிறேன் என்று சொல்லி 100 பக்கம் எழுதி விட்டீர்கள்... நாங்களும் ரசித்து படித்தோம்....

NAGA INTHU said...

அடேங்கப்பா,படிக்கிறது ராமாயணம்,செய்யறது சகுணி வேலை. வெல்டிங் வேலை சூப்பர். அது சரி எல்லோரையும் அண்ணே,என சொன்னால் உண்மைத்தமிழன் யூத் ஆகிட முடியுமா? எப்படியோ வராதவர்களுக்கு வந்து கலந்துகொண்ட நிறைவு.அதற்கு நன்றி.
அரவரசன்.

kathir said...

இரு திருத்தங்கள்.....
* என்னோடும் வானம்பாடியோடு வந்தவர்கள் என் குடும்பத்தினர் அல்ல. அடுத்து அந்த 5 குழந்தைகளில் ஒன்று மட்டுமே என் குழந்தை மற்றவை ஆரூரன் மற்றும் வேலு ஆகியோரின் வீட்டுப்பிள்ளைகள்!

* விருது என்று அதை நாங்கள் எங்கும் பாவிக்கவில்லை. அடையாளப்படுத்துதல் மற்றும் பாராட்டுதல் மட்டுமே!

kathir said...

அந்த 15 பேர் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது குறித்து நிகழ்ச்சி முடிந்ததும் சென்னையிலிருந்து பேசினீர்கள். நீங்கள் இன்னும் இது பதிவர்களுக்கான பாராட்டு மட்டுமே என்று நினைத்திருக்கிறீர்கள், அதில் ஓரிருவர் வலைப்பக்கமே(blog) இல்லாமல் Facebookல் மட்டுமே இருப்பவர்கள் கூட இருக்கின்றனர். இதில் மூத்தவர், இளையவர் என்ற அடிப்படை ஏதுமேயில்லை என்று கூறினேன். அடுத்து நீங்கள் குறிப்பிட்ட ஓரிரு பெயர்கள் எங்கள் யாருக்குமே பரிட்சயமில்லாததும் கூட...

அதுகுறித்து என் வலைப்பக்கத்தில் எழுதியது.....
//பாராட்டுப்பெற்ற ஒரு பதிவர் தன்னைவிட சில மூத்த பதிவர்களைப் பாராட்டியிருக்கலாம் எனக்கூறினார். இது பதிவர்களுக்கான வெறும் பாராட்டுவிழா மட்டுமல்ல. வலைதளத்தில் இல்லாமல் ஃபேஸ்புக்கில் மட்டுமே இயங்குபவரையும் நேற்று மேடையேற்றியிருக்கின்றோம். சமூகவலை தளங்களில் இயங்குவதோடு வேறுவேறு தளங்களிலும் சிறப்பாகப் பணியாற்றும் பலரைப் பட்டியலிட்டு அதிலிருந்து வடித்தெடுத்து, ஒரு முயற்சியாக இதை நிறைவேற்றியிருக்கின்றோம். இதற்காக ஒரு குழு பெரும் உழைப்பை செயல்படுத்தியிருக்கின்றது. நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கா இறுதிசெய்த பட்டியல் மட்டுமே இறுதியானது அல்ல. தமிழ்தேசமெங்கும் இது போன்ற அங்கீகார நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணம் மட்டுமே! இதுபோன்று அங்கீகரிக்கத் தகுதியான இணைய நண்பர்கள் நிறைய உள்ளனர் என்பதையும் அறிவேன். ”மிகக்குறுகிய காலத்திட்டம் என்பதாலும் சிலரைத் தவறவிட்டிருக்கிறோம் என்பதாகவும் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்”//

kathir said...

//கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..!
//

நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு எழுதியிருப்பீர்கள், ஆன சிரிப்புவரலைண்ணே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :(

அதேசமயம் சங்கமம் என்பது குழுமத்தின் நிகழ்வு. கதிரின் தனிப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. நகைச்சுவைக்காகக் கூட ஆதி / பரிசலுக்கு கடுப்பு இருக்கும் என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை.

--

சஞ்சய் buzz-ஐ அன்றைக்கே படித்துவிட்டேன். நீங்க ரொம்ப லேட்!

kathir said...

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்பா,
உண்மைத்தமிழனுக்கு பதில் போட்டா பின்னூட்டமும் ரொம்ப நீளமா வருதே!

Iyappan Krishnan said...

:( இதுவரைக்கும் கொஞ்சமும் படிச்சதுல பிடிக்கவே பிடிக்காத பதிவு இது தான். விளையாட்டு , மொக்கை என்று சொல்வதற்கும் வரைமுறை உண்டு. எனக்கு சரியா படலை.

Jackiesekar said...

அண்ணே நீங்க உத்தமரு.. எதை சொன்னாலும் ஏத்துப்பிங்க...நான் அப்படி இல்லை..இப்ப மட்டும் அல்ல.. எப்பவுமே அப்படித்தான்..நீங்க எத்தனை வாட்டி சொன்னாலும் இதுதான்... அதே போல உலகத்தில் நீங்க மட்டும்தான் யோக்கியசிகாமணி அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு..அந்த வேஷத்தோடே அலையுங்க... நான் அப்படி இல்லை அது எல்லாருக்கும் தெரியும்...நான் பின்னுட்டம் போடவில்லை...என் பதிவில் குறிப்பு என்று எழுதினேன். சரியா முதலில் படிங்க...

Jackiesekar said...

விம்ர்சனம்ன்ற பெயர்ல உங்களை அசிங்கமா எவன் திட்டினாலும் மண்டைய ஆட்டி ஆட்டி ஏத்துக்குங்க நான் அப்படி இல்லை...எது விமர்சனம் எது விமர்சனம் இல்லைன்னு எனக்கு தெரியும்.. உங்களை மாதிரி நானும் இருக்கனும் நினைக்கறது கொடுமை..

இந்த பதிவு முழுக்க படிச்சேன்.. உங்களை புரிஞ்சிக்க இந்த பதிவு நல்ல வாய்ப்பு...

இப்பதான் தெரிஞ்சிது நீங்க என் தளத்து பக்கம் ஏன் வரலைன்னு... வரலையா ரொம்ப சந்தோஷம்... நானும் அப்படித்தான்..நன்றி

Jackiesekar said...

பாராட்டி மகிழ்வது என்பது வேறு... விருது என்பது வேறு..இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு அண்ணே..

ராஜரத்தினம் said...

அந்த ஃபோட்டாவில நீங்க எங்க?

Thamira said...

இது, நான் மூணாவதாகவோ, நாலாவதாகவோ படிக்கும் உங்கள் பதிவு. ஒரு விஷயத்தை சுருக்கமாகவும், அழகாகவும் சொல்லத்தெரியாத ஒரு நபர் தமிழ் இணைய உலகில் இவ்வளவு புகழ் பெற்று விளங்க முடியுமா என்று நான் ஆச்சரியப்படும் நபர்களில் நீங்களும் ஒருவர். இவ்வளவு மொக்கையாக எழுதுவது மட்டுமல்லாமல், ஒருத்தர் இன்ஸுலின் போட்டுக்கொள்வது, அதிகாலையில் வேறொரு நபரின் அறைக்குள் சென்றபோது அவர் பாத்ரூமிலிருந்து முக்கால் நிர்வாணத்தில் வெளியேவந்தது.. யார்யாரையோ பொதுநிகழ்வில் ‘அவர்கள் தண்ணியடித்திருந்தார்கள்’ என்று சதா சொல்லிக்கொண்டேயிருப்பது.. இது போல நிறைய இந்த ஒரு பதிவிலேயே பார்க்கமுடிகிறது.. இப்படியெல்லாம் எழுதி மற்றவரின் அந்தரங்கத்தை பொதுவில் வைக்கிறீர்கள். இந்த குறைந்தபட்ச இங்கிதம் கூட தெரியாதா உங்களுக்கு? ஒரு அழகான நிகழ்வுக்குப் போய் வந்ததை இப்படித்தான் நம்பர் டூ போனதைத் தவிர, ”மூணாவது வரிசையில் உட்கார்ந்தேன், நாலு இட்லி சாப்பிட்டேன். அப்போது ஒருவர் முதுகில் இடித்தார். நான் நகர்ந்து உட்கார்ந்தேன்..” இப்paடியெல்லாம் எழுதி சாகடிப்பீர்களா? சரி, அதைவிடுங்கள், அது உங்கள் ரசனை, உங்கள் வாசகர்களின் ரசனை.

தேவையில்லாமல் நான், என் நண்பர்களோடு நடத்திய சென்னை விழாவை ஏன் நகைச்சுவை என்ற பெயரில் கொச்சைப்பட்டுத்தியிருக்கிறீர்கள்?

யார் மீதும், எதன் பொருட்டும் எனக்கு வன்மமோ, பொறாமையோ கிடையாது. அப்துல், கேபிள் போன்ற என் நண்பர்களுக்குக் கிடைக்கும் பாராட்டைத் தடுக்கும் எண்ணமும் எனக்குக் கிடையாது. சங்கமம் போன்ற பெரிய நிகழ்வுகளை மதிப்பவன் நான். அதற்காக தன் முனைப்பில் யாரும் கேட்காமலேயே தேதியை மாற்றும் மனது உண்டு எனக்கு. ஆனால் எதிர்பாராமல் நிகழ்ச்சி முன்பே ஏற்பாடு ஆகிவிட்டபடியால், பரிசு பெறுபவர்கள் 4 பேர் தன் வருகையை உறுதி செய்துவிட்டபடியால் நிகழ்ச்சியை நடத்தும்படி ஆயிற்று. யுவகிருஷ்ணா, அதிஷா, மணிஜி போன்றோர் இல்லாமல் விழா நடந்தது ஒரு குறையே என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்துல்லா ஏதோ ஜாலியாக சொல்லியிருக்கும் வாக்கியத்தின் தொனியைத் திரித்திருக்கிறீர்கள்.

தனிப்பட்ட நிகழ்வு குறித்த ஒரு தனிநபரின் (சஞ்சய்) பர்சனலான கருத்தை வெளியே சொன்னால் அவருக்கு சங்கடம் ஏற்படுமே என்ற விஷயம் கூட உங்களுக்கு நகைச்சுவையாகப்படுகிறதா? ஜாக்கி, கேபிள் ஆகியோருக்கிடையே சிண்டு முடிய எங்கள் நிகழ்ச்சிதான் கிடைத்ததா உங்களுக்கு? உங்களுடைய ’தலைவர்’ அரசியலை, கிண்டலையெல்லாம் உங்களோடேயே வைத்துக்கொள்ளுங்கள். என் முழுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Thamira said...

For follow up.

வெண்பூ said...

//
தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார்.
//

கால‌ங்காத்தால‌ இதைப் ப‌டிச்சிட்டு க‌ண்ணுல‌ த‌ண்ணி வ‌ர‌ சிரிச்சிட்டு இருக்கேன் :))))))))

ஆனாலும் ப‌திவு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப‌ பெருசு :)

வெண்பூ said...

அவ்வ்வ். இப்ப‌த்தான் ம‌த்த‌ பின்னூட்ட‌ம் எல்லாம் ப‌டிச்சேன்... இது ர‌த்த‌பூமி போல‌.. நான் அப்பீட்டு ஆகிக்குறேன்..

Anonymous said...

சார்! மெய்யாலுமே 50 பக்கத்துக்கு எழுதறீங்க! உங்களை மணிரத்னத்துகிட்டேதான் விடணும்.

என் வலையில்;
ஹன்ஸிகா

Sanjai Gandhi said...

//“நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான்.//

அண்ணா, உங்க மேல எவ்ளோ பாசமும் மரியாதையும் வச்சிருக்கேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். உங்க கிட்ட எவ்ளோ சண்டை போட்டாலும் மத்தவங்க கிட்ட பேசற மாதிரி எல்லாம் வார்த்தை விட்டதே இல்லை. ஏன்ண்ணே இப்படி? மனசாட்சியோட சொல்லுங்க. நான் இப்படிக் கேட்டேனா?

( 2 நாள் முன்னாடி ப்ளசில் எழுதி இருந்தேன். உங்களிடம் அப்படிக் கேட்கவில்லை )

“என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான்.//

இதிலும் பாதி உண்மை இல்லை. சீனியர் பதிவர்களுக்கு விருது தராங்களாம் என்று சொன்னிங்க. நான் எல்லாம் 2006ல் இருந்து எழுதறேன், என்னை எல்லாம் மதிக்கவே மாட்டேன்றாங்கப்பா என்றேன். ஆமாண்டா, நீ எனக்கே சீனியர் ஆச்சே என்றீர்கள். இதெல்லாம் சிரித்துக் கொண்டே தமாஷாகத் தான் பேசிக் கொண்டிருந்தோம்.

எதுக்கு தேவை இல்லாத வார்த்தைகள் எல்லாம்? எனக்கு இந்த கன்றாவிகளில் எல்லாம் ஆர்வமும் இல்லை. மரியாதையும் இல்லை.. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் ஆர்வம் சுத்தமா கிடையாது.. ஆள விடுங்க..

அதே நாளில் கோவையில் நடந்த ட்விட்டர் சந்திப்பில் கூட, எனக்கு ஆர்வம் இல்லை, வரலை என்று சொல்லி இருந்தேன். அதனால இந்த முதுகு சொரிதல்,புண்ணாக்கு வியாபாரத்துக்கு எல்லாம் தொழிலதிபர் விருது குடுக்கிற அரசியல் இதுல எல்லாம் என்னைக் கோர்த்து விடாதிங்க..

Sanjai Gandhi said...

...

Santhose said...

I think the food expenses were sponsored by Dhamodar Chandru only

Sanjai Gandhi said...

//நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு //

நல்லவேளை.. இது ஜாக்கி ப்ளாக் இல்லை...

ILA (a) இளா said...

யுடான்ஸ், ஈரோடு சங்கமம் ஒரே நாளில் நடந்ததற்கான காரணம் அமெரிக்காவுல எனக்கேத் தெரியுதே. உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு. அந்த லட்சணத்துல இருக்கு உங்க "Communication Gap".

அடுத்து அங்கீகாரம்: நவன்தான் முதல் பதிவர். அவருக்கு ஏன் விருது குடுக்கைலைன்னு கேட்பீங்க போல.

கடைசியா, ஏன் உங்களுக்கு இந்த சிண்டு முடியற வேலை?

Santhosh said...

//Santhose said...

I think the food expenses were sponsored by Dhamodar Chandru only//

இது நான் இல்லைங்க சாமியோவ்...

butterfly Surya said...

டீடெயிலிங்ல உங்களை அடிச்சிக்க முடியாது. ஆனாலும் இவ்வளவு டீடெயில் தேவையா..?? புரியலண்ணே.. சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமே.

கதிர் + டீமுக்கு வாழ்த்துகள்.

butterfly Surya said...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. புத்தாண்டு வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

[[[நல்ல நேரம் சதீஷ்குமார் said...

இதுதான் டாப்பு.. மத்ததெல்லாம் டூப்பு!!]]]

நல்ல நேரம் ஸார்.. நீர் முதல் கமெண்ட் போட்ட நேரம்.. எனக்கு அர்ச்சனை பிய்ச்சுக்கிட்டு போகுது..!

அதான் ஹெட்லெட்டர்ல கலரோட "மொக்கைதான்"னு எழுதியிருக்கனே..? அப்புறமும் அதைப் படிச்சிட்டே நின்னா எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[விஜி said...

சித்தப்பூ.. உங்க பதிவிலையே கொஞ்சம் பெரிசு இதான்.. யப்பா நீங்க எக்ஸாம்ல எவ்வளவு பேப்பர் வாங்கி எழுதிவீங்க? ஒன் வேர்ட் ஆன்சர் எப்படி பதில் சொல்லுவீங்க? :)))))))]]

அப்பல்லாம் இந்த புத்தி இல்லை. ஒழுக்கமாத்தான் இருந்தேன். இப்போத்தான்.. ஓசில பிளாக் கிடைச்சு, டைப்பிங்ல ஸ்பீட் இருக்கிறதால சாத்திக்கிட்டிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ஈரோட்டு சிங்கம் உங்களை வருந்தி அழைத்தது! ஆனா ஈரோட்டில் இருக்கும் சில பதிவர்கள் பெயரில் தொழில் ஆரம்பித்திருக்கும் அந்த சிங்கம் ஈரோட்டில் இருந்து பதிவு எழுதும் எங்களை மெயிலில் கூட தொடர்பு கொண்டு அழைப்பு அனுப்பவில்லை!!]]]

இதனை நீங்கள் நேரில் சென்று பேசித் தீர்த்திருக்கலாம். இப்போதும் காலம் ஓடிவிடவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு. பொதுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஈகோ தேவையில்லை நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

ஆத்தாடி!! இதுவரை ஈரோடு சந்திப்ப பத்தி எல்லாரும் எழுதனை சேத்தாக்கூட இம்புட்டு நீளம் வராதே?]]]

ஹா.. ஹா.. செம கமெண்ட்டு.. நன்றி சிவகுமார்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//இப்படிக்கு

தமிழ் வலையுலகத்தின் ஒரேயொரு யூத்து//

சேட்டைக்கு அளவே இல்லையா?]]]

உண்மையைச் சொன்னா ஏன்யா கோவிச்சுக்குறீங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[நல்ல நேரம் சதீஷ்குமார் said...

அட்ரா சக்க சி.பி.செந்தில்குமார் கூட நீங்க அழைத்ததின் பெயரில்தான் அந்த விழாவுக்கு வந்ததாக சொன்னார்.]]]

நானா..? நான் எப்போ, எங்கே கூப்பிட்டேன்.? சி.பி.யும் குழுமத்தில் இருக்கிறார் என்றுதான் நான் நினைத்திருந்தேன். எனக்கு இந்த விவகாரங்கள் தெரியாது..!

[[[ஈரோடு விழாவில் நானும் சிபி.செந்தில்குமாரும் மட்டும் அழைக்கபடாமல் நிராகரிக்கப்பட்டோம்.
அழையா விருந்தாளியாக சென்றும் சி.பி.செந்தில் அவமானப்படுத்தப்பட்டார்!!]]]

யாரும் அவரை அவமானப்படுத்தலை. ச்சும்மா சின்னப் பிரச்சினையை பெரிசு பண்ணாதீங்க சதீஷ்.. உங்களுக்கு குழுமத்துடன் இணைய விருப்பமெனில் நீங்களே நேரடியா போய் பேசுங்க..! அதை விட்டுட்டு இப்படி பொதுவெளில அதைப் பத்திப் பேசாதீங்க..!

உங்களுக்கு நான்தான் கிடைச்சனா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))]]]

தம்பி.. எனக்கு 2 நாளாச்சு.. 8 மணி நேரம் செலவழிச்சு டைப் பண்ணியிருக்கேன்.. பொறுமையா படிச்சுட்டு பேசுப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் சிவா என்ன நக்கலா. உ.த அண்ணனுக்கு பவர் ஸ்டாரை விட ஒரு வயசுதான் கூட. தெரியுமா?]]]

இது பவர் ஸ்டாருக்குத் தெரியுமா ரமேஷ்..?

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))]]]

ஹா.. ஹா.. அரை மணி நேரத்துல முடிச்சா என்ன தருவீங்க..? சீப்பா..?

உண்மைத்தமிழன் said...

[[[【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!]]

சிலையா..? இங்க அர்ச்சனைல நடக்குது..!?

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

அண்ணே நீளமான பதிவுன்னாலும் அருமைண்ணே அருமை. உங்க இந்தப் பதிவுல போட்டுருக்க முதல் போட்டோவால என்னயும் நீங்க சொல்லாமலே கௌரவப்படுத்தீட்டீங்கண்ணே.]]]

நீங்கதானா அந்த ரவி.. மிக்க நன்றி ரவி..! என்னிடம் முகம் தெரியாமல் இருந்தது இந்த ஒரு புகைப்படம்தான்..! அடையாளம் கண்டு கொண்டேன்..

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?]]]

அது போகலைன்னாலும் நீங்க தூக்கிட்டு வந்து விடுவீங்க போலிருக்கே..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

அண்ணே... முடியலண்ணே! எவ்ளோ பெரிய இடுகை. சும்மா கிடந்த எங்க அண்ணனை பரிசெல்லாம் கொடுத்து டபுளா எழுத வெச்சிட்ட்டாங்களே!

பிரபாகர்...]]]

பெருமைப்படுத்திய ஈரோடு குழுமத்தினருக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகை.அப்துல்லா said...

// ஆதி, பரிசல், வெண்பூ, நர்சிம், கார்க்கி, அப்துல் என்ற கூட்டணி ஒரே சமயத்தில்தான் பதிவுலகத்தில் நுழைந்தார்கள் என்று நினைக்கிறேன்.//

எஸ். இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் :)]]]

அதேதான்.. நான்கூட முன்னாடி ஒரு முறை பரிசல் மற்றும் ஆதியிடம் சொல்லியிருக்கிறேன்.. "உங்க டீம் உள்ள வந்த பின்னாடிதான் தமிழ் வலையுலகம் இன்னும் வேகம் பிடிச்சது" என்று..!

உண்மைத்தமிழன் said...

[[[கார்க்கி said...

//இதில் மிச்சம் மீதியிருந்த சீனியர்களைவிட்டுவிட்டு ஒருத்தருக்கு மட்டும் பொன்னாடை போர்த்தினால், விட்டுவிடுவார்களா அவர்கள்..?//

WTF!!!! இருக்கும் மரியாதையை கெடுத்துக்காதீங்கண்ணே...]]]

காமெடிக்குத்தான்பா.. இதுக்கேன் இப்படி கோச்சுக்குற.. உன் காமெடியையெல்லாம் நாங்க தாங்குறோம்ல..?

உண்மைத்தமிழன் said...

[[[கார்க்கி said...

இதுல என்ன மொக்கை இருக்குன்னு சத்யமா புரியல. உங்க பதிவ உங்கள தவிர யாரும் முழுசா படிப்பாங்கன்னு எதிர்பார்க்காதீங்க. தப்பாதான் புரிஞ்சிக்கப்படும்..

என் பேர எடுத்துட்டா நல்லா இருக்கும்.]]]

நோ பிராப்ளம்.. என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு நான் எழுதியிருப்பதன் தொனி நன்கு தெரியும்.. நோ பீலிங் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகை.அப்துல்லா said...

அவர் காமெடிக்கா புனைவாக அதுவும் இது மொக்கையே என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு வரிக்கு இத்தனை சீரியஸ் ரீயாக்ஷன் தேவையா கார்க்கி? :(]]]

நீயாவது நல்லா கேளுப்பா..! யாராச்சும் இதைப் போய் சீரியஸா எழுதுவாங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[கார்க்கி said...

அண்ணா!! பதிவுக்கு, அதுவும் கிமீ நீள பதிவுக்கு நடுவில் வரும் ஒரு வரிக்கு பெயர் தலைப்பா??? அடியேன் அறியேன்]]]

தம்பி.. தலைப்பெல்லாம் ஒரு வரிலதான் வைக்கணும். அப்பத்தான் அதுக்குப் பேரு தலைப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[புதுகை.அப்துல்லா said...

எல்லாரும் அந்த ஒரு வரியை விட்டுவிட்டுதான் படிப்பார்கள் என்ற உன் அளவு கடந்த நம்பிக்கையை நானும் அறியேன்.]]]

நன்றி அப்துல்.. இதனை நான் சொன்னாலே தப்பாயிரும் போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[nandhavanam said...

idhu eppo puthagama veliyiduvinganne?]]]

யாராவது பதிப்பாளர் கிடைத்தால் வெளிவரும்.. ஏன்.. நீங்க ரெடியா..?

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...

அப்து அண்ணே நானும் கார்க்கியுடன் ஒத்துப் போறேன். உ.தா அண்ணாச்சி தேவையில்லாம ஏதோ ஒரு உள் நோக்கத்துடன்தான் இது மாதிரி எழுதி இருக்காரு... அவருக்கா மொக்கைக்கும் புனைவுக்கும் வித்யாசம் தெரியாது.. இது தேவையில்லாததும் கூட.. படிச்சப்ப இது நடந்த மாதிரிதான் தோன்றியது]]]

காமெடியா எடுத்துக்க தெரியலைன்னா நான் என்ன செய்ய முடியும் சந்தோஷ்..?

உண்மைத்தமிழன் said...

[[[சங்கவி said...

அண்ணே 50 பக்கம் எழுதுகிறேன் என்று சொல்லி 100 பக்கம் எழுதி விட்டீர்கள்... நாங்களும் ரசித்து படித்தோம்.]]]

மிக்க நன்றி சங்கவி. கொஞ்சம் போன் செய்யேன்.. பேசணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[NAGA INTHU said...

அடேங்கப்பா,படிக்கிறது ராமாயணம்,செய்யறது சகுணி வேலை. வெல்டிங் வேலை சூப்பர். அது சரி எல்லோரையும் அண்ணே,என சொன்னால் உண்மைத்தமிழன் யூத் ஆகிட முடியுமா? எப்படியோ வராதவர்களுக்கு வந்து கலந்துகொண்ட நிறைவு.அதற்கு நன்றி.
அரவரசன்.]]]

சகுனி வேலையில்லை.. நாரதர் வேலை.. ச்சும்மா போரடிக்காமல் இருக்கத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[kathir said...

இரு திருத்தங்கள்.....

* என்னோடும் வானம்பாடியோடு வந்தவர்கள் என் குடும்பத்தினர் அல்ல. அடுத்து அந்த 5 குழந்தைகளில் ஒன்று மட்டுமே என் குழந்தை மற்றவை ஆரூரன் மற்றும் வேலு ஆகியோரின் வீட்டுப் பிள்ளைகள்!]]]

ஸாரிண்ணே.. மன்னிச்சுக்கங்கண்ணே..! நான் கேக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். இது மட்டும் சரியா அந்தச் சமயத்தில் மறந்துவிட்டது..!

[[[* விருது என்று அதை நாங்கள் எங்கும் பாவிக்கவில்லை. அடையாளப்படுத்துதல் மற்றும் பாராட்டுதல் மட்டுமே!]]]

உங்களுக்கு பாராட்டுதல்.. எங்களுக்கு விருதுகளாகத்தானே பாவிக்க வேண்டும். எங்களைப் பாராட்டினாங்கன்னு சொல்லிப் பழக்கமில்லையே..? நோ பிராப்ளம்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[kathir said...
அந்த 15 பேர் பட்டியல் தேர்வு செய்யப்பட்டது குறித்து நிகழ்ச்சி முடிந்ததும் சென்னையிலிருந்து பேசினீர்கள். நீங்கள் இன்னும் இது பதிவர்களுக்கான பாராட்டு மட்டுமே என்று நினைத்திருக்கிறீர்கள், அதில் ஓரிருவர் வலைப்பக்கமே(blog) இல்லாமல் Facebookல் மட்டுமே இருப்பவர்கள் கூட இருக்கின்றனர். இதில் மூத்தவர், இளையவர் என்ற அடிப்படை ஏதுமேயில்லை என்று கூறினேன். அடுத்து நீங்கள் குறிப்பிட்ட ஓரிரு பெயர்கள் எங்கள் யாருக்குமே பரிட்சயமில்லாததும் கூட...]]]

உங்களுடைய தெளிவான விளக்கத்துக்கு நன்றி கதிர்.. அடுத்த முறையில் வலைப்பதிவுகளில் மூத்தவர்களை அடையாளப்படுத்துங்கள். கடந்து வந்த பாதையை இளையவர்கள் தெரிந்து கொள்ளட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[kathir said...

//கதிரின் மீதி இருக்கும் கடுப்பினாலும் ஆதியும், பரிசலும் இதனை வேண்டுமென்றே செய்திருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சந்தேகிக்கிறது..!//

நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு எழுதியிருப்பீர்கள், ஆன சிரிப்பு வரலைண்ணே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :(]]]

ஓகே. அப்ப உங்களுக்குப் புரிஞ்சிருச்சு. இது காமெடிக்காக எழுதியிருக்கேன்னு.. இது போதும் எனக்கு..!

[[[அதேசமயம் சங்கமம் என்பது குழுமத்தின் நிகழ்வு. கதிரின் தனிப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. நகைச்சுவைக்காகக் கூட ஆதி / பரிசலுக்கு கடுப்பு இருக்கும் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.]]]

ச்சே.. காமெடிக்குக் கூட அடிச்சுக்க மாட்டீங்களான்னு சொல்லக் கூடாதா..? என்ன கொடுமை இது..?

உண்மைத்தமிழன் said...

[[[kathir said...

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்பா,
உண்மைத்தமிழனுக்கு பதில் போட்டா பின்னூட்டமும் ரொம்ப நீளமா வருதே!]]]

வரணும்ல்ல.. அப்பத்தான் உண்மைத்தமிழனுக்கே பெருமை.. தங்களது வருகைக்கு மிக்க நன்றி கதிர். கொஞ்சம் சங்கடப்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னியுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jeeves said...

:( இதுவரைக்கும் கொஞ்சமும் படிச்சதுல பிடிக்கவே பிடிக்காத பதிவு இதுதான். விளையாட்டு, மொக்கை என்று சொல்வதற்கும் வரைமுறை உண்டு. எனக்கு சரியா படலை.]]]

இது லைட்டான காமெடிதான் ஜீவ்ஸ்.. இதுவே பிடிக்கலையா..? ஆச்சரியமா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Jackiesekar said...
அண்ணே நீங்க உத்தமரு. எதை சொன்னாலும் ஏத்துப்பிங்க. நான் அப்படி இல்லை. இப்ப மட்டும் அல்ல. எப்பவுமே அப்படித்தான். நீங்க எத்தனை வாட்டி சொன்னாலும் இதுதான். அதே போல உலகத்தில் நீங்க மட்டும்தான் யோக்கியசிகாமணி அப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு. அந்த வேஷத்தோடே அலையுங்க. நான் அப்படி இல்லை அது எல்லாருக்கும் தெரியும். நான் பின்னுட்டம் போடவில்லை. என் பதிவில் குறிப்பு என்று எழுதினேன். சரியா முதலில் படிங்க...]]]

உஷ்.. தம்பி.. ராசா.. தங்கம்.. நான் எங்க என்னை உத்தமன்னு இதுல சொல்லியிருக்கேன். ஏன் பிளேட்டை திருப்பி போடுற..?

நமது கருத்து மாற்றுக் கருத்துடன் விமர்சனங்கள் வந்தால் அதையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் சொன்னேன்.. இது தப்பா..?

இதுக்கு பதில் சொல்லாம எதுக்கு நான் சொல்லாத வார்த்தையை வைச்சு சிலம்பாட்டம் ஆடுற..?

உண்மைத்தமிழன் said...

[[[Jackiesekar said...

விம்ர்சனம்ன்ற பெயர்ல உங்களை அசிங்கமா எவன் திட்டினாலும் மண்டைய ஆட்டி ஆட்டி ஏத்துக்குங்க நான் அப்படி இல்லை. எது விமர்சனம் எது விமர்சனம் இல்லைன்னு எனக்கு தெரியும். உங்களை மாதிரி நானும் இருக்கனும் நினைக்கறது கொடுமை.]]]

யாரும், யாரையும் அசிங்கமா திட்டினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.. அப்படிப்பட்ட பின்னூட்டங்களை நானே ஏற்பதில்லை.. கண்ணியமான வார்த்தைகளில் விமர்சனமாக வரும் பின்னூட்டங்களை கூட நீ தவிர்க்கிறாய்.. அதைத்தான் இங்கே நான் குறிப்பிட்டிருக்கேன்..! நான் எழுதியதும் அப்படித்தான் இருந்தது. நான் எங்கே ஆபாச வார்த்தைகளில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்..!?

[[[இந்த பதிவு முழுக்க படிச்சேன்.. உங்களை புரிஞ்சிக்க இந்த பதிவு நல்ல வாய்ப்பு. இப்பதான் தெரிஞ்சிது நீங்க என் தளத்து பக்கம் ஏன் வரலைன்னு. வரலையா ரொம்ப சந்தோஷம்... நானும் அப்படித்தான்..நன்றி]]]

அடப்பாவி மவனே.. இதுவரைக்கும் என்னைப் பத்தி தெரியாத விஷயம், இந்த ஒரு பதிவைப் படிச்சவுடனேயே தெரிஞ்சுச்சாக்கும்..! நல்ல காமெடியான பின்னூட்டம் இதுதான்டா ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[Jackiesekar said...

பாராட்டி மகிழ்வது என்பது வேறு. விருது என்பது வேறு. இரண்டுக்கும் வித்யாசம் இருக்கு அண்ணே..]]]

பாராட்டுதலில் பரிசையும் சொல்லலாம். விருதையும் சொல்லலாம்.. கதிரும் எனக்கு இதனை விளக்கி விட்டார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

அந்த ஃபோட்டாவில நீங்க எங்க?]]]

இதைவிட காமெடியான கமெண்ட் வேற எதுவுமே இல்லை.. அண்ணே நீங்களுமா..? நீலக்கலர் சட்டையெல்லாம் நான்தாண்ணே..!

தருமி said...

//சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. //

அவருக்குத் தனி மரியாதை செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது.

பெரிதும் புகழப்பட வேண்டிய இளைஞர். வாழ்க அவர் நல்ல மனமும் தொண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[இது, நான் மூணாவதாகவோ, நாலாவதாகவோ படிக்கும் உங்கள் பதிவு. ஒரு விஷயத்தை சுருக்கமாகவும், அழகாகவும் சொல்லத் தெரியாத ஒரு நபர் தமிழ் இணைய உலகில் இவ்வளவு புகழ் பெற்று விளங்க முடியுமா என்று நான் ஆச்சரியப்படும் நபர்களில் நீங்களும் ஒருவர். இவ்வளவு மொக்கையாக எழுதுவது மட்டுமல்லாமல், ஒருத்தர் இன்ஸுலின் போட்டுக் கொள்வது, அதிகாலையில் வேறொரு நபரின் அறைக்குள் சென்றபோது அவர் பாத்ரூமிலிருந்து முக்கால் நிர்வாணத்தில் வெளியே வந்தது.. யார் யாரையோ பொது நிகழ்வில் ‘அவர்கள் தண்ணியடித்திருந்தார்கள்’ என்று சதா சொல்லிக் கொண்டேயிருப்பது.. இது போல நிறைய இந்த ஒரு பதிவிலேயே பார்க்க முடிகிறது.. இப்படியெல்லாம் எழுதி மற்றவரின் அந்தரங்கத்தை பொதுவில் வைக்கிறீர்கள். இந்த குறைந்தபட்ச இங்கிதம் கூட தெரியாதா உங்களுக்கு? ஒரு அழகான நிகழ்வுக்குப் போய் வந்ததை இப்படித்தான் நம்பர் டூ போனதைத் தவிர, ”மூணாவது வரிசையில் உட்கார்ந்தேன், நாலு இட்லி சாப்பிட்டேன். அப்போது ஒருவர் முதுகில் இடித்தார். நான் நகர்ந்து உட்கார்ந்தேன்..” இப்paடியெல்லாம் எழுதி சாகடிப்பீர்களா? சரி, அதைவிடுங்கள், அது உங்கள் ரசனை, உங்கள் வாசகர்களின் ரசனை.]]]

அப்பாடா இப்போதாவது என்னைப் பற்றி வெளிப்படையாகச் சொன்னீர்களே..!? மிக்க நன்றி ஆதி..!

[[[தேவையில்லாமல் நான், என் நண்பர்களோடு நடத்திய சென்னை விழாவை ஏன் நகைச்சுவை என்ற பெயரில் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்?]]]

இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருக்கிறது என்பதை நான் முன்பேயே சொல்லியிருக்கிறேன். நீங்கள்தான் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்..!

[[[யார் மீதும், எதன் பொருட்டும் எனக்கு வன்மமோ, பொறாமையோ கிடையாது. அப்துல், கேபிள் போன்ற என் நண்பர்களுக்குக் கிடைக்கும் பாராட்டைத் தடுக்கும் எண்ணமும் எனக்குக் கிடையாது. சங்கமம் போன்ற பெரிய நிகழ்வுகளை மதிப்பவன் நான். அதற்காக தன் முனைப்பில் யாரும் கேட்காமலேயே தேதியை மாற்றும் மனது உண்டு எனக்கு. ஆனால் எதிர்பாராமல் நிகழ்ச்சி முன்பே ஏற்பாடு ஆகிவிட்டபடியால், பரிசு பெறுபவர்கள் 4 பேர் தன் வருகையை உறுதி செய்துவிட்டபடியால் நிகழ்ச்சியை நடத்தும்படி ஆயிற்று.]]]

இதெல்லாம் எனக்கும்தான் தெரியுமே?
யார் இல்லைன்னு சொன்னா..?

[[[யுவகிருஷ்ணா, அதிஷா, மணிஜி போன்றோர் இல்லாமல் விழா நடந்தது ஒரு குறையே என்று குறிப்பிட்டிருக்கிறேன்.]]]

பார்த்தீங்களா..? இதுலகூட என் பேரைத் தவிர்த்துவிட்டுத்தான் சொல்கிறீர்கள்..? என்ன கோபம்..? நோ பீலிங்.. ஒன்லி மொக்கை..!

[[[அப்துல்லா ஏதோ ஜாலியாக சொல்லியிருக்கும் வாக்கியத்தின் தொனியைத் திரித்திருக்கிறீர்கள்.]]]

எதையும் திரிக்கலை.. காமெடியாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் அது காமெடியாகத் தெரியவில்லை. எனக்கு அங்கத வார்த்தைகள் இன்னமும் பிடிபடவில்லை போலும்..!

[[[தனிப்பட்ட நிகழ்வு குறித்த ஒரு தனி நபரின் (சஞ்சய்) பர்சனலான கருத்தை வெளியே சொன்னால் அவருக்கு சங்கடம் ஏற்படுமே என்ற விஷயம் கூட உங்களுக்கு நகைச்சுவையாகப்படுகிறதா?]]]

அதான் முன்பே சொன்னனே.. யாரும், எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால்தான் மொக்கை லிஸ்ட்டில் சேர்த்து கடைசியில் எழுதினேன்..!

[[[ஜாக்கி, கேபிள் ஆகியோருக்கிடையே சிண்டு முடிய எங்கள் நிகழ்ச்சிதான் கிடைத்ததா உங்களுக்கு? உங்களுடைய ’தலைவர்’ அரசியலை, கிண்டலையெல்லாம் உங்களோடேயே வைத்துக் கொள்ளுங்கள். என் முழுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.]]]

நான் இதனை அவர்கள் இருவருக்கும்தான் டெடிகேட் செய்திருக்கிறேன்.. நோ பீலிங். நேராவே சொல்லியிருக்கேன். ஒண்ணும் பிரச்சினையில்லை..!

உஷ்ஷ்ஷ்.. ஆதிமூலகிருஷ்ணனுக்கு கோபம் வந்ததில் என் ஒருத்தனுக்கு மட்டுமே அனுகூலம்.. நன்றி முருகா..!

உண்மைத்தமிழன் said...

[[[வெண்பூ said...

//தற்போது ஒபாமாவின் விருந்தினராகச் சென்றிருக்கும், அந்த குண்டு பையன் எதிர்த்திருக்கலாம் என்று கே.ஜி.பி.யின் அறிக்கையும் கூறுகிறது. “கொஞ்சூண்டு தொப்பை வைச்சிருக்கிற கேபிளுக்கு விருது..? அவரைவிட நிறைய தொப்பையோட இருக்குற எனக்கு விருதில்லையா..?” என்று அவர் ஆதியைப் போட்டு பிறாண்டியிருப்பார்.//

கால‌ங்காத்தால‌ இதைப் ப‌டிச்சிட்டு க‌ண்ணுல‌ த‌ண்ணி வ‌ர‌ சிரிச்சிட்டு இருக்கேன் :))))))))

ஆனாலும் ப‌திவு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப‌ பெருசு :)]]]

யெப்பா வெண்பூ.. உன் நண்பர் ஆதிக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா..? ஏன் திடீர்ன்னு இப்படி ஒண்ணுமில்லாத பிரச்சினைக்கு டென்ஷனாகுறாரு..?

உண்மைத்தமிழன் said...

[[[வெண்பூ said...

அவ்வ்வ். இப்ப‌த்தான் ம‌த்த‌ பின்னூட்ட‌ம் எல்லாம் ப‌டிச்சேன்... இது ர‌த்த‌ பூமி போல‌.. நான் அப்பீட்டு ஆகிக்குறேன்.]]]

ஐயா சாமி.. ஆபத்து காலத்துல ஓடாதப்பா.. கொஞ்சம் கை கொடு..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled beers said...

சார்! மெய்யாலுமே 50 பக்கத்துக்கு எழுதறீங்க! உங்களை மணிரத்னத்துகிட்டேதான் விடணும்.]]]

நான் ரெடி.. சேர்த்து விடுறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[Sanjai Gandhi said...

//“நான் வரலை.. ஆமா.. இப்படி கூட்டம் போட்டு பேசி என்னத்த சாதிக்கப் போறீங்க..?” என்றான்.//

அண்ணா, உங்க மேல எவ்ளோ பாசமும் மரியாதையும் வச்சிருக்கேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். உங்ககிட்ட எவ்ளோ சண்டை போட்டாலும் மத்தவங்ககிட்ட பேசற மாதிரி எல்லாம் வார்த்தை விட்டதே இல்லை. ஏன்ண்ணே இப்படி? மனசாட்சியோட சொல்லுங்க. நான் இப்படிக் கேட்டேனா?

( 2 நாள் முன்னாடி ப்ளசில் எழுதி இருந்தேன். உங்களிடம் அப்படிக் கேட்கவில்லை )

“என்னையும் மேடையேத்தி பாராட்டப் போறதா கதிர் சொல்றாரு. போகாம எப்படி இருக்குறது..?” என்றேன். “என்னது பாராட்டா..? எதுக்கு..?” என்றான் அண்ணன். “பிளாக்ல ரொம்ப நாளா எழுதிட்டிருக்கேன்ல.. அதுக்காக..” என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். “அப்போ நானெல்லாம் பதிவர் இல்லையாமா? நான் உங்களைவிட சீனியர் தெரியும்ல்ல..! அதென்ன கணக்குல கூப்பிட்டு பாராட்டுறாங்களாம்..?” என்றார் சஞ்சூ.. “தெரியலடா.. கூப்பிட்டாங்க போறேன்.. அவ்ளோதான்..” என்றேன். “சரி.. சரி.. போயிட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான்.//

இதிலும் பாதி உண்மை இல்லை. சீனியர் பதிவர்களுக்கு விருது தராங்களாம் என்று சொன்னிங்க. நான் எல்லாம் 2006ல் இருந்து எழுதறேன், என்னை எல்லாம் மதிக்கவே மாட்டேன்றாங்கப்பா என்றேன். ஆமாண்டா, நீ எனக்கே சீனியர் ஆச்சே என்றீர்கள். இதெல்லாம் சிரித்துக் கொண்டே தமாஷாகத் தான் பேசிக் கொண்டிருந்தோம்.

எதுக்கு தேவை இல்லாத வார்த்தைகள் எல்லாம்? எனக்கு இந்த கன்றாவிகளில் எல்லாம் ஆர்வமும் இல்லை. மரியாதையும் இல்லை.. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் ஆர்வம் சுத்தமா கிடையாது.. ஆள விடுங்க..

அதே நாளில் கோவையில் நடந்த ட்விட்டர் சந்திப்பில் கூட, எனக்கு ஆர்வம் இல்லை, வரலை என்று சொல்லி இருந்தேன். அதனால இந்த முதுகு சொரிதல்,புண்ணாக்கு வியாபாரத்துக்கு எல்லாம் தொழிலதிபர் விருது குடுக்கிற அரசியல் இதுல எல்லாம் என்னைக் கோர்த்து விடாதிங்க..]]]

ஓகே.. சஞ்சூ.. தப்பா இருந்தா மன்னிச்சுக்க.. ஒண்ணும் சொல்ல மாட்டியேன்னு நானா நினைச்சுத்தான் முன்கூட்டியே சொல்லாம போட்டுட்டேன். அது என் தப்புதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Santhose said...

I think the food expenses were sponsored by Dhamodar Chandru only.]]]

நல்ல விஷயம்தானே.. நன்றிகள் ஐயாவுக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Sanjai Gandhi said...

//நான் காரில் ஏறி கிளம்பிய அந்தத் தருணத்தில்தான் தலைவர் தாமோதர் சந்துரு, சாப்பிட அமர்ந்தார். அதுவரையிலும் அத்தனை குழுக்களின் அருகிலும் வந்து “சாப்பிட்டீங்களா..? சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு கடைசி பந்தியில் அமரும் அளவுக்கு //

நல்லவேளை.. இது ஜாக்கி ப்ளாக் இல்லை.]]]

இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே..?

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...
யுடான்ஸ், ஈரோடு சங்கமம் ஒரே நாளில் நடந்ததற்கான காரணம் அமெரிக்காவுல எனக்கேத் தெரியுதே. உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு. அந்த லட்சணத்துல இருக்கு உங்க "Communication Gap".]]]

உண்மைதான்.. கம்யூனிகேஷன் கேப் மட்டுமில்லை.. ஜெனரேஷன் கேப்பும் கூடத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[சந்தோஷ் = Santhosh said...

//Santhose said...

I think the food expenses were sponsored by Dhamodar Chandru only//

இது நான் இல்லைங்க சாமியோவ்..]]]

இது வேறய்யா.. அதுனால என்ன விடுங்க.. நோ பிராப்ளம்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

டீடெயிலிங்ல உங்களை அடிச்சிக்க முடியாது. ஆனாலும் இவ்வளவு டீடெயில் தேவையா..?? புரியலண்ணே.. சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமே.

கதிர் + டீமுக்கு வாழ்த்துகள்.]]]

50 பக்கம் எழுதுறேன்னு சொல்லிட்டேன். சரி 25 பக்கமாவது எழுதிரலாம்னு ஒரு மூட்ல எழுதிட்டேன். வந்து குவியுது பாருங்க பாச மழை..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. புத்தாண்டு வாழ்த்துகள்.]]]

புரிந்து கொண்டேன். புத்தாண்டு வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...

//சமூக ஆர்வலர், கவிஞர் மகேந்திரனின் சேவைதான் மகத்தானது. //

அவருக்குத் தனி மரியாதை செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது. பெரிதும் புகழப்பட வேண்டிய இளைஞர். வாழ்க அவர் நல்ல மனமும் தொண்டும்.]]]

உண்மைதான் ஐயா.. இந்த வயதில், இந்தச் சேவையில் இறங்க உண்மையாகவே தியாக மனப்பான்மை வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் அபிஅப்பா..

உங்களுடைய பி்ன்னூட்டங்கள் அடுத்தவர்களுடன் நேரடியாக சண்டை மூட்டிவிடுவதை போலவே இருப்பதால் நீக்கப்பட்டுவிட்டதை அறிவீராக..!

நீங்க திருந்தவே மாட்டீங்க..!

a said...

என்ன யாரையும் காணும்????

ஜோசப் பால்ராஜ் said...

Comedy is not ur area Mr. u. Tha.

Better luck next time or else follow ur book posts ..

In short time span I have learned a lot from this blog world. Even if Mother Tresa opens a blog, she will get negative votes.

As you mentioned in this post, in your office are they really asking you to do any work? I don't think so.
Any how that's your own issu, I dont want. To poke my nose in that. But pls convey my regards to your team.

அது சரி(18185106603874041862) said...

வழக்கத்தை விட நீளமான பதிவுன்னாலும் ரொம்ப இண்ட்ரஸ்டிங் நேரேஷன். கல்யாணத்துல கலந்துக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வெல்டன் அண்ணா.

அது சரி(18185106603874041862) said...

வழக்கத்தை விட நீளமான பதிவுன்னாலும் ரொம்ப இண்ட்ரஸ்டிங் நேரேஷன். கல்யாணத்துல கலந்துக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வெல்டன் அண்ணா.

Unknown said...

அப்பன் முருகன் வெப்பனத் திருப்பி உட்டுட்டானே நைனா! அவ்வ்வ்வ்வ்

Unknown said...

//“உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி.//

இந்த ரணகளத்துலயும் உனக்குக் கிளுகிளுப்பு கேக்குதா நைனா!

சுரேகா.. said...

இந்த புக்கு.... வரும் புத்தகக் கண்காட்சில கிடைக்குமாண்ணே?

ஆமா..நீங்க நாகேஷா, நம்பியாரா? :)))

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

உண்மைத் தமிழனுக்கு மதுரைத்தமிழன் எழுதும் பின்னூட்டம்

நான் பதிவுலகில் படித்த மிகப் பெரிய பதிவு உங்களுடையதுதான் பதிவு முழுவதையும் ஆரம்பத்தில் இருந்து பின்னுட்டம் வரை படித்த எனக்கு நீங்கள் நிச்சயம் "அவார்டு" தர வேண்டும். எப்போது தரப் போகிறீர்கள்.

IlayaDhasan said...

//சகுனி வேலையில்லை.. நாரதர் வேலை.. ச்சும்மா போரடிக்காமல் இருக்கத்தான்..//
நாராயணா ..நாராயணா ...எங்க காணோம்?

IlayaDhasan said...

இந்த பதிவோட சிறப்பே , ரொம்ப நீளமா இருந்தாலும் ஒரே பதிவா போட்டது தான்.. பார்ட் பார்ட் ஆ போட்டிருந்தா , இந்த எபக்ட்( காமெடி ) நிச்சயம்
வந்துர்க்காது ...நீர்த்துப் போயிருக்கும் ....இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ராஜரத்தினம் said...

//இதைவிட காமெடியான கமெண்ட் வேற எதுவுமே இல்லை.. அண்ணே நீங்களுமா..? நீலக்கலர் சட்டையெல்லாம் நான்தாண்ணே..!//

நீங்க தந்த ஒரு லிங்க்கை போய் பார்க்கிற வரைக்கும் சத்தியமா அந்த நீலகலர் சட்டை நீங்கதான் அப்டினு என்னால கண்டுபிடிக்க முடியல! உங்க profile உருவத்திற்கும் இதுக்கும் 1000 வித்தியாசங்கள் கண்டுபிடிக்காலாம் போல! ஏன் இப்படி!

RAVI said...

யப்பா.....
இன்னும் வளர....
புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

காவேரிகணேஷ் said...

இந்த 2011 வருடத்தின் மிக மட்டமான பதிவு, இந்த பதிவு தான்...

Bala said...

உங்க பதிவுகளை சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே நீளமான பதிவுகள்தான். சங்கமத்திற்கு போய்யிட்டு வந்ததை நல்ல விளக்கமா கொடுத்திருக்கீங்க. நிகழ்ச்சியில கலந்துக்க முடியலனாலும் உங்க பதிவு அந்த குறையை கொஞ்சம் போக்கிடுச்சு. நன்றிகள் பல.

Bala said...

உங்க புரஃபைல் போட்டோவிற்கும் சங்கமத்தில் எடுத்த போட்டோவிற்கும் ஆறு வித்தியாசத்திற்கு மேல இருக்கும்போல..... :)

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

ரவி said...

நல்ல நேரம் சதீசு அவர்களை விழா எடுத்து பாராட்டாத கதிரை கண்டிக்கிறேன் கி கி.

அண்ணே, தின்ன இட்லி கூட மறந்துருச்சு. மறதி ரொம்ப அதிகமாயிருச்சோ ? அவ்வ்வ்...

மக்கள் கொஞ்சம் ஓவரா காண்டாகிட்டாங்க போலிருக்கு...:)))

Philosophy Prabhakaran said...

// தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! //

இதே வரிகள் உங்களுக்கும் பொருந்தும் அண்ணே...

Philosophy Prabhakaran said...

// வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! //

அண்ணே... வலைச்சரத்தில் இப்பொழுதெல்லாம் புதிய பதிவர்களுக்கு அதிக வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவதாக கேள்விப்பட்டேன்... உங்களைப்போன்ற சீனியர்கள் இதற்கெல்லாம் வருத்தப்படலாமா...

Philosophy Prabhakaran said...

// வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. //

செம காமெடி...

Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...

ச்சே... கால்ல எவ்வளவு தூசு...

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

என்ன யாரையும் காணும்????]]]

ஏம்ப்பா.. இருக்குறவங்களே பத்தலையா..? இன்னமும் அடி வாங்கணும்னு ஆசையா..? நல்ல மனசுய்யா உமக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோசப் பால்ராஜ் said...
Comedy is not ur area Mr. u. Tha.
Better luck next time or else follow ur book posts. In short time span I have learned a lot from this blog world. Even if Mother Tresa opens a blog, she will get negative votes.]]]

நன்றி ஜோஸப்பு..! மக்கள்ஸ் காமெடில இவ்ளோ வறட்சியாவா இருக்காங்கன்னு யோசிப்பா இருக்கு..? இல்லாட்டி.. எழுதினது நானுன்றதால இத்தனை எதிர்ப்பா..? ஒண்ணும் புரியலை..!

[[[As you mentioned in this post, in your office are they really asking you to do any work? I don't think so. Any how that's your own issu, I dont want. To poke my nose in that. But pls convey my regards to your team.]]]

2 நாள் இரவில் தட்டச்சு செய்து தயாரித்தது. வீட்டில்தான்.. அலுவலக வேலை வேறு..! அதிலும், இதிலும் குழப்பம் வராது..!

உண்மைத்தமிழன் said...

[[[அது சரி(18185106603874041862) said...

வழக்கத்தைவிட நீளமான பதிவுன்னாலும் ரொம்ப இண்ட்ரஸ்டிங் நேரேஷன். கல்யாணத்துல கலந்துக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வெல்டன் அண்ணா.]]]

அப்பாடா.. ஒருத்தர் சிக்கிட்டாரு துணைக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Vijaya Gopal said...

அப்பன் முருகன் வெப்பனத் திருப்பி உட்டுட்டானே நைனா! அவ்வ்வ்வ்வ்..]]]

வருஷக் கடைசியும் அதுவுமா புரட்டியெடுத்திட்டான்..!

Unknown said...

SSஸ்ஸ்ஸ்...அப்பா.. கண்ணைக் கட்டுது. இவ்வளவு அரசியல் இதுல இருக்கற மாதிரி தெரியல.

உண்மைத்தமிழன் said...

[[[Vijaya Gopal said...

//“உங்களுக்காக பொண்ணு பார்க்குறேன் சித்தப்பூ..” என்றார் விஜி.//

இந்த ரணகளத்துலயும் உனக்குக் கிளுகிளுப்பு கேக்குதா நைனா!]]]

இதுலயாவது கருணை காட்டுங்கய்யா..!

உண்மைத்தமிழன் said...

[[[சுரேகா.. said...

இந்த புக்கு.... வரும் புத்தகக் கண்காட்சில கிடைக்குமாண்ணே?]]]

இதென்ன கேள்வி..? நீங்களே பதிப்பாளர்ன்னா உடனே கொண்டாந்திரலாம்..!

[[[ஆமா..நீங்க நாகேஷா, நம்பியாரா? :)))]]]

நாகேஷ்ன்னு நினைச்சுத்தான் போட்டேன். கடைசீல நம்பியாரா மாத்திட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Avargal Unmaigal said...

உண்மைத் தமிழனுக்கு மதுரைத் தமிழன் எழுதும் பின்னூட்டம்.

நான் பதிவுலகில் படித்த மிகப் பெரிய பதிவு உங்களுடையதுதான். பதிவு முழுவதையும் ஆரம்பத்தில் இருந்து பின்னுட்டம்வரை படித்த எனக்கு நீங்கள் நிச்சயம் "அவார்டு" தர வேண்டும். எப்போது தரப் போகிறீர்கள்.]]]

நேரில் சந்திக்கும்போது ட்ரீட் மட்டும் தருகிறேன். அவார்டு கொடுத்தால் அதுவே பிரச்சினையாகிவிடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[IlayaDhasan said...

//சகுனி வேலையில்லை.. நாரதர் வேலை.. ச்சும்மா போரடிக்காமல் இருக்கத்தான்..//

நாராயணா.. நாராயணா... எங்க காணோம்?]]]

மறந்திட்டேன். அதுனாலதான் ஆப்படிச்சிட்டான் மாமன்..!

உண்மைத்தமிழன் said...

[[[IlayaDhasan said...

இந்த பதிவோட சிறப்பே, ரொம்ப நீளமா இருந்தாலும் ஒரே பதிவா போட்டதுதான். பார்ட் பார்ட் ஆ போட்டிருந்தா, இந்த எபக்ட்(காமெடி) நிச்சயம்
வந்துர்க்காது. நீர்த்துப் போயிருக்கும்.]]]

நன்றி இளையதாசன்.. இதனால்தான் நானும் ஒரே பதிவா போட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜரத்தினம் said...

//இதைவிட காமெடியான கமெண்ட் வேற எதுவுமே இல்லை.. அண்ணே நீங்களுமா..? நீலக்கலர் சட்டையெல்லாம் நான்தாண்ணே..!//

நீங்க தந்த ஒரு லிங்க்கை போய் பார்க்கிறவரைக்கும் சத்தியமா அந்த நீலகலர் சட்டை நீங்கதான் அப்டினு என்னால கண்டுபிடிக்க முடியல! உங்க profile உருவத்திற்கும் இதுக்கும் 1000 வித்தியாசங்கள் கண்டு பிடிக்காலாம் போல! ஏன் இப்படி!]]]

அதான் எனக்கே தெரியலை. எல்லாரும் இதைத்தான் சொல்றாங்க. அவ்ளோ வித்தியாசமாவா இருக்கேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...
யப்பா.....
இன்னும் வளர....
புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.]]]

நன்றிகள் ரவி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[காவேரிகணேஷ் said...

இந்த 2011 வருடத்தின் மிக மட்டமான பதிவு, இந்த பதிவுதான்...]]]

ஓகே.. கூல்மா.. ச்சும்மா காமெடிக்குத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[முகில் said...

உங்க பதிவுகளை சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே நீளமான பதிவுகள்தான். சங்கமத்திற்கு போயிட்டு வந்ததை நல்ல விளக்கமா கொடுத்திருக்கீங்க. நிகழ்ச்சியில கலந்துக்க முடியலனாலும் உங்க பதிவு அந்த குறையை கொஞ்சம் போக்கிடுச்சு. நன்றிகள் பல.]]]

வருக.. வருக முகில் ஸார்..! சங்கம விஷயத்தோட முடிச்சிருக்கலாம்ன்னு இப்பத்தான் பீல் பண்றேன்..! சரி.. ஓகே.. தங்களுடைய நன்றிகளுக்கு பதில் நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[முகில் said...

உங்க புரஃபைல் போட்டோவிற்கும் சங்கமத்தில் எடுத்த போட்டோவிற்கும் ஆறு வித்தியாசத்திற்கு மேல இருக்கும்போல..... :)]]]

நீங்களுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Senthazal Ravi said...

அண்ணே, தின்ன இட்லி கூட மறந்துருச்சு. மறதி ரொம்ப அதிகமாயிருச்சோ? அவ்வ்வ்...
மக்கள் கொஞ்சம் ஓவரா காண்டாகிட்டாங்க போலிருக்கு...:)))]]]

ரொம்ப இல்லை.. ரொம்பவே காண்டாயிட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// தலைவர் சந்துரு நல்ல மனுஷனா தெரியறாரு.. அப்புறம் ஏன் இப்படி வலையுலகத்து வந்து மாட்டினாருன்னு தெரியலை..! //

இதே வரிகள் உங்களுக்கும் பொருந்தும் அண்ணே...]]]

ம்க்கும்.. இது ஒண்ணுதான் என்னை பத்திச் சொல்லலைன்னு நினைச்சிருந்தேன். அதையும் நீ சொல்லிட்ட.. நான் நல்லாயிருந்திருந்தா இங்க ஏன் வந்து மாட்டிருக்கேன்..!?

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! //

அண்ணே... வலைச்சரத்தில் இப்பொழுதெல்லாம் புதிய பதிவர்களுக்கு அதிக வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவதாக கேள்விப்பட்டேன். உங்களைப் போன்ற சீனியர்கள் இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?]]]

அப்படியா..? வலைச்சரத்துக்கு நானும் புதியவன்தானே..

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// வாழ்த்திப் பேசிய திரு.ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு கூட்டத்தினரை மிகவும் ஈர்க்கும்வகையில் இருந்தது. //

செம காமெடி...]]]

ஏன் நல்லாயில்லையா..? போங்கப்பா.. உங்களுக்கெல்லாம் சாருதான் லாயக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

//அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை.//

நீங்களுமா? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தைதான் வெளியிடுகிறாராம். அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான். ச்சே... கால்ல எவ்வளவு தூசு...]]]

போச்சு.. இது மட்டும் தலைவர் கண்ணுல பட்டுச்சு மவனே, நீ செத்த..!

உண்மைத்தமிழன் said...

மிஸ்டர் அபிஅப்பா..

உங்க கட்சியையும், கட்சித் தலைவரையும் பலமாகத் தாக்கி, அதுவும் இந்த வருடம் எழுதிய, காப்பி பேஸ்ட் செய்த பதிவுகளுக்குப் பின்புதான் உங்களுக்கு நான் காப்பி பேஸ்ட் பதிவராகத் தெரிகிறேன்.. உங்களுடைய அளவீடு உமது கட்சியின் சார்பாகவே இருப்பதால் நீங்கள் இதற்கு முன் எனக்களித்த பாராட்டுதல்களையும், இப்போது செய்யும் அர்ச்சனைகளையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறேன்..!

நன்றியோ நன்றி..!

யுவகிருஷ்ணா said...

ஹேப்பி நியூ இயர் அண்ணா!

வருடக் கடைசியில் நான் வாசித்த மிக நல்ல பதிவு இது!

Rajagopal.S.M said...

Happy new year..

உண்மைத்தமிழன் said...

[[[வெண் புரவி said...

SSஸ்ஸ்ஸ்...அப்பா.. கண்ணைக் கட்டுது. இவ்வளவு அரசியல் இதுல இருக்கற மாதிரி தெரியல.]]]

ஓகே.. நோ சீரியஸ். பீ டேக் காமெடி..!

உண்மைத்தமிழன் said...

[[[யுவகிருஷ்ணா said...

ஹேப்பி நியூ இயர் அண்ணா! வருடக் கடைசியில் நான் வாசித்த மிக நல்ல பதிவு இது!]]]

முருகா..! வருஷக் கடைசியும் அதுவுமா சோதிக்காதீங்கப்பா..!

இப்பத்தான் ஒரு பிரச்சினை முடிஞ்சு நிம்மதியா இருக்கேன். ஏற்கெனவே டெர்ம்ஸ் சரியில்லாம இருக்கு. இதுல நீங்க வேற.. சொந்தப் பேர்ல வந்துட்டுப் போங்களேன்..! லின்க்கை தேடிப் பிடிச்சு இணைப்பு கொடுக்குற நேரத்துல இதைச் செஞ்சிருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால்.S.M said...

Happy new year..]]]

புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி..!

MANO நாஞ்சில் மனோ said...

அடேங்கப்பா இம்புட்டு நீ.....ளமா அவ்வ்வ்வ்....அண்ணே அசத்தல் அண்ணே...!!!

Unknown said...

Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...

ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே

"நுணலும் தன் வாயால் கெடும் "

ராஜ நடராஜன் said...

உண்மை தமிழன் அண்ணே!நீண்ட பதிவை வழக்கம் போலவே படித்து முடித்தேன்.கலந்து கொள்ள முடியாத குறையை எழுத்தாவது நிறைவேற்றுகிறதே என்ற எண்ணமும்,இயல்பான மொக்கை நகைச்சுவை கலப்பு என்று மட்டுமே படித்து முடித்தேன்.பின்னூட்டங்கள் தனிப்பட்ட பதிவர்களின் கோபம்,ஈகோ,வருத்தம் கலந்து தென்படுவது வருத்தமேயளிக்கிறது.

நீண்ட வாசிப்பும்,எழுத்தும் மனதை விசாலப்படுத்த வேண்டும்.நாம இன்னும் வளரனுமோ:)

cheena (சீனா) said...

அன்பின் உ.த சரவணன்

இவ்வாண்டின் இறுதி நாளன்று 3மணீ நேரம் பொறுமையாக பதிவும் மறுமொழிகளும் படித்தேன். நகைச்சுவைக்காகத்தான் என எழுதினாலூம் சிலர் மனம் வருந்தியது மறுமொழிகளில் இருந்து தெரிகிறது. ம்ம்ம்ம்ம் - வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க பிப்ரவர் இரண்டாம் வாரம் வாய்ப்பளீக்கிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுகளை பார்த்தா இந்தப் பதிவை அடிக்கடி படிக்க வேண்டி வரும் போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...

ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே

"நுணலும் தன் வாயால் கெடும் "//////


அதெல்லாம் கெட்டு பல நாளாச்சு........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உண்மைத்தமிழன் said...
[[[Philosophy Prabhakaran said...

//வலைச்சரத்தில் எனக்குப் பின்பு எழுத வந்தவர்களெல்லாம் விருந்தினராகிவிட்டார்கள் என்னைத் தவிர..! //

அண்ணே... வலைச்சரத்தில் இப்பொழுதெல்லாம் புதிய பதிவர்களுக்கு அதிக வாய்ப்பளித்து ஊக்கப்படுத்துவதாக கேள்விப்பட்டேன். உங்களைப் போன்ற சீனியர்கள் இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?]]]

அப்படியா..? வலைச்சரத்துக்கு நானும் புதியவன்தானே..////

எப்படியோ சான்சு வாங்கீட்டீங்கண்ணே, ஆனா மறந்துடாம எங்களையெல்லாம் அறிமுகப்படுத்திடுங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும் வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////


அதை வழிமொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))/////

படிச்சி பரிட்சையா எழுதப் போறே? நேரா ஸ்க்ரோல் பண்ணி கீழ போவியா.... அத விட்டுப்புட்டு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?////

காக்காவுக்கு ஆய் வந்தா போகத்தான் செய்யும்..... .உன்கிட்டயா வந்து கேட்டுக்கிட்டு இருக்கும்? பேசாம பக்கத்துலேயே நின்னு தொடச்சி விடு, ஏதாவது போட்டுக்கொடுப்பாங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))////

நான் ரெண்டு மணிநேரத்துல படிச்சிட்டேன், எனக்கு வெறும் சோப்பாவது கொடுங்க...!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

அடேங்கப்பா இம்புட்டு நீ.....ளமா அவ்வ்வ்வ்.... அண்ணே அசத்தல் அண்ணே...!!!]]]

ஓகே.. பரப்புரை செய்யுங்கப்பா.. சவுண்ட் பத்தலையே..?

உண்மைத்தமிழன் said...

[[[நா.மணிவண்ணன் said...
Philosophy Prabhakaran said...

// அவருடைய தளத்தில்கூட நான் இது பற்றி ஒரு முறை அவருக்குப் பின்னூட்டம் போட்டும், அதனை அவர் வெளியிடவில்லை. //

நீங்களுமா...? இப்பொழுதெல்லாம் மனிதர் பத்தில் ஒரு பின்னூட்டத்தை தான் வெளியிடுகிறாராம்... அதான் அவனவன் தனித்தனி ப்ளாக் ஆரம்பிச்சு விமர்சனம் செய்றான்...
ச்சே... கால்ல எவ்வளவு தூசு...///

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே
"நுணலும் தன் வாயால் கெடும்"]]]

என்னை நானே கெடுத்துக்கிட்டேனா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
உண்மை தமிழன் அண்ணே! நீண்ட பதிவை வழக்கம் போலவே படித்து முடித்தேன். கலந்து கொள்ள முடியாத குறையை எழுத்தாவது நிறைவேற்றுகிறதே என்ற எண்ணமும், இயல்பான மொக்கை நகைச்சுவை கலப்பு என்று மட்டுமே படித்து முடித்தேன். பின்னூட்டங்கள் தனிப்பட்ட பதிவர்களின் கோபம், ஈகோ, வருத்தம் கலந்து தென்படுவது வருத்தமேயளிக்கிறது. நீண்ட வாசிப்பும், எழுத்தும் மனதை விசாலப்படுத்த வேண்டும். நாம இன்னும் வளரனுமோ:)]]]

ஆமாம்.. எது பால்.. எது தண்ணீர் என்பதைப் பிரித்துப் பார்க்கும் மனமும் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[cheena (சீனா) said...
அன்பின் உ.த சரவணன்
இவ்வாண்டின் இறுதி நாளன்று 3 மணீ நேரம் பொறுமையாக பதிவும் மறுமொழிகளும் படித்தேன். நகைச்சுவைக்காகத்தான் என எழுதினாலூம் சிலர் மனம் வருந்தியது மறுமொழிகளில் இருந்து தெரிகிறது. ம்ம்ம்ம்ம் -]]]

எனக்கும் வருத்தம்தான் ஐயா..! நான் ஒன்று நினைக்க அது ஒன்றாகிவிட்டது..!

[[[வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க பிப்ரவர் இரண்டாம் வாரம் வாய்ப்பளீக்கிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா.]]]

அழைப்புக்கு மிக்க நன்றிகள் ஐயா.. நிச்சயமாக எனது பங்களிப்பை வலைச்சரத்தில் அளிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுகளை பார்த்தா இந்தப் பதிவை அடிக்கடி படிக்க வேண்டி வரும் போல இருக்கே?]]]

ம்.. வரலாம்.. வராமலும் போகலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உண்மைத்தமிழன் அண்ணே
"நுணலும் தன் வாயால் கெடும் "//////

அதெல்லாம் கெட்டு பல நாளாச்சு........!]]]]

ஹி.. ஹி.. எனக்கு எப்பவுமே லேட்டாத்தான் புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ சான்சு வாங்கீட்டீங்கண்ணே, ஆனா மறந்துடாம எங்களையெல்லாம் அறிமுகப்படுத்திடுங்க.!]]]

கண்டிப்பா.. செஞ்சுட்டா போச்சு. பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன். மொதல்ல கொஞ்சம் கமிஷனை அதுல போடுங்க. அப்புறமா இது..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும்வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////

அதை வழி மொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடு]]]

போச்சுடா. இப்போ நான் எந்த குரூப்ல சேர்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
அனைத்து நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்து பதிவிட்டுள்ளீர்கள் சார். உங்கள் ரசிகர்கள் இருக்கும்வரை நீங்கதான் ஒரே யூத்.

இப்படிக்கு,
உண்மைத்தமிழன் க்ரூப்.
க்ரேட்டர் சென்னை.//////

அதை வழி மொழிகிறேன்.
நாய்நக்ஸ் குரூப்.
தமிழ்நாடு]]]

போச்சுடா. இப்போ நான் எந்த குரூப்ல சேர்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாலு மணி நேரம் ஆச்சு. தானா புயல் கூட கரையை கடந்திடுச்சு. இந்த பதிவை படிச்சு முடிக்க முடியலியே :))/////

படிச்சி பரிட்சையா எழுதப் போறே? நேரா ஸ்க்ரோல் பண்ணி கீழ போவியா.... அத விட்டுப்புட்டு......]]]

ஹா.. ஹா.. நக்கல் ஓவரா வருது தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நியாயப்படி உனக்கு மெரீனால செல வைக்கணும்ணே!//

காக்கா ஆய் போயிடாது?////

காக்காவுக்கு ஆய் வந்தா போகத்தான் செய்யும்..... .உன்கிட்டயா வந்து கேட்டுக்கிட்டு இருக்கும்? பேசாம பக்கத்துலேயே நின்னு தொடச்சி விடு, ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க.!]]]

சிலையானப்புறம் தர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் படித்து முடிப்பவர்களுக்கு ஆலயமணி படத்தில் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா இலவசம் :))////

நான் ரெண்டு மணி நேரத்துல படிச்சிட்டேன், எனக்கு வெறும் சோப்பாவது கொடுங்க...!]]]

சோப்பு டப்பாதான் கிடைக்கும். சோப்பு வேணும்னா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட போய்க் கேளுங்க..!

beaviscartmanstewie said...

thats a long & wonderful article how do you write in tamil

உண்மைத்தமிழன் said...

[[[tweety said...

thats a long & wonderful article how do you write in tamil]]]

மிக்க நன்றி..!